Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநர் ரவிக்கு மனதில் அப்துல் கலாம் என்ற நினைப்பு! அறிவுரை என்ற பெயரில் விஷமம்! -இனிகோ இருதயராஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆளுநர் ரவிக்கு மனதில் தாம் அப்துல் கலாம் என்ற நினைப்பு உள்ளதாக கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தலைவர் இனிகோ இருதயராஜ் விமர்சித்துள்ளார்.

மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் ஆளுநர், பஜனை மடங்கள், கோவில் விழாக்களில் பங்கேற்பது, மனதில் தன்னை ஒரு அப்துல் கலாம் என நினைத்துக் கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசி அறிவுரை வழங்குகிறோம் என்ற பெயரில் சனாதன விஷம கருத்துக்களை புகுத்துவது போன்ற வேலைகளில் ஈடுபடுவதாக விமர்சித்துள்ளார்.

Inigo Irudayaraj mla has criticized Governor Ravi thought of himself as Abdul Kalam

இது பற்றி இனிகோ இருதயராஜ் தனது முகநூல் பக்கத்தில் விடுத்துள்ள பதிவு வருமாறு;

தமிழக ஆளுநர் ரவி திருப்பி அனுப்பிய 10 சட்ட மசோதாக்கள் சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டன. இதை மறுபடியும் ஆளுநருக்கு திருப்பி அனுப்பும் பட்சத்தில் அவர் கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பான பிரச்சனையில், ஏற்கனவே உச்ச நீதிமன்றம் குட்டு வைத்த பிறகும் அடங்காத ஆளுநர் தனது ஆடு புலி ஆட்டத்தை தொடர்ந்து கொண்டு இருப்பதால் அதனை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக சட்டப்பேரவையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றது முதலே தனக்கான ஒரு அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை தமிழகமே நன்கு அறியும். மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசின் இந்துத்துவா சித்தாந்தங்களை அப்படியே தாங்கிப் பிடிக்கும் ஊழியராக இவர் செயல்படுவது பல தருணங்களில் அம்பலப்பட்டு இருக்கிறது. அதனால்தான் ஆரிய சிந்தனையில் ஊறிய அவர், திராவிட மாடல் அரசுக்கு எதிரான போக்கு கொண்டவராகவே இருந்து கொண்டு போக்கு காட்டிக்கொண்டிருக்கிறார்.

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் எந்த ஒரு மசோதாவிற்கும் ஆளுநர் ஒப்புதல் வழங்குவதில்லை. பட்ஜெட் கூட்டத் தொடருக்குப்பிறகு அனுப்பி வைக்கப்பட்ட பண மசோதாவை தவிர எஞ்சிய அனைத்து மசோதாக்களையும் ஏதோ தனக்கு தனிப்பட்ட முறையில் வந்த தபால் கடிதங்கள் போல் நினைத்து அனைத்தையும் தனது மேஜை மீது பத்தோடு பதினொன்றாக போட்டு வைத்தார் ஆளுநர் ஆர்.என் ரவி.

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம், பல்கலைக்கழகங்கள் சட்ட திருத்த மசோதா, உயர் அதிகாரிகள் நியமன மசோதா என அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்களாக இருந்த போதிலும் அவற்றைப் படித்துக் கூட பார்க்காமல் கிடப்பில் போட்டு ஏதோ சாதித்து விட்டது போல் தனக்குத்தானே மகிழ்ச்சியில் மிதந்தார் ஆளுநர். அது மட்டுமின்றி இது குறித்து கேள்வி கேட்டவர்களுக்கு எல்லாம், ஒரு மசோதா கிடப்பில் கிடக்கிறது என்றால் அது செத்துப் போனதற்கு சமம் என்று பொருள் விளக்கம் எல்லாம் கொடுத்தார் இந்த புத்திசாலி ஆளுநர்.

திராவிட மாடல் அரசை திண்டாட வைத்து விட்டதாய் நினைத்து உள்ளுக்குள் அப்படி ஒரு ஆனந்தம் அவருக்கு. அவரது இந்த பொறுப்பற்ற தனத்திற்கு எதிரான வழக்கில் தான் ஆர். என். ரவி மீது உச்சநீதிமன்றம் கடுமையான சவுக்கடிகளை கொடுத்தது. மக்கள் சபையில் நிறைவேற்றப்படும் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதை தவிர ஆளுநருக்கு வேறு என்ன வேலை? மாநில அரசு வழக்கு போட்டு தான் மசோதாக்களுக்கான ஒப்புதலை பெற வேண்டுமா? இதுபோன்ற ஆளுநர்களுக்கு மனசாட்சி கிடையாதா? என்றெல்லாம் மிக கடுமையாக கேள்வி கணைகளை எடுத்து வீசியது.

அதன் பிறகும் அடங்காத அவர், அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் மீண்டும் அரசுக்கு திருப்பி அனுப்பினார். நீதிமன்றம் குட்டு வைத்த பிறகாவது தனது பொறுப்பை உணர்வார் என எதிர்பார்த்த தமிழக அரசுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. ஆளுநர் கிடப்பில் போட்டிருந்த அனைத்து மசோதாக்களும் அரசின் கல்வித் திட்டம், கல்வி வளர்ச்சி மற்றும் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டவை என்பதால் தமிழக அரசு, சட்டப்பேரவையில் இன்று சிறப்பு கூட்டத்தை கூட்டியது. இதில் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை மீண்டும் தாக்கல் செய்வது தொடர்பான தனி தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார்.

ஜனநாயகத்திற்காகவும், அரசியல் சட்டத்தை பாதுகாப்பதற்காகவும் இந்த சிறப்பு கூட்டத்தை கூட்டி இருப்பதாக அப்போது அவர் குறிப்பிட்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினார். மத்திய அரசின் இந்த போக்கு நீடித்தால் ஜனநாயகம் மோசமான நிலைக்கு தள்ளப்படும் என்று எச்சரித்தார்.சில இடையூறுகள் காரணமாகத்தான் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் முதல்வர் அப்போது குறிப்பிட்டார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை அரசின் மசோதாக்களை ஆளுநர் நிறைவேற்றி தர வேண்டும் என்பது அரசியல் அமைப்புச் சட்டம் வகுத்திருக்கும் நியதி. ஆனால் தனிப்பட்ட தனது விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பி இருக்கிறார் என்றும் வேதனையை வெளிப்படுத்தினார் முதல்வர்.

இதன் மூலம் தமிழகத்தையும், மக்களையும் ஆளுநர் அவமதித்துவிட்டார்; தனது உடல் நலனை விட நாட்டு மக்கள் நலனே முக்கியம்; தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதா குறித்து ஆளுநருக்கு சந்தேகம் இருந்தால் அது குறித்து விளக்கம் கேட்கலாமே என்றும் குறிப்பிட்ட முதல்வர், ஆளுநரின் பல சந்தேகங்களுக்கு ஏற்கனவே உரிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

அரசியல் அமைப்புச் சட்ட விதிமுறைகளின் படி ஒரு மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்; இல்லை என்றால் நிராகரிக்க வேண்டும்; அதில் ஏதேனும் சட்ட சிக்கல் இருக்கிறது என்றால் மட்டுமே பரிசீலனைக்காக அதனை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கலாம்; ஆனால் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் ஆளுநர், பொறுப்பு மிக்க இந்த பணியை செய்யாமல் கிடப்பில் போட்டுவிட்டு பஜனை மடங்கள், கோவில் விழாக்களில் பங்கேற்பது, மனதில் தன்னை ஒரு அப்துல் கலாம் என நினைத்துக் கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசி அறிவுரை வழங்குகிறோம் என்ற பெயரில் சனாதன விஷம கருத்துக்களை புகுத்துவது போன்ற ஒரு ஆளுநருக்கு சம்பந்தம் இல்லாத செயல்களை மட்டும் கனகச்சிதமாக செய்து கொண்டிருக்கிறார் ரவி.

சாமியார் யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளுநராக இருந்தால் அவர் இது போன்ற காரியங்களை செய்வாரா? அல்லது பாஜக ஆளும் பிற மாநிலங்களில் ஆளுநராக இருந்தால் இது போன்ற விளையாட்டுகளை விளையாடுவாரா? ஆக அவரது செயல்பாடுகளில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது மிக எளிது. ஆர்.ன் ரவி, பேருக்கு வேண்டுமானால் தமிழக ஆளுநராக இருக்கலாம்; ஆனால் அவர் ஒன்றிய பாஜக அரசின் தொண்டர் படைகளில் ஒருவராக இருந்து கொண்டு தனக்கிடப்பட்ட பணிகளை அச்சு பிசகாமல் செய்து முடித்து பாஜகவினரின் பாராட்டுகளை பெற்றுக் கொண்டிருக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சபையை விட தனது பதவியே பெரிது, தனது ஆளுமைக்கே அதிகாரம் உண்டு என்ற சிந்தனை இவருக்கு எப்படி வந்தது?

இந்த அரைவேக்காட்டுத்தனத்தை இவருக்கு யார் கற்றுக் கொடுத்தது? இதன் மூலம் இவர் எதை சாதித்து விட்டார் ? அல்லது சாதிக்க ப்போகிறார்? இந்தியாவின் மிகச் சிறந்த ஆளுநர் என்ற பட்டத்தை பெறப்போகிறாரா? இவர் ஆளுநர் ஆன பிறகுதான் தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது என யாராவது பேசப் போகிறார்களா?

ஒருவர் ஒரு காரியத்தை செய்தால் அதில் சில பலன்கள் கிடைக்கும்; செய்யாமல் போனாலும் அதற்கேற்ப சில பலன்கள் கிடைக்கலாம்; ஆனால் நமது ஆளுநர், செய்ய வேண்டியதை செய்யாமலும், செய்யக் கூடாததை செய்து கொண்டும் இருக்கிறாரே, இந்த கோமாளித்தனத்தை எந்த சபையில் போய் நாம் முறையிடுவது?

மசோதாக்களை நிறுத்தி வைப்பது, உயர் அதிகாரிகள் நியமனத்திற்கு அனுமதி வழங்காதது, தமிழ்நாடு என உச்சரிக்க மறுப்பது, பட்ஜெட் உரையின் வரிகளை வேண்டுமென்றே படிக்காமல் விடுவது போன்றவற்றை செய்வதன் மூலம் அவர் உயர்த்தி பிடிக்கும் சனாதன சிந்தனை, ஒருவேளை தமிழகத்தில் இனி தழைத்தோங்கும் என்றால் கூட அதில் ஒரு அர்த்தம் இருக்கும்; அதுவும் நடக்கப் போவதில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+