எதிர்பார்க்காத ட்விஸ்ட்! தமிழ்நாடு காங்கிரசின் அடுத்த தலைவராகும் இளம் மாஜி ஐஏஎஸ்? அண்ணாமலைக்கு செக்?
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவராக சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக காங்கிரஸ் மேலிட வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வருகின்றன.
கடந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தல் சமயத்திலேயே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி உள்ளார். சரியாக கடந்த 2019 லோக்சபா தேர்தலுக்கு முன்தான் இவருக்கு பதவி வழங்கப்பட்டது.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நன்றாகவே செயல்பட்டது. சட்டசபை கூட்டணியில் பெரிய அளவில் இடங்களை கேட்டு பெற முடியவில்லை என்றாலும் காங்கிரஸ் நன்றாக போட்டியிட்டு இருந்தது. அதே சமயம் கூட்டணி கட்சியான திமுகவிற்கு கே.எஸ்.அழகிரிக்கும் இதில் லேசான உரசல் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

உரசல்: இன்னொரு பக்கம் கட்சிக்கு உள்ளேயும் நிறைய கோஷ்டி மோதல்கள் நிலவி வருகின்றன. பொதுவாகவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிறைய கோஷ்டி மோதல் இருக்கும். அந்த கோஷ்டி மோதல் சட்டசபை தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் வெளிப்படையாக வெடித்தது.
ஜோதிமணி எம்பி, கோபண்ணா போன்றவர்கள் பொது தளத்தில் வேட்பாளர் தேர்வு குறித்தெல்லாம் விவாதம் செய்தனர். இப்போது இந்த கோஷ்டி மோதல் உச்சம் தொட்டுள்ளது. அப்போதே காங்கிரஸ் தமிழ்நாடு தலைவர் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வந்தன.
விரைவில் மாற்றம்: இந்த நிலையில்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் வெகு விரைவில் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி மாற்றப்படுவது வழக்கம்.
கே எஸ் அழகிரி பதவிக்கு வந்து கிட்டத்தட்ட 4 ஆண்டு ஆக போகிறது. அவர் பதவிக்கு வந்து இன்னும் சில மாதங்களில் 4 ஆண்டு நிறைவு பெற்றுவிடும். இதனால் புதிய தலைவரை நியமிக்க டெல்லி தலைமை ஆலோசனை செய்து வருகிறது. இதற்கு கட்சிக்குள் கடும் போட்டியும் நிலவி வருகிறது.
செல்வப்பெருந்தகை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக வாய்ப்புள்ளதாக கருத்தப்பட்டவர்களில் ஒருவர் காங்கிரஸ் எம்எல்ஏ கு.செல்வப்பெருந்தகை. மூத்த உறுப்பினரான இவர் கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவர். சட்டசபை தேர்தல் சமயத்திலேயே இவர் தலைவர் ஆகும் வாய்ப்புகள் இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டன.
ஆனால் அதன்பின் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக கு.செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டார். இது கிட்டத்தட்ட மாநில கட்சித் தலைவர் பதவிக்கு இணையானது. மாநில கட்சித் தலைவருக்கு இருக்கும் பல்வேறு அதிகாரங்கள் இவருக்கு உள்ளது. இதனால் இவருக்கு கூடுதலாக இன்னொரு பவர் புல் பொறுப்பு கொடுக்கப்படாது என்றே கூறப்படுகிறது. ஏற்கனவே முக்கிய பதவி இவரிடம் உள்ளதால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவி வழங்கப்பட வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.
ஜோதிமணி: முக்கியமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவராக ஜோதிமணி எம்பி நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக காங்கிரஸ் மேலிட வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவித்தன . தலைவர் பதவிக்கான ரேஸில் இவர்தான் இப்போது முன்னிலையில் இருக்கிறார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் இருப்பை தொடர்ந்து இவர் காட்டி வருகிறார். எம்பி ஆகுவதற்கு முன்பே இவர் தமிழ்நாட்டில் கவனிக்கப்பட்டவர். ராகுல் காந்தியின் குட் புக்கிலும் இருக்கிறார்.
அதோடு சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் காங்கிரஸ் தலைவராக உள்ளார். பெண்கள் மத்தியில் இவருக்கு ஒரு கிரேஸ் இருக்கிறது. சீமான் எதிர்ப்பு, பாஜக அண்ணாமலை மீது விமர்சனம்,என்று ஜோதிமணி தொடர்ந்து ஆக்டிவாக களத்தில் இருக்கிறார்.
செல்ல குமார்: இன்னொரு நபர் கிரிஷ்ணகிரி காங்கிரஸ் எம்பி செல்ல குமார். ராகுல் காந்தியின் குட் புக்கில் இருக்கும் எம்பிக்களில் இவரும் ஒருவர். ராகுல் காந்திக்கு கொஞ்சம் நெருக்கமாக பார்க்கப்படும் தலைவர் ஆவார். இவரும் தொடக்கத்தில் காங்கிரஸ் தமிழ்நாடு தலைவருக்கான ரேஸில் இருந்தார்.
ஆனால் சமீபத்தில் இவருக்கு ஏற்பட்ட உடல்நிலை பாதிப்புகள் காரணமாக தலைவர் பதவி கேள்விக்குறியாக உள்ளது. தமிழ்நாடு தலைவர் என்பதால் கொஞ்சம் ஆக்டிவாக இருக்க வேண்டும் என்பதால் இவரின் உடல்நிலை கருதி பதவி வழங்கப்படாமல் போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ப. சி: எம்பி கார்த்தி சிதம்பரம் முக்கியமான தலைவராக பார்க்கப்பட்டாலும் அவருக்கு பதவி வழங்க வாய்ப்பு குறைவு. அவருக்கு எதிராக கட்சியில் பல மூத்த தலைவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். ஏற்கனவே ப. சிதம்பரத்திற்கு நெருக்கமான கே. எஸ் அழகிரிதான் தலைவராக இருக்கிறார். அதேபோல் செல்வப்பெருந்தகையும் கொஞ்சம் ப. சிக்கு நெருக்கமானவர். இதனால் மீண்டும் அவர்கள் தரப்பிற்கு கட்சி தலைமை பாதை செல்லாது என்றே கூறப்படுகிறது.
மாணிக் தாக்கூர்: எம்பி மாணிக் தாக்கூரும் ராகுலின் குட் புக்கில் உள்ளவர்தான். இவருக்கு கட்சி தலைவர் பதவி வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் வேறு சில கட்சி ரீதியான பிரச்சனைகள், தனிப்பட்ட காரணங்களால் இவருக்கான வாய்ப்பு இப்போது வழங்கப்படாது என்றே கூறப்படுகிறது. கட்சியில் வேறு முக்கிய பதவிகள் கிடைக்கலாம், ஆனால் மாநில தலைவர் போஸ்டிங் இப்போதைக்கு கஷ்டம்தான் என்றே கட்சி மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜயதரணி: இந்த தலைவர் பதவி ரேஸில் முன்பு இருந்தவர் விஜயதரணி. ஆனால் அதன்பின் நடைபெற்ற பல்வேறு கோஷ்டி மோதல் என்று பல காரணங்களால் இவர் இப்போது தலைவருக்கான ரேஸிலேயே இல்லை. கடந்த சட்டசபை தேர்தலில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைப்பதே கொஞ்சம் கேள்விக்குறியாக இருந்தது.
பெரும் போராட்டத்திற்கு பின்பே விஜயதரணிக்கு அப்போது விளவங்கோடு தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த தேர்தலில் விஜயதரணி சிறப்பாக செயல்பட்டு வெற்றியும் பெற்றார். ஆனால் மேலிடம் இவருக்கு தலைவர் பதவி அளிக்க வாய்ப்பு இல்லை என்றே கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சசிகாந்த் செந்தில்: இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவராக சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக காங்கிரஸ் மேலிட வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வருகின்றன. மாஜி ஐபிஎஸ் அண்ணாமலைக்கு போட்டியாக மாஜி ஐஏஎஸ் சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
காங்கிரஸ் தமிழ்நாடு தலைவர்களிடம் சமீபத்தில் மிஸ்ஸான அந்த ஆக்டிவ் குணமும், ஈர்ப்பும் இவரிடம் உள்ளது. எளிதில் அணுக கூடிய தலைவராகவும் இருக்கிறார். இளம் தலைவர் என்பதால் இயல்பாகவே இவரிடம் ஆக்டிவ் அரசியல் குணம் உள்ளது.
அதோடு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளோடும் இவர் இணக்கமாக இருக்கிறார். தேசிய அளவிலும் கவனிக்கப்பட்ட தலைவராக இருக்கிறார். மற்ற சில தலைவர்களோடு இணக்கமாக செல்வார் என்பதால் கோஷ்டி மோதலுக்கு இவர் முற்றுப்புள்ளி வைக்கும் வாய்ப்புகள் உள்ளன
இப்படி பல்வேறு காரணங்களால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவராக சசிகாந்த் நியமிக்கப்பட காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாகவே அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை கட்சித் தலைவர் மாற்றப்பட்டால் சசிகாந்த் செந்திலுக்கு அதில் அதிக வாய்ப்பு உள்ளதாகவே தகவல்கள் வருகின்றன.
கர்நாடக வெற்றி: சமீபத்தில் கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பணியாற்றியவர்களில் முக்கியமான நபராக அம்மாநில தேர்தல் பொறுப்பாளர் தமிழ்நாட்டை சேர்ந்த சசிகாந்த் செந்தில் பார்க்கப்படுகிறார்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக அக்கட்சி நிர்வாகி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் பணியாற்றினார். இவர் சமூக வலைதள பிரச்சாரம், ஊடகங்களில் பிரச்சாரம் செய்வது, விளம்பரம் கொடுப்பது, நவீன வகையிலான பிரச்சாரங்களை மேற்கொள்வது போன்ற பணிகளை கவனித்துக்கொண்டார்.
இவரின் சிறப்பான பணிகள் காரணமாக கர்நாடகாவில் காங்கிரஸ் வென்றுள்ளது. தனக்கு கீழே பெரிய டீம் வைத்துக்கொண்டு சத்தமே இன்றி இவர் தேர்தல் பணிகளை செய்தது காங்கிரஸ் கட்சியின் மேலிட கவனத்தை ஈர்த்து உள்ளது.

யார் இவர்? : சென்னையைச் சேர்ந்தவர் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில். இவர் கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்தார். 2009ல் ஐஏஎஸ் அதிகாரியாக கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இவருக்கு போஸ்டிங் போடப்பட்டது. உதவி ஆணையராக இவர் பணியாற்றினார்.
அங்கேயே தொடர்ந்து பணியாற்றி வந்தவர், சுரங்கம் மற்றும் நிலவியல் துறையின் இயக்குநராக 2016ல் பதவி உயர்வு பெற்றார். இவர் பதவியில் இருந்த போது பாஜகவிடம் இருந்து ஏகப்பட்ட பிரஷர் வந்ததாக கூறப்படுகிறது.
பாஜகவின் சில கோரிக்கைகளை இவர் கேட்க மறுத்துள்ளார். அரசியல் கட்சிகளுக்கு தலையாட்டி பொம்மையாக இல்லாமல் இவர் நேர்மையான தலைவராக இருந்துள்ளார். முக்கியமாக தக்சின் கர்நாடகாவில் பணியாற்றிய சமயத்தில் பாஜகவிடம் இருந்து ஏகப்பட்ட பிரஷர் வந்ததால் அவர் பதவியை ராஜினாமா செய்து மோடி மீது கடும் விமர்சனங்களை வைத்தார்.
மோடி : முக்கியமாக பிரதமர் மோடி மீது நேரடியாக பல குற்றச்சாட்டுகளை சசிகாந்த் செந்தில் அப்போது வைத்தார். அங்கே பாஜக பல ஊழல்களை செய்வதாகவும் கூறினார்.
இதையடுத்து காங்கிரசில் சேர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனார். அவரின் பணி மற்றும் கர்நாடகாவில் அவருக்கு இருக்கும் அனுபவம் இரண்டையும் மெச்சும் விதமாக கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளராக அவருக்கு பதவி வழங்கப்பட்டது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் பிரச்சார திட்டங்களை வகுப்பது. தேர்தல் பணிகளை திட்டமிடுவது, வேட்பாளர் தேர்வில் முடிவுகளை எடுப்பது, வாக்குறுதியை உருவாக்குவது என்று பல பணிகளை செய்தார். முக்கியமாக கர்நாடக களம் இவருக்கு தெரியும் என்பதால் அந்த பணிகளில் இவர் கவனம் செலுத்தினார்.
என்னென்ன பணி? : முக்கியமாக நவீன ஆன்லைன் பணி, சோஷியல் மீடியாவில் டிரெண்ட் செய்வது, வேட்பாளர்கள் பற்றிய இமேஜை உருவாக்குவது என்று சிறப்பான பணிகளை மேற்கொண்டார்.
இவரின் சிறப்பான பணி காரணமாக கர்நாடகாவில் காங்கிரஸ் வென்றுள்ளது. இன்னொரு பக்கம் அண்ணாமலை நிர்வகித்த பாஜக தோல்வி அடைந்து உள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக - காங்கிரஸ் போட்டிக்கு இணையாக அங்கே சசிகாந்த் - அண்ணாமலை இடையிலான போட்டி பெரிதும் கவனிக்கப்பட்டது. இந்த போட்டியில் இறுதியில் என்னவோ சசிகாந்த்தான் வெற்றிபெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications