வெளியே போனவர்களை கட்சியில் சேர்க்க சொன்னேன்! எடப்பாடி என் பேச்சை கேட்கவில்லை!செங்கோட்டையன் பரபரப்பு
சென்னை: அதிமுக கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் மறப்போம் மன்னிப்போம் என எடப்பாடி பழனிச்சாமி இடம் சொன்னேன். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை, என்று செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார் .
கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் , எம்ஜிஆர் தொடங்கிய காலத்தில் இருந்தே அதிமுகவில் இருக்கிறேன். எம்ஜிஆரின் செல்வாக்கு நாடே வியக்கத்தக்க அளவில் இருந்தது. எம்ஜிஆர் வழியில் என்றும் செயல்படுபவன் நான். அதிமுகவிற்கு மாபெரும் வெற்றிகளை ஈட்டித்தந்த தலைவர் எம்ஜிஆர். என்னை அழைத்து மனதார பாராட்டி புகழ்ந்தவர் எம்ஜிஆர்.
சத்தியமங்கலம் தொகுதியில் என்னை எம் ஜி ஆர் போட்டியிட சொன்னார் அந்த தொகுதி எனக்கு புதிதானது அங்கு நான் என்ன செய்ய முடியும் என கேட்டேன் என் பெயரை சொல் நீ வெற்றி பெறுவாய் என எம் ஜி ஆர் என்னிடம் சொன்னார் . எம்ஜிஆர் பெயரை சொன்னாலே போதும் தேர்தலில் வெற்றி பெறலாம். சாதாரண கிளை செயலாளராக தான் எனது வாழ்க்கையை தொடங்கினேன். பிறகு முக்கிய பொறுப்புகளை எனக்கு கொடுத்து தலைவர்கள் அளித்து அழகு பார்த்தனர்.
எம்ஜிஆர் போலவே ஆளுமை மிக்க தலைவராக, முதல்வராக ஜெயலலிதா இருந்தார். தலைவர் எம்ஜிஆர் க்கு பிறகு ஆளுமை மிக்க தலைமை கட்சிக்கு தேவைப்படுகிறது நீங்கள் தான் அந்த பொறுப்பை ஏற்க வேண்டும் என நாங்கள் அனைவரும் ஜெயலலிதா அவர்களிடம் கேட்டுக் கொண்டோம் அவரும் கட்சி பொறுப்பை ஏற்ற பிறகு ஆட்சியையும் மிகச் சிறப்பாக நடத்தினர்.
ஜெயலலிதா மறைவிற்கு பின் பல குழப்பங்கள் ஏற்பட்டது. இயக்கம் உடைய கூடாது என்றுதான் சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்தோம். காலச்சக்கரம் சுழன்ற பின் இப்போது எதிர்க்கட்சி தலைவராக இருப்பவரை அப்போது முதல்வராக சசிகலா அறிவித்தார். கட்சிக்காக எல்லா பணிகளையும் நான் ஆற்றி இருக்கிறேன். எனக்கு 2 வாய்ப்புகள் கிடைத்தது, ஆனால் கட்சி உடையக்கூடாது என்று பார்த்தேன்.
2016க்கு பின் தொடர்ந்து தேர்தலை நாம் சந்திக்கிறோம். 2016க்கு பின் வரிசையாக பல தேர்தலில் நாம் தோல்வி அடைந்துவிட்டோம். பாஜக உடன் கூட்டணி வைத்து இருந்தால் 2024ல் 30 இடங்களில் வென்று இருப்போம். வேலுமணி கூட அதை குறிப்பிட்டு பேசினார். கழகம் தொய்வோடு இருக்கிறது என்று எடப்பாடியிடம் கூறினோம். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் மறப்போம் மன்னிப்போம் என எடப்பாடி பழனிச்சாமி இடம் சொன்னேன். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுச்சிப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். மேற்கு மண்டலத்தில் இருந்து இந்த பயணம் தொடங்கி உள்ளது. இந்த பயணம் கிட்டத்தட்ட அதிமுக + பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் பயணமாக அமைந்துவிட்டது. இரண்டு கட்சிகளும் நெருக்கமாகும் அளவிற்கு பயணத்தில் பல முக்கியமான சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருகின்றன.

செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி மோதல்
இந்த பயணத்தில் அதிமுக டாப் மாஜி அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டு வருகின்றனர். கடம்பூர் ராஜு, முன்னாள் சபாநாயகர் தனபால் ஆர்.காமராஜ், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, வேலுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வருகின்றனர். அதிமுகவினர் மட்டுமன்றி பாஜகவினரும் கூட இந்த நடிப்பயணத்தில் கலந்து கொண்டு வருகின்றனர். உதாரணமாக பாஜகவின் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எல்.முருகன் ஆகியோர் இந்த பயணத்தில் கலந்து கொண்ட வருகின்றனர்.
ஆனால் மாஜி அமைச்சர் செங்கோட்டையன் இந்த பயணத்தில் கலந்துகொள்ளவில்லை. இத்தனைக்கும், அவர் கோபிச்செட்டிபாளையத்தில்தான் இருக்கிறார். வீட்டில்தான் இருக்கிறார். மாலை சில நிகழ்வுகளுக்கு கூட செல்கிறார். ஆனால் செங்கோட்டையன் கலந்து கொள்வது இல்லை.
செங்கோட்டையன் ஆலோசனை
சமீபத்தில்தான் தனக்கு நெருக்கமானவர்களுடன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஹெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் ஆலோசனை நடத்தியிருக்கிறார் செங்கோட்டையன். அந்த ஆலோசனையில், "திமுகவுக்கு வந்திடுங்களேன். உங்களுக்கான அங்கீகாரத்தை திமுக உங்களுக்குக் கொடுக்கும். நீங்கள் வந்தால் எனக்கு ரொம்ப சந்தோசம்னு என்னிடம் சொன்னார் முதல்வர்.
ஆனால், இப்போதைக்கு எந்த ஐடியாவும் இல்லை. காலம் எப்படி நகர்கிறதின்னு பார்ப்போம்னு மட்டும் சொல்லிட்டு வந்தேன். திமுகவுக்கு போனால் அமைச்சர் பதவி கிடைத்தாலும் கிடைக்கக்கூடும். ஆனா, சசிகலாவும் தினகரனும் 'தேர்தலுக்குள் அதிமுக நம் கைக்கு வந்துடும். நீங்கதான் பொதுச்செயலாளர் அல்லது ஒருங்கிணைப்பாளர். அதனால் எந்த அரசியல் முடிவையும் எடுக்காதீர்கள்னு சொல்றாங்க. நானும், அது தான் சரின்னு நினைக்கிறேன்" என்று செங்கோட்டையன் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
மனம் திறக்க போகும் செங்கோட்டையன்
கடந்த ஆறு மாதங்களாக எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. சில மாதங்களுக்கு முன் டெல்லி சென்ற அவர், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை இருமுறை சந்தித்தார். அப்போதே அவர் பாஜகவில் இணையவுள்ளார் என்ற பேச்சுக்கு வழிவகுத்தது. இடையில் அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என்றும் பேச்சுக்கள் வந்தன. அதிமுகவில் தான் ஓரம்கட்டப்படுகிறோம் என்று செங்கோட்டையன் நினைக்கிறார். கட்சியில் மூத்தவராக இருக்கும் நமக்கு மதிப்பு இல்லை என்று எடப்பாடி நினைக்கிறார். செங்கோட்டையனின் செயலை பார்க்கும் போது அவர் சண்டைக்கு தயாராக இல்லை என்று தோன்றுகிறது. ஆனால் செங்கோட்டையன் எடப்பாடிக்கு சமமானவர்.
ஆனால் இரண்டு தரப்பும் இன்னும் நேரடியாக மோதவில்லை. கட்சி இப்போதே பலவீனமாக உள்ளது என்பதால் எடப்பாடி நேரடியாக மோத ரெடியாக இல்லை. அப்படி மோதினால் சிக்கல் ஏற்படும் என்று எடப்பாடி நினைக்கிறார். தேர்தலுக்கு சிக்கலாகும் என்று எடப்பாடி நினைக்கிறார். எடப்பாடி யாரையும் கேட்காமல் முடிவு செய்கிறார். அவர் தோல்வியை தழுவுகிறார் என்பதே சிக்கல். இதனால் செங்கோட்டையன் அதிருப்தியில் இருக்கிறார்.. கட்சி பலமாக இருக்க வேண்டும் என்றே செங்கோட்டையனும் நினைக்கிறார்.. இதனால் அது தொடர்பான அறிவிப்பை செங்கோட்டையன் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications