4000 கி.மீ தூரம்.. இந்தியாவின் வாசல் வரை வந்த ஏவுகணை! அமெரிக்காவை இந்திய பெருங்கடலில் தாக்கும் ஈரான்
சென்னை: ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் இடையிலான போர் உச்சத்தில் உள்ளது. மத்திய கிழக்கில் ஏற்கனவே பதற்றம் உச்சத்தில் இருக்கும் நிலையில், இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்காவின் மிக முக்கியமான ராணுவத் தளமான 'டீகோ கார்சியா' (Diego Garcia) மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்த முயன்றதாக வெளிவந்துள்ள செய்தி சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

திடீர் தாக்குதல் முயற்சி - என்ன நடந்தது?
அமெரிக்காவின் 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' (The Wall Street Journal) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஈரான் தனது எல்லைகளிலிருந்து சுமார் 4,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டீகோ கார்சியாவை நோக்கி இரண்டு இடைநிலைத் தொலைவு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது.
இதில் ஒரு ஏவுகணை நடுவானிலேயே செயலிழந்து விழுந்ததாகவும், மற்றொன்றை அமெரிக்கப் போர்க்கப்பல் 'SM-3' ரக இடைமறிப்பு ஏவுகணை மூலம் தகர்க்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அந்த ஏவுகணை வெற்றிகரமாக அழிக்கப்பட்டதா என்பது குறித்த தெளிவான தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்தத் தாக்குதல் எப்போது நடத்தப்பட்டது என்பதையும் அந்தச் செய்தித்தாள் குறிப்பிடவில்லை.
ஈரானின் 'இரட்டை முகம்' அம்பலமா?
இந்தத் தாக்குதல் முயற்சி ஈரானின் ஏவுகணை வலிமை குறித்து உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த மாதம் அளித்த பேட்டியில், ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, "ஈரான் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்க விரும்புவதில்லை. எனவே எங்களது ஏவுகணைகளின் வரம்பை 2,000 கிலோமீட்டராகக் குறைத்துள்ளோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இப்போது 4,000 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை ஈரான் குறிவைத்துள்ளது, அந்த நாடு தனது ஏவுகணைத் தொழில்நுட்பத்தை ரகசியமாக எவ்வளவு தூரம் வளர்த்தெடுத்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
டீகோ கார்சியா: ஏன் இவ்வளவு முக்கியம்?
பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள டீகோ கார்சியா, அமெரிக்காவின் மிக வலிமையான ராணுவக் கோட்டையாகக் கருதப்படுகிறது. இங்கிருந்துதான் நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய குண்டுவீச்சு விமானங்கள் (Long-range bombers), அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதலைச் சமாளிக்கும் போர்க்கப்பல்கள் இயக்கப்படுகின்றன.
மத்திய கிழக்கு மற்றும் ஆசியப் பிராந்தியங்களைக் கண்காணிப்பதில் இந்தத் தளம் அமெரிக்காவிற்கு ஒரு 'சொர்க்கம்' போன்றது. தற்போது ஈரான் இந்தத் தளத்தையே குறிவைத்திருப்பது, அவர்கள் தங்களது எல்லையைத் தாண்டி ஆதிக்கத்தைச் செலுத்தத் தயாராகிவிட்டதையே உணர்த்துகிறது.
ஈரானின் பதிலடி
இந்தியாவில் நடந்த 'மிலன் 2026' (MILAN 2026) கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டுத் தாயகம் திரும்பிக் கொண்டிருந்த ஈரானின் 'IRIS Dena' என்ற போர்க்கப்பலை, இலங்கை அருகே அமெரிக்காவின் 'USS Charlotte' நீர்மூழ்கிக் கப்பல் டார்பிடோ ஏவுகணைகளை வீசி மூழ்கடித்தது. சர்வதேச கடல் எல்லையில் நடந்த இந்தத் தாக்குதலில் 80-க்கும் மேற்பட்ட ஈரானிய வீரர்கள் உயிரிழந்தனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு எதிரி நாட்டுக் கப்பலை அமெரிக்கா டார்பிடோ மூலம் மூழ்கடித்த முதல் சம்பவம் இதுதான். இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே, தற்போது அமெரிக்காவின் டீகோ கார்சியா தளத்தை நோக்கி ஈரான் ஏவுகணைகளை ஏவி தனது "ரிட்டர்ன் கிப்ட்"-ஐ அளித்துள்ளதாகப் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் கருதுகின்றனர்
இந்தச் சம்பவம் குறித்து ஈரான் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இருப்பினும், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான இந்த மறைமுக யுத்தம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒரு புதிய போர் மேகத்தைச் சூழ்ந்துள்ளதை மறுப்பதற்கில்லை.












Click it and Unblock the Notifications