Railway Return journey offer: ரயில் டிக்கெட்களுக்கு 20% ஆஃபர்.. அள்ளி தரும் ரயில்வே துறை! ஆனா ஒரு மேஜர் கண்டிஷன் இருக்கு
சென்னை: ரயில்வே துறையில் கடந்த சில ஆண்டுகளாகவே ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்து வருகிறது. அதன்படி ரயில்களில் பயணம் மேற்கொள்வோருக்கு அட்டகாசமான ஒரு சலுகையை ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சலுகையின் கீழ் நீங்கள் உங்கள் ரயில் டிக்கெட்களுக்கு அதிகபட்சம் 20% வரை ஆபர்களை (Railway Return journey offer) பெற முடியும். இந்த திட்டம் குறித்தும் இதில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாட்டில் ரயில்கள் தான் எப்போதும் பிரதான போக்குவரத்து முறையாக இருக்கிறது. குறிப்பாகப் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் ரயில்களில் பயணம் செய்யவே விரும்புவார்கள். இதற்கிடையே பண்டிகைக் கால கூட்ட நெரிசலைக் குறைக்கவும், டிக்கெட் முன்பதிவை எளிதாக்கவும் ரயில்வே அமைச்சகம் ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. "ரவுண்டு டிரிப் பேக்கேஜ்" எனப்படும் இந்த திட்டத்தின் கீழ் தள்ளுபடி விலையில் நாம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ரவுண்டு டிரிப் பேக்கேஜ்
இது குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பண்டிகைக் காலங்களில் ஏற்படும் அதிகக் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், ரயில் டிக்கெட் புக்கிங்கை எளிதாக்கவும், பயணிகளுக்குக் கூடுதல் வசதி ஏற்படுத்திக் கொடுக்கவும் சிறப்பு ரயில்கள் உட்பட அனைத்து ரயில்களும் இரு மார்க்கத்திலும் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்யவும் 'ரவுண்டு டிரிப் பேக்கேஜ்' என்ற ஒரு சோதனைத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டிருந்தது.
கண்டிஷன்கள்
இத்திட்டத்தின் கீழ், பயணிகள் டிக்கெட் புக்கிங் செய்யும்போதே ரிட்டன் டிக்கெட்டையும் ரயில்களில் புக் செய்தால் சலுகை வழங்கப்படும். உதாரணமாக நீங்கள் சென்னையில் இருந்து கோவை செல்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அந்த டிக்கெட்டை புக் செய்யும்போதே ரிட்டர்ன் டிக்கெட்டை சேர்த்து எடுத்தால் உங்களுக்குச் சலுகை கிடைக்கும். அதேநேரம் ஒரே நேரத்தில் ரிட்டர்ன் டிக்கெட்டையும் புக் செய்ய வேண்டும்.
மேலும், இரு மார்க்கத்திலும் பயணிகள் விவரம் உள்ளிட்டவை மேட்ச் ஆக வேண்டும். அதாவது நீங்களும் உங்கள் மனைவியும் கோவை சென்றால் திரும்ப வரும்போதும் நீங்கள் இருவருமே புக் செய்ய வேண்டும். ஒருவருக்கு மட்டும் ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்தாலும் இந்த சலுகை கிடைக்காது.
தேதிகள் என்ன
அக்டோபர் 13 முதல் அக்டோபர் 26 தேதிக்குள் நீங்கள் முதல் பயணத்தை மேற்கொண்டிருக்க வேண்டும். இதற்கான முன்பதிவு ஆகஸ்ட் 14ம் தேதி தொடங்குகிறது. மேலும், ரிட்டர்ன் பயணம் நவம்பர் 17 முதல் டிசம்பர் 1க்குள் இருக்க வேண்டும். இரு மார்க்கத்திலும் கன்பார்ம் டிக்கெட்களுக்கு மட்டுமே தள்ளுபடி வழங்கப்படும். அப்படி கன்பார்ம் ஆகும் டிக்கெட்களுக்கு ரிட்டர்ன் பயணத்தில் அடிப்படை கட்டணத்தில் 20% தள்ளுபடி வழங்கப்படும்.
இதில் வேறு சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இரு மார்க்கத்திலும் புறப்படும் இடம் மற்றும் சேரும் இடம் ஒரே ஸ்டேஷனாக இருக்க வேண்டும். மேலும், பயணிகள் விவரங்களும் முன்பே கூறப்பட்டது போல மேட்ச் ஆக வேண்டும். இது மட்டுமின்றி ஒரு வகுப்பில் இரு மார்க்கத்திலும் டிக்கெட் புக் செய்ய வேண்டும். அதாவது சென்னை டு கோவை நீங்கள் 3ம் வகுப்பு ஏசியில் புக் செய்தால் ரிட்டர்ன் பயணமும் அதே 3ம் வகுப்பு ஏசியில் இருக்க வேண்டும்.
பணம் திரும்பக் கிடைக்காது
மேலும், இத்திட்டத்தின் கீழ் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்களை கேன்சல் செய்தால் பணத்தைத் திரும்பப் பெற முடியாது என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.. சதாப்தி போல டிக்கெட் விலை மாறிக் கொண்டே இருக்கும் ரயில்களைத் தவிரச் சிறப்பு ரயில்கள் உட்பட (அனைத்து ரயில்களுக்கும் அனைத்து கிளாஸ்களுக்கும் இது பொருந்தும். அதேநேரம் ஒரு முறை டிக்கெட் புக் செய்தால் இதில் மாற்றங்கள் அனுமதிக்கப்படாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி இந்த சலுகையைப் பயன்படுத்தும்போது வேறு ஆஃபர்களை பயன்படுத்த முடியாது.












Click it and Unblock the Notifications