மா.செ.கள் மீது மலைபோல் குவியும் புகார்கள்.. தவெக தலைவருக்கு தலைவலி! தேர்தல் வரை தாக்குப் பிடிப்பாரா?
சென்னை: தமிழக அரசியலில் புதிய வரவான தமிழக வெற்றி கழகம் உட்கட்சி மோதல்களால் சிக்கித் தவிக்கிறது. விஜய் ரசிகர் மன்றம் ஆரம்பித்த காலத்தில் இருந்து பயணித்த பலர் கட்சி பொறுப்புகளில் புறக்கணிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அதன் ஒரு பகுதியாகத்தான் போராட்டத்தில் குதித்தார் தூத்துக்குடியைச் சேர்ந்த அஜிதா ஆக்னல். இவர் மட்டுமல்லாமல் அல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இதே நிலைதான் நீடிப்பதாகவும், இது தேர்தல் நேரத்தில் விஜய்க்கு மிகப்பெரிய தலைவலியாக அமையும் என்கின்றனர்..
தமிழ்நாடு அரசியலில் சினிமா பிரபலங்கள் வருவதும் போவதும் புதிதல்ல. அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், விஜய் என அந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இடையில் சிவாஜி கணேசன், சரத்குமார், டி ராஜேந்தர், பாக்யராஜ், கார்த்திக் என அந்த பட்டியல் இன்னும் அதிகம்.
இதில் ஒரு சிலர் மட்டுமே தமிழக அரசியலில் தங்கள் முத்திரையை அழுத்தமாக பதித்தவர்கள். எம்ஜிஆர், கலைஞர், அண்ணா, ஜெயலலிதா முதலமைச்சராக பதவி ஏற்ற நிலையில், விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வரை சென்றார். தற்போது அதே ஆசையோடு வந்திருக்கிறார் விஜய்.

தமிழக வெற்றிக் கழகம்
ரசிகர் மன்றம் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்ட போது விஜயின் அரசியல் ஆசை தெள்ளத் தெளிவாகிவிட்டது. தொடர்ந்து கட்சி ஆரம்பித்த விஜய் தற்போது தமிழக அரசியலின் மையப் புள்ளியாக மாறி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அதே நேரத்தில் கட்சியில் உட்க்கட்சி பூசல்கள் கொடிகட்டி பறக்கிறது. தற்போது 120 மாவட்டங்களாக தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு மாவட்ட செயலாளர் பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
விஜய் கட்சி
மன்றத்திலிருந்து உழைத்தவர்களுக்கு தான் பதவி வழங்க வேண்டும் என விஜய் சொன்னாலும் பொதுச் செயலாளர் ஆனந்த் தனது ஆதரவாளர்களுக்கு அதிக பதவிகளை ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இடையில் ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், அருண்ராஜ், செங்கோட்டையன் என பலரும் தங்கள் ஆதரவாளர்களுக்கு பதவி கேட்டு வருகின்றனர். இதனால் பல ஆண்டுகளாக உழைத்த தங்களுக்கு பதவி கிடைக்கவில்லை என போர்க்கொடி தூக்க தொடங்கி இருக்கின்றனர் நிர்வாகிகள்.
நிர்வாகிகள் போராட்டம்
அப்படி வெகுண்டு எழுந்தவர் தான் தூத்துக்குடியைச் சேர்ந்த அஜிதா ஆக்னல். உழைத்தவர்களுக்கு உரிய மரியாதை இல்லை என பனையூரில் விஜய் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து விபரீத முடிவு எடுத்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே மதுரை மாவட்ட செயலாளர் கல்லாணை, சாதி மதம் பார்த்தும், பணம் பெற்றுக் கொண்டும் பதவி வழங்குவதாகவும் திமுக அமைச்சருடன் தொடர்பில் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.
தவெக சர்ச்சை
இதேபோல பல புகார்கள் திருவள்ளூர், திண்டுக்கல், காஞ்சிபுரம் என்ன பல மாவட்டங்களில் இதே போல குரல்கள் கேட்கத் தொடங்கி இருக்கும் நிலையில் ,திமுகவுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு தான் அதிகமான மாவட்டச் செயலாளர்கள் மீது வைக்கப்படுகிறது. உண்மையில் அவர்கள் திமுக தலைமையுடன் தொடர்பில் இருக்கிறார்களா? அல்லது விஜய் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியா? என தெரியவில்லை. அதே நேரத்தில் தேர்தல் நேரத்தில் இது போன்ற நிர்வாகிகள் போர்க் கொடி தூக்கி வருவது விஜய்க்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.












Click it and Unblock the Notifications