மாட்டிவிட்டாரே! திமுக ஆரம்பிச்சதை ஓபிஎஸ் பிடிச்சுக்கிட்டாரு.. பற்றவைத்த டிடிவி! முகம் சுளித்த சசிகலா
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை காரணமாக சசிகலா தரப்பு கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அறிக்கை பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில்.. ஓபிஎஸ் - சசிகலா இடையிலும் இந்த அறிக்கை ஒரு விதமான விரிசலை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு விசாரணை அறிக்கை.. 3 வருட நீண்ட விசாரணைக்கு பின் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை தற்போது அதிமுகவின் அனைத்து அணிகளையும் போட்டு ஆட்டிப்படைத்துக்கொண்டு இருக்கிறது. சசிகலா டீம்.. டிடிவி தினகரன் டீம்.. எடப்பாடி பழனிசாமி டீம்.. ஓபிஎஸ் டீம் என்று ஒவ்வொரு டீமும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை காரணமாக அலறிப்போய் உள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெளியாகி இருக்கும் ஆறுமுகசாமி ஆணைய ரிப்போர்ட் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் சசிகலா. கேஎஸ் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர்,விஜயபாஸ்கர். அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேரை குற்றம் செய்தவர்களாக கருதி விசாரிக்க வேண்டும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
ஜெயலலிதா டிசம்பர் 4ல் இறந்தது உண்மையா? அன்று மாலை நடந்த 'சம்பவம்’- டிடிவி தினகரன் சொன்ன புதிய தகவல்!
அறிக்கை
இந்த அறிக்கை.. விசாரணை அனைத்திற்கும் தொடக்க புள்ளி என்னவோ அது ஓ பன்னீர்செல்வம்தான். அவர்தான் இந்த விசாரணையை தொடங்கி வைத்தார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறித்தான் ஓ பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை தொடங்கி வைத்தார். ஜெயலலிதா மரணத்தில் விசாரணை செய்து, உண்மையை கொண்டு வர வேண்டும் என்று அவர்தான் கோரிக்கை வைத்து தர்ம யுத்தத்தை தொடங்கினார். இந்த தர்ம யுத்தம்தான் சசிகலாவிற்கு எதிராக திரும்பி உள்ளது.
சசிகலா
அதிமுகவில் தற்போது உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் திரும்பி உள்ளார். இதன் காரணமாக ஓ பன்னீர்செல்வம் - சசிகலா இருவரும் நெருக்கம் ஆகி உள்ளனர். இரண்டு பேருமே அடிக்கடி போனில் பேசி வருவதாக அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. அதிமுகவில் பிரிந்தவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சசிகலாவும்.. நாங்கள் எல்லாம் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம் என்று வெளிப்படையாக போட்டு உடைத்து விட்டார்.
ஓபிஎஸ்
இந்த நிலையில்தான் ஓபிஎஸ் தொடங்கி வைத்த ஒரு விசாரணை தற்போது சசிகலாவிற்கு எதிராகவே திரும்பி உள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், சமீபத்தில் ஓ பன்னீர்செல்வம் கொடுத்த பேட்டிகளில் கூட.. எனக்கு சசிகலா மீது ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை. சசிகலா தன் மீது இருக்கும் களங்கத்தை துடைக்க எளிதாக இருக்கும் என்பதற்காகவே இந்த விசாரணையை நடத்த சொன்னேன். மற்றபடி எனக்கு இந்த மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்று ஓ பன்னீர்செல்வம் கூறினார்,
என்ன நடந்தது?
ஆனால் இன்று அவர் தொடங்கி வைத்த அதே விசாரணையே சசிகலாவிற்கு எதிராக திரும்பி உள்ளது. இந்த அறிக்கையில் சசிகலா மீது கடுமையான புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன. முக்கியமாக சசிகலா ஜெயலலிதா இடையிலான உறவு குறித்தும் இதில் கடுமையான குற்றச்சாட்டுகளை ஆறுமுகசாமி ஆணையம் வைத்து உள்ளது. ஜெயலலிதாவுடன் சசிகலா மீண்டும் இணைந்த பிறகு இருவருக்கும் சுமூக உறவு இல்லை. பிரிவிற்கு பின் இவர்கள் சேர்ந்த போது அவர்களிடம் சுமுகமான உறவு இல்லை. ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சையே அளிக்கவில்லை. ஜெயலலிதா இறந்த நேரத்திலும் முரண்பாடு என ஆறுமுகசாமி ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.
சசிகலா
சசிகலா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு உள்ள நிலையில், அவர் கடுமையான அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் இப்போது நம்மிடம் ராசியாக இருக்கிறார். ஆனால் அன்று அவசரப்பட்டு அவர் செய்த செயலால் இன்று நாம் மாட்டிகிட்டோம். தேவையின்றி அரசியல் ஆதாயத்திற்காக அவர் செய்த தர்ம யுத்தம் காரணமாக இப்போது தேவையின்றி பழி, புகார்களுக்கு நாம் ஆளாகிவிட்டோம். இப்படி செய்துவிட்டாரே என்று ஓபிஎஸ் மீது சசிகலா தரப்பு அப்செட்டில் இருக்கிறதாம். ஓபிஎஸ் பற்றி பேச்சு எடுத்தாலே இரண்டு நாட்களாக முகம் சுளிக்கும் அளவிற்கு சசிகலா அப்செட்டில் இருக்கிறாராம்.
தொடக்கம்
அவர்தான் அனைத்தையும் தொடங்கி வைத்தார் என்ற அப்செட்டில் சசிகலா தரப்பு இருக்கிறதாம். இன்னொரு பக்கம் ஓபிஎஸ் பற்றி டிடிவி தினகரனும் கமெண்ட் அடித்து இருந்தார். அதில், ஜெயலலிதாவின் மரணம் பற்றி முதலில் அரசியல் ஆதாயத்திற்காக சந்தேகம் எழுப்பியது என்னவோ திமுகதான். அதை அண்ணன் பன்னீர்செல்வம் கையில் எடுத்தார். அதை தொடர்ந்து பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் ஒப்பந்தம் போட்டு சேர்ந்தனர். இந்த ஒப்பந்தம் மூலமே ஆணையம் வந்தது. மற்றபடி இந்த ஆணையம் உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.