எடப்பாடியின் தொடர் தோல்விகள்! தமிழருவிக்கு ஒரு எம்.பி. சீட்? காய் நகர்த்தும் அண்ணாமலை?
சென்னை: பாஜக சார்பாகத் தமிழருவி மணியன் ஒரு தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் கசிந்து வருகின்றன.
அரசியலே வேண்டாம் என்று வெளியே சென்றவர் தமிழருவி மணியன். அதை அவர் இரண்டு முறைக்கு மேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இறுதியாக ரஜினியால் ஏமாற்றமடைந்த தமிழருவி, இனி அரசியல் களத்திற்குள் வரப் போவதில்லை என்றார்.

அப்படி உறுதியாகச் சொன்ன காந்தியவாதியான தமிழருவி மணியன், இப்போது மீண்டும் மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அண்ணாமலைக்கு ஆதரவாக பாஜக ஆதரவை முன்வைத்து அரசியல் களத்திற்குத் திரும்பி உள்ளார்.
'அரசியலை விட்டுப் போவதாகச் சொன்ன நீங்கள் மீண்டும் வந்துவிட்டீர்களே?' என்று கேள்வி எழுப்பியதற்கு, 'நான் அரசியலை விட்டுப் போவது என் உரிமை. திரும்ப வருவதும் என் உரிமை. அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?' என்று ப்ளேட்டை மாற்றிப் போட்டு செய்தியாளர்களை மடக்கி வருகிறார்.
இதில் ஹைலைட் செய்தி என்னவென்றால், அவர் வருகின்ற 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பாகச் சென்னையில் ஏதேனும் ஒரு தொகுதியில் நிறுத்தப்படலாம் என்று ஒரு தகவல் கசிந்துள்ளது.

அப்படி ஒரு தகவலை ஊடகங்கள் முன்னால் போட்டு உடைத்துள்ளார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி. அவரது கணிப்பு என்ன? தமிழருவி எங்கே நிற்பார்?
அது பற்றி ரவீந்திரன் துரைசாமி, "பாஜக கூட்டணி இன்னும் முழுமை பெறவில்லை. ஆகவே, கூட்டணிக்குள் இன்னும் கட்சிகள் வரும். பாமக வரவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி காத்திருக்கிறார். அவருக்கு வட தமிழ்நாட்டில் பாமக வந்தால்தான் பலம் பெறும் என்று நினைக்கிறார்.
வலிமையான சின்னமாக இருந்த இரட்டை இலை ஸ்டாலின் முன்னால் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமியிடம் வலிமையான சின்னம் இருந்தும் வெற்றி பெற முடியவில்லை. அதற்கு ஸ்டாலின் பலம்தான் காரணம்.

எடப்பாடி பழனிசாமி காத்திருப்பதைப்போல் பாமகவுக்காக பாஜக காத்திருக்கவில்லை. வந்தால் நல்லது என்று நினைக்கிறார்கள். அதில் தவறு இல்லை. பல அணிகளாக அதிமுக உடைந்து கிடக்கிறது. அதனால் பலவீனமாகி உள்ளது.
இது சட்டசபைத் தேர்தல் இல்லை. இது பிரதமருக்கான தேர்தல். அதை மனதில் வைத்தே அதிமுகவினர் வாக்களிப்பார்கள். அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் பெரிய கொள்கை வித்தியாசம் இல்லை. மத்தியில் வலிமையான பிரதமர் வர வேண்டும் என நினைத்து அதிமுகவினரே மோடிக்கு ஓட்டுப் போடுவார்கள்.
அதை மனதில் வைத்துத்தான் திமுகவுக்கு எதிரான அதிமுக ஓட்டையும் சேர்த்து இழுக்கப் பார்க்கிறார் மோடி. ஆகவேதான் அவர் அதிமுக நல்லாட்சி என்றார். எம்.ஜி.ஆரைப் பாராட்டுகிறார். ஜெயலலிதாவைப் பாராட்டுகிறார். அப்படி இருந்தும் அவர் எடப்பாடி பழனிசாமி பெயரைச் சொல்லவில்லை.

ஆகவே, அதிமுகவின் வாக்குகள் பாஜகவுக்கு விழும் என்பது உறுதி. அதைத்தான் சமீபத்தில் வெளியான ஒரு சர்வே சொல்கிறது. இன்னும் தேர்தல் தேதி உறுதியாகவில்லை. அதுவரை காத்திருக்கலாம்.
பாஜகவுக்குள் மேலும் சில கட்சிகள் வரும். அது மட்டும் உறுதி. இப்போது தமிழருவி மணியன் போன்ற நல்லவர்கள் பாஜக கூட்டணிக்குள் வந்துள்ளார்கள். எந்த ஊழல் குற்றச்சாட்டும் சொல்ல முடியாதவர் தமிழருவி மணியன். அவர் நேர்மையானவர். அவருக்கு அரசியலில் ஒரு நல்ல பெயர் உள்ளது.
அவருக்கு ஒரு பிரச்சார வலிமை உள்ளது. நல்ல பேச்சாளர். இப்போதே அவர் பாஜகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்கிறார். கடுமையாக திமுகவை விமர்சிக்கிறார். அந்தப் பேச்சை மக்கள் கவனிக்கிறார்கள். அவரை ஒரு தொகுதியில் பாஜக நிறுத்தலாம். தாமரையிலேயே அவர் ஒரு தொகுதியில் நிறுத்தப்படலாம். அதற்கான வாய்ப்பு உள்ளது" என்கிறார்














Click it and Unblock the Notifications