டெல்லியில் நடந்த மீட்டிங்! நேராக கேட்ட மோடி? தமிழ்நாட்டின் "முக்கிய" புள்ளியை அப்படியே அள்ளும் பாஜக?
சென்னை: தமிழ்நாட்டின் முக்கியமான அரசியல் புள்ளி ஒருவரை பாஜக தங்கள் பக்கம் இழுக்க தீவிரமாக முயன்று வருவதாக தகவல்கள் வருகின்றன.
இரு வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் தமிழ் மாநில காங்கிரஸ் எம்பி ஜி.கே.வாசன். வாசன் மீது மோடிக்கு தனிப்பட பிரியம் உண்டு. அவரை அமைச்சராக்க வேண்டும் என்றும் கூட மோடி விரும்பினார். இந்த சந்திப்பின் பின்னணி குறித்து ஏற்கனவே நாம் எழுதியிருக்கிறோம்.
தனது அமைச்சரவையில் வாசனை சேர்த்துக் கொள்ள பிரதமர் மோடி விரும்பி இருக்கிறார். இது தொடர்பாக மோடியும், வாசனும் டெல்லியில் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

மோடி டிமாண்ட்
ஆனால், அமைச்சரவையில் இடம் தர வேண்டும் என்றால்.. பாஜகவில் த.மா.கா.வை இணைத்துவிட வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடியின் நிபந்தனை என்கிறார்கள். த.மா.கா. வேகமாக கரைந்து கொண்டிருக்கும் நிலையில் தனது மற்றும் தன்னை நம்பியுள்ள தொண்டர்களின் அரசியல் எதிர்காலம் குறித்து தற்போது அதிகமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறாராம் வாசன். மோடி தரப்பிலிருந்து வைக்கப்பட்ட ஆஃபர் குறித்து அவரால் முடிவெடுக்க முடியவில்லை என்கிறார்கள்.

தமிழிசை இடம்
தமிழிசை சௌந்தரராஜன் தமிழக பாஜக தலைவராக இருந்த போது அவரை மாற்றும் யோசனைகள் டெல்லியில் முன்னெடுக்கப்பட்டன. அப்போதும் இதே கோரிக்கையை வாசனிடம் பாஜக வைத்ததாம். அதாவது, கட்சியில் இணையுங்கள். தமிழக பாஜக தலைவராக உங்களை நியமிப்பதுடன் மத்திய அமைச்சர் பதவியும் தருகிறோம் என்றதாம் பாஜக தேசிய தலைமை. ஆனால், அதிமுக ஆட்சி தமிழகத்தில் இருந்த நிலையையும், அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த சூழலும் பாஜகவில் சேரும் யோசனையை புறந்தள்ளினார் வாசன்.

மீண்டும் அழைப்பு
இப்போது மீண்டும் மத்திய அமைச்சர் பதவி தருவதாக வாசனின் ஆசையை தூண்டிவிட்டுள்ளது பாஜக. அரசியல் ரீதியாக எந்த வெற்றியும் தனது கட்சிக்கு கிடைக்காததால் பாஜகவின் ஆஃபரை ஏற்பதா? வேண்டாமா? என குழம்பிப்போயிருக்கிறார் வாசன் என்கிறார். இந்த நிலையில், தேசிய அளவிலும் மாநில அளவிலும் அகில இந்திய காங்கிரஸும் கரைந்து கொண்டிருக்கிறது. கட்சியை தூக்கி நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளது. கட்சியை வலிமைப்படுத்த பல்வேறு யோசனைகளில், பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பது அஎன்கிற யோசனையும் ஒன்று.

சோனியாவும் அழைப்பு
அந்த வகையில், ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரசை உடைத்துக்கொண்டு வெளியேறியவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வரும் யோசனை சோனியாவுக்கு இருக்கிறது. அந்த வகையில், மோடி-வாசன் சந்திப்பு செய்தியை அறிந்து சோனியாவின் கவனம் வாசன் மீது விழுந்துள்ளது. ஜி.கே.வாசனிடம் பேசச்சொல்லி மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோணியிடம் சொல்லியுள்ளார் சோனியா என்கிறார்கள்.

குழப்பம்
அதன்படி வாசனிடம் ஏ.கே.அந்தோணி பேசியிருக்கிறார். அதாவது காங்கிரசுக்கு மீண்டும் வர வேண்டும் என்று பேசியிருக்கிறார். ஆனால், வாசன் இதற்கு பதில் சொல்லவில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். பாஜகவும் காங்கைரசும் தன்னை அழைப்பதில் வாசனுக்கு மகிழ்ச்சி என்றாலும் என்ன முடிவு எடுப்பது என்பதில் குழப்பம். அதனால், கட்சியின் எதிர்காலம் குறித்து ஆலோசிக்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யலாமா?அல்லது மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ஆலோசிக்கலாமா? என்று மாநில நிர்வாகிகளிடம் யோசனைக் கேட்டுள்ளார் வாசன். காங்கிரசில் இணையலாம் என்று அவர் முடிவெடுத்தால் வாசனை ஏற்க ராகுல்காந்தி தயாராக இல்லை என்று கூறுகின்றனர் தமிழக காங்கிரசார்.












Click it and Unblock the Notifications