கடைசி நேரத்தில் ப்ளான் சேஞ்ச்..டெல்லிக்கு போகாத ஸ்டாலின்! இந்தியா கூட்டணி கூட்டத்தில் டிஆர் பாலு.!
சென்னை: மக்களவைத் தேர்தல் இறுதி கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கும் நிலையில் டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த நிலையில் இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் எனவும் அவருக்கு பதிலாக திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி ஆர் பாலு பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலையொட்டி வீசி வந்த பிரச்சார புயல் ஓய்ந்திருக்கிறது. நாளை ஏழாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வாக்குப்பதிவு நடைபெற்ற உடனேயே பல்வேறு நிறுவனங்கள் எடுத்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகும். அதிலிருந்து இந்தியாவை அடுத்து ஆளப்போகும் கட்சி எது என்பதை ஓரளவுக்கு யூகித்து விட முடியும்.
இந்தியாவைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலில் இருமுனை போட்டியே நிலவுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி இடையே தான் போட்டி நிலவுகிறது. பாஜகவை பொருத்தவரை 400 தொகுதிகளில் வென்று பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க போகிறார் என உறுதியாக சொல்லி வருகின்றனர்.
அதே நேரத்தில் பாஜக எதிர்ப்பாலை காரணமாக இந்தியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது, இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் 270க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் நிச்சயம் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என இந்தியா கட்சி கூட்டணி தலைவர்கள் சொல்லி வருகின்றனர்.
இதற்கிடையே வாக்கு எண்ணிக்கை, தேர்தலுக்குப் பிந்தைய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு இந்தியா கூட்டணி அழைப்பு விடுத்தது. ஒன்றாம் தேதியான நாளை காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் வீட்டில் இந்த கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ்,ஆம் ஆத்மி,சமாஜ்வாடி, கம்யூனிஸ்ட் கட்சிகள் கலந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டாம் தேதி திகார் சிறையில் சரணடைய இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது. கட்சித் தலைவர்களை பொறுத்தவரை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள், தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பீகார் முன்னாள் துணை முதலமைச்சரான தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என கூறப்பட்டது.
இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தான் பங்கேற்க மாட்டேன் தனது கட்சி சார்பில் பிரதிநிதி ஒருவர் பங்கேற்பார் என மம்தா பானர்ஜி கூறியிருந்தார். கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதலமைச்சர் நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்வார் என கூறப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் எனவும் அவருக்கு பதிலாக திமுக நாடாளுமன்ற குழு தலைவர் ஆன டிஆர் பாலு பங்கேற்பார் என தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. பயண திட்டம் திடீரென ரத்தானதற்கான காரணம் குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை.












Click it and Unblock the Notifications