அடுத்த 4 மாதங்களில்.. 100 கோடி கொரோனா டோஸ் வேக்சின் செலுத்த இலக்கு.. டாக்டர் என்கே ஆரோரா தகவல்
சென்னை: இந்தியாவில் இன்னும் 3-4 மாதங்களில் மேலும் 100 கோடி கொரோனா டோஸ் வேக்சின்கள் போடப்பட வாய்ப்பு உள்ளதாக தடுப்பூசி நிர்வாகத்திற்கான தேசிய நிபுணர் குழு தலைவர் டாக்டர் என்கே ஆரோரா தகவல் தெரிவித்துள்ளார்.
100 கோடி கொரோனா வேக்சின் டோஸ்களை செலுத்தி இந்தியா நேற்று சாதனை படைத்தது. இந்தியாவில் கொரோனா வேக்சின் விநியோகம் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி தொடங்கியது. அதிலும் கடைசி 10 கோடி டோஸ்களை வெறும் 13 நாட்களில் செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் இதனால் இனி வரும் நாட்களில் வேக்சினேஷன் இன்னும் வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டி
இந்த நிலையில்தான், இந்தியாவில் அடுத்த 100 கோடி கொரோனா டோஸ் வேக்சின்கள் இன்னும் 3-4 மாதங்களில் போடப்பட வாய்ப்பு உள்ளதாக தடுப்பூசி நிர்வாகத்திற்கான தேசிய நிபுணர் குழு தலைவர் டாக்டர் என்கே ஆரோரா தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், இந்தியாவில் பெரும்பாலான 18+ வயது கொண்டவர்களுக்கு இந்த வருட இறுதிக்குள் குறைந்தது ஒரு டோஸ் வேக்சினாவது போடப்பட்டுவிடும். அதன்பின் அடுத்த 6 வாரங்களுக்குள் இரண்டாவது டோஸ் வேக்சின் செலுத்தப்பட்டு விடும்.

இரண்டு டோஸ்
இந்தியாவில் 30 சதவிகிதம் பேர் முழுமையாக இரண்டு டோஸ் வேக்சின் போட்டுகொண்டுள்ளனர். நாம் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி 50 கோடி டோஸ் வேக்சின்களை செலுத்தினோம். அதன்பின் அக்டோபருக்குள் மொத்தமாக 100 கோடி டோஸ்களை செலுத்தி இருக்கிறோம். இது மிகப்பெரிய சாதனை. இப்போது இந்தியாவில் கொரோனா வேக்சின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் நாட்களில் வேக்சின் விநியோகத்தை அதிகரிக்க முடியும்.

4 மாதம்
இதனால் அதிகபட்சம் அடுத்த 4 மாதங்களில் 100 கோடி வேக்சின்களை செலுத்த வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் 18+ வயது கொண்டவர்களில் 80 சதவிகிதம் பேர் வரை ஒரு டோஸ் வேக்சின் வரை போட்டுள்ளனர். இதனால் கொரோனா பரவல் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மீதம் உள்ள 20 சதவிகிதம் பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் வேக்சினாவது போட வேண்டும்.

20 கோடி
அதாவது 18- 20 கோடி பேருக்கு இனி ஒரு கோடி டோஸ் வேக்சின் கொடுக்க வேண்டும். இதனால் இந்த வருட இறுதிக்குள் இந்தியாவில் 18+ வயது கொண்டவர்களில் 100 சதவிகிதம் பேருக்கு ஒரு டோஸ் வேக்சின் வரை போடும் வாய்ப்பு உள்ளது, என்று தடுப்பூசி நிர்வாகத்திற்கான தேசிய நிபுணர் குழு தலைவர் டாக்டர் என்கே ஆரோரா தகவல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications