நிர்வாண போராட்டம் அநாகரீகமானதா.. அப்படியானால் அந்த அளவுக்கு இறங்க தூண்டியவர்கள்??
தமிழக விவசாயிகள் ஏன் நிர்வாண போராட்டத்தை நடத்துகிறார்கள்?
Recommended Video
சென்னை: டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தியுள்ள நிர்வாண போராட்டம் இருவேறு கருத்துக்களை உருவாக்கியுள்ளது.
போராட்டங்கள் ஒவ்வொன்றும் ஒருவகை. நூதனங்கள், வினோதங்கள், அதிர்ச்சி, ஆபத்து என வடிவங்கள் எத்தகைய போராட்டமாக இருந்தாலும் அது எதிர்தரப்பை அசைத்து பார்க்க வைக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதே போராட்டங்களின் அடிப்படை.
சில மாதங்களுக்கு மெரினாவில் அரை நிர்வாண போராட்டத்துக்கு ஹைகோர்ட்டில் அய்யாக்கண்ணு அனுமதி கேட்டிருந்தார். ஆனால் நீதிபதியோ, போராட பல வழி இருக்க, எதற்காக அரை நிர்வாண போராட்டம், உங்களுடன் இருப்பவர்களுக்கும் அறிவுரை கூறுங்கள்" என்று அய்யாக்கண்ணுவுக்கு தெரிவிக்கப்பட்டது.
உலுக்கியது
முன்பு டெல்லியில் முழு நிர்வாணப் போராட்டத்தில் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது நாடே அதிர்ந்தது. ஒட்டுமொத்த விவசாய சமுதாயத்தையும் அது உலுக்கியது. ஒருபக்கம் விவசாயிகளின் இந்த செயல் முகம் சுழிக்க வைப்பதாக பலர் கூறினாலும், விவசாயிகள் வேறு வகையில் விளக்கம் தருகின்றனர் தங்களது போராட்டத்தை நியாயப்படுத்தி.
உண்ணாவிரதம்
ஆனால், எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்க ஆயிரம் வழி இருக்க... இப்படி நிர்வாணப் போராட்டம் அவசியம்தானா. அமைச்சர்கள், எம்பிக்கள், உள்ளனர். அவர்களிடம் தங்கள் கோபத்தையும், வலியையும் தெரியப்படுத்தலாம். வேண்டுமானால் அவர்கள் வீட்டு வாசற்படி முன்பு உட்கார்ந்து உண்ணாவிரதம் இருக்கலாம்.
முகம் சுளிப்பு
இதுபோன்ற போராட்டங்களை நடத்தினால் நாடே பின்னால் வரும் என்று சிலர் கூறுகிறார்கள். நிர்வாண போராட்டம் என்பது நம்மை நாமே மேலும் தாழ்த்திக் கொள்வதாகவே கருதப்படும் என்பது இவர்களது வாதம். வெளிநாட்டுக்காரர்கள் இதைப் பார்த்து முகம் சுளிக்க மாட்டார்களா என்பதும் இவர்களது வாதம்.
அவமானம், பசி
மறுபக்கம், விவசாயிகள் குமுறல் வேறாக உள்ளது. விவசாயிகளின் மனநிலையில் இருந்தும் இதை அணுக வேண்டியுள்ளது. உயிரை விட மானம் பெரிதுதான். ஆனால் அந்த மானத்தையே துறக்கும் அளவிற்கு இவர்கள் போக யார் காரணம்? சாதாரண மனநிலையில் இதை யாராலும் திடீரென செய்துவிட முடியாது. பல வருட தவிப்பு, அவமானம், பசி, நஷ்டம், தற்கொலைகள்தான் இப்படி ஒரு மனநிலைக்கு விவசாயிகளை இட்டுச் சென்றிருக்கிறது.
நமக்கு தலையெழுத்து
உண்மையிலேயே இதை பார்ப்பதற்கே சாமான்யனின் நெஞ்சு கசக்கி பிழிகிறது... பரிதாபம் பீறிட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள மக்களின் மனதை இந்த நிர்வாண போராட்டம் கரைக்கிறது... ஆனால் ஒரே தரப்பை தவிர.. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் "அந்த ஒரே ஒரு" நபரைதவிர... அவரை நேரில் பார்க்க அனுமதி கேட்டும் இத்தனை காலமாக மறுப்பு சொல்லப்பட்டு வருகிறது. ஒருவேளை விவசாயிகளை நேரில் கூப்பிட்டு பேசியிருந்தால், இந்த நிர்வாண கோலத்தை கூட விவசாயிகள் தேர்ந்தெடுத்திருக்க மாட்டார்கள். ஆனால் விதி... நமது தலையெழுத்து இப்படி போராட வேண்டும் என்று ஆகிவிட்டது.
மண்ணுதான்... நிர்வாணம்
நிர்வாண போராட்டத்தின் உண்மை அர்த்தம்தான் என்ன? "நிர்வாணமாக இருப்பது இவர்கள் இல்லை... இந்த மண்ணுதான்". இதுதான் இவர்களின் பதிலாக இருக்க முடியும்!!