காரணமே வேறயோ.. பதவியில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கமென பரவிய தகவல்.. திமுக, திருமாவை சீண்டி ட்வீட்
காயத்ரி ரகுராம் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக தகவல் கசிந்து வருகிறது
சென்னை: திடீரென ஓய்வு தேவை என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் பாஜகவின் காயத்ரி ரகுராம்.. இது பல்வேறு குழப்பங்களையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தி வருகிறது.
தமிழக பாஜகவின் பல்வேறு பிரிவுகளுள் ஒன்றாக இருக்கும் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவராக நடிகை காயத்ரி ரகுராம் இருந்து வருகிறார்..
கட்சியில் இணைந்து ஓரிரு வருடத்திற்கெல்லாம் தமிழக பாஜக இந்த பொறுப்பை காயத்திரிக்கு வழங்கியிருந்தது.

திருமாவளவன்
ஆரம்ப கட்டத்தில், விசிகவையும், திருமாவளவனையும் மட்டுமே சீண்டி கருத்து தெரிவித்து வந்த காயத்ரி ரகுராம்.. இவரது கருத்தினையும், ட்விட்டினையும் விசிக தலைமை எப்போதுமே கண்டுகொள்வதில்லை.. ஆனால், சிறுத்தைகள் மட்டும் அவ்வப்போது திரண்டு வந்து காயத்ரி ரகுராம் ட்விட்டர் கருத்துக்கு பதிலடி தருவார்கள். இதற்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்ததும், விசிகவை விட்டுவிட்டு, திமுகவை சீண்ட ஆரம்பித்தார்.. முதல்வர் ஸ்டாலின், உதயநிதி குறித்தும், ட்வீட்களை பதிவிடுவார்.. இதனால், திமுகவினர் காயத்திரியின் ட்விட்டர் தளத்தில் புகுந்து பதிலடி தந்துவருவார்கள்..

அதிரடி உத்தரவு
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 1ம் தேதி, மாநில செயலாளர்களான ஃபெப்சி சிவா, நடிகர் பாபு கணேஷ், விருகை கணேஷ், தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி, சர்மா, ரிஷி, உமேஷ் பாபு ஜெயபிரகாஷ் ஆகியோரை பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை காயத்ரி ரகுராம் நியமித்திருந்தார்.. இது ஏகப்பட்ட அதிருப்திகளை விளைவித்துவிட்டது.. கட்சி மேலிடமே காயத்ரி மீது அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்பட்டது... அதனால்தான், "பாஜக தலைமை கட்சியின் அனுமதியின்றி வெளியான உத்தரவு அது" என்று சொல்லி மறுத்து அறிக்கை வெளியிட்டது.

பாஜக
கலை மற்றும் கலாச்சார பிரிவு நிர்வாகிகளை நீக்கியது செல்லாது என பாஜகவின் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தான் அந்த மறுப்பு அறிக்கையை வெளியிட்டிருந்தார். இதனிடையே, மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பாஜக நிர்வாகிகளை மாற்றும் நடவடிக்கையில் தமிழக பாஜக ஈடுபட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியானது.. அந்த லிஸ்ட்டில் காயத்ரியும் இருப்பதாக சோஷியல் மீடியாவில் செய்திகள் கசிந்தன.. இதையடுத்து, காயத்திரி ரகுராம் உடனடியாக ஒரு மறுப்பு தெரிவித்து ட்வீட் போட்டிருந்தார்..

திமுக - விசிக
அதில், என்னை பதவியில் இருந்து நீக்குவது பற்றி பாஜக நினைக்கவில்லை, எங்கள் தலைவர் என்னை நீக்க மாட்டார். கடினமாக உழைத்தவர்களுக்கு பதவி உயர்வு மட்டுமே பாஜக தருகிறது. பாஜக எப்போதும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. இது பாரத தாய் பூமி. எனவே பெண்கள் எப்போதும் வழி நடத்துவார்கள். என்னை பதவியில் இருந்து நீக்கி முடக்க திமுகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தான் விரும்புகிறது. அவைகள்தான் என்னை பற்றி பொய்யான செய்திகளை முழுக்க முழுக்க பரப்புகின்றன" என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

ட்வீட்
இப்படிப்பட்ட குழப்பமான சூழலில்தான், காயத்ரி இன்னொரு ட்வீட் போட்டு எல்லாரையும் மண்டை காய வைத்துள்ளார்.. அதில், உடல்நிலை சரியில்லை.. என்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். ஓய்வெடுக்க வேண்டும். தொண்டை வலி உள்ளது.. பயணம் செய்தது, குடிநீர் மாறுபாடு" என்று கூறியிருந்தார்.. இதுதான் சந்தேகத்தை கிளப்பி உள்ளது. தொண்டை வலிக்கும் ட்விட்டரில் பதிவு போடுவதற்கும் என்ன சம்பந்தம்? எதற்காக திடீரென ஓய்வு என்று காயத்ரி சொல்கிறார்? என்பன போன்ற கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளன..

திடீர்னு ஓய்வு ஏன்?
அப்படியானால், நிர்வாகிகளை மாற்ற போவதாக கசிந்த செய்திகள் உண்மையா? காயத்ரி மீது தமிழக பாஜக தலைமை அதிருப்தியாக இருப்பதாக சொல்லப்பட்டது உண்மையா? என்ற சந்தேகங்களும் அதிகமாகி உள்ளது.. எப்படி பார்த்தாலும், பாஜக புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியாக உள்ளது.. அதில் தெரிந்துவிடும் காயத்ரியின் ஓய்வுக்கான காரணம்..!












Click it and Unblock the Notifications