புழல் சிறையா? டெல்லியா? செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை அடுத்து என்ன செய்யும்?
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்படுவாரா அல்லது டெல்லி கொண்டு செல்லப்படுவாரா என்பது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் ஷபீர் அகமது ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் விட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். தலைமைச் செயலக அலுவலகத்திலும் நேற்று நீண்ட நேரம் சோதனை நடத்தினர்.
நீண்ட சோதனைகளுக்குப் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக அமலாக்கத்துறை அதிகாரிகளால் நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கு நேற்று இரவு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது நெஞ்சுவலிப்பதாக கதறி அழுத அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் அது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை. செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்ட ஓமந்தூரார் மருத்துவமனைக்கு திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் பலரும் வந்தார்கள். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்பட பலரும் வந்து பார்த்து சென்றனர். பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று கடும் கண்டனம் தெரிவித்தனர்.
தற்போது மருத்துவமனையில் உள்ள செந்தில் பாலாஜியின் உடல் நிலையை எய்ம்ஸ் மருத்துவர்கள் பரிசோதனை செய்ய வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்பிறகு அவர் மருத்துவமனையில் இருப்பாரா அல்லது விசாரணைக்காக கொண்டு செல்லப்படுவாரா என்பது தெரியவரும் என்கிறார்கள்.
இதனிடையே எந்த வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்: அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது வேலைவாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த வழக்கில் பணம் திருப்பி வழங்கப்பட்டதாக சிலர் வழக்கு இருக்கும் போதே தெரிவித்தனர். பாதிபேர் வழக்கை வாபஸ் பெற்றுவிட்டனர். ஒட்டுமொத்தமாக வழக்கை தொடர புகார் கொடுத்தவர்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இது ஒருபுறம் எனில் அமலாக்கத்துறை ஏற்கனவே இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முயன்றது.
ஆனால் சம்மனை எதிர்த்து செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் முறையீடு செய்து இருந்ததால் நடவடிக்கை எடுக்கவில்லை. அது நிலுவையில் இருந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்தே அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. சோதனைக்கு பின்னர் சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில் தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கைது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தப்பி ஓடக்கூடியவர்களையே கைது செய்வார்கள் என்றும், அமைச்சர் போன்றவர்களை கூடுதல் ஆதாரங்களை திரட்டி, முழு விசாரணைக்கு பிறகே கைது செய்வார்கள் என்றும் கூறுகிறார்கள்.
உண்மையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைத்து செல்லும் போது ஏதாவது உடல்நலக்குறைவு பிரச்சனை இருப்பதாக கூறினால், அவர் விரும்பும் மருத்துவமனைக்கே போக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுவார்கள். ஆனால் அமலாக்கத்துறையே அவரை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளதால், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பதை உறுதிபடுத்துகிறது என்று மூத்த பத்திரிக்கையாளர் ஷபீர் அகமது ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "கைது செய்த 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி இருப்பதால், அவரை ஆஜர்படுத்த முடியுமா என்பது தெரியவில்லை. டாக்டர்கள் இவரது உடல் நிலை சிறப்பாக உள்ளது, அழைத்து செல்லலாம் என்று கூறினால் தான் அழைத்து செல்ல முடியும். நெஞ்சுவலி என்று இருப்பதால் இது எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை. ஒருவேளை அரஸ்ட்டை காட்ட வேண்டும் என்று அமலாக்கத்துறை நினைத்தால், நீதிபதியை மருத்துவமனைக்கே கூட நேரில் அழைத்து வந்து காட்டுவார்கள்.
அப்படி காட்டிய பிறகு செந்தில் பாலாஜியை புழல் சிறைக்கு கூட்டிச் செல்வார்களா, அல்லது வேறு எங்காவது டெல்லி தொடர்பான விசாரணை இருந்தால் டெல்லிக்கு கூட்டிச்செல்வார்களா.. டெல்லிக்கு கூட்டி செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்த வழக்கை பொறுத்தவரை டெல்லி அழைத்து செல்ல வேண்டியதில்லை. இங்கேயே அரஸ்ட் காட்டி ரிமாண்ட் செய்து நடவடிக்கை எடுப்பார்கள் " இவ்வாறு மூத்த பத்திரிக்கையாளர் சபீர் அகமது பிரபல ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.












Click it and Unblock the Notifications