3 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்கு புதிய பொறுப்பு!
சென்னை: காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உளவுத்துறை முன்னாள் ஐ.ஜி. ஆக இருந்த செந்தில்வேலன், காவல்துறை அகாடமியின் கூடுதல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். காவல்துறை அகாடமியின் டி.ஜி.பி. ஆக ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தவெக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்துள்ளது. தவெக உடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இணைந்து ஆதரவு அளித்துள்ளது. அதேபோல் சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ளார்.

அவருடன் இணைந்து 9 அமைச்சர்கள் பதவியேற்று இருக்கின்றனர். தவெக ஆட்சி அமைந்து 5 நாட்களாகியும் இதுவரை எந்த அமைச்சர்களுக்கும் இலாகா ஒதுக்கப்படவில்லை. நிதித்துறை தொடர்பான அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் கூட விஜய் நேரடியாக பங்கேற்றார். அதேபோல் முதல்வர் விஜய் தொடர்ச்சியாக அதிகாரிகளை இடமாற்றம் செய்து வருகிறார்.
வழக்கமாக ஆட்சி மாற்றம் செய்யப்பட்ட பின் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இலாகா கூட அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல், இடமாற்றம் செய்வது தான் விவாதமாக மாறியுள்ளது. திமுக ஆட்சியில் போது லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாகவும், உளவுத் துறை கூடுதல் டிஜிபியாகவும் இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
தற்போது டேவிட்சன் தேவாசீர்வாதம் கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கண்காணிப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேவேளையில், பால் உற்பத்தி ஊழல் கண்காணிப்பு அதிகாரியாக இருந்த ராஜீவ் குமார் ஐபிஎஸ் இப்போது ஊனமாஞ்சேரி காவல் பயிற்சி பள்ளி டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
உளவுத் துறை ஐஜியாக இருந்த செந்தில்வேலன் ஐபிஎஸ் இப்போது தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறை செயலர் கே.மணிவாசன் பிறப்பித்துள்ளார். அதேபோல் ஐபிஎஸ்ஸை தொடர்ந்து சில ஐஏஎஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications