நீங்க டெல்லிக்கு போங்க.. நான் வரேன்.. ஆதவ் அர்ஜுனாவை தனியாக சந்திக்க போகும் திருமா? என்ன நடக்குது?
சென்னை: திமுகவிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆதவ் முன்வைத்த நிலையில், திமுகவின் அழுத்தத்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார். பொதுவாக, கட்சியின் கட்டுபாடுகளை மீறும் சிறுத்தைகள் மீது கட்சித் தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் போது அதிகப்பட்சம் 3 மாதங்கள் மட்டுமே நீக்கி வைக்கப்படுவார்கள்.
இந்த காலக்கட்டத்தில் அவர்கள் விளக்கமளிக்க வேண்டும். அந்த விளக்கம் ஏற்கப்படும் பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு மீண்டும் அவர் கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுவார். விளக்கம் ஏற்கப்படாத நிலையில், அவர் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார். இந்த நிலையில் ஆதவ் மீது எடுக்கப்பட்ட சஸ்பெண்ட் நடவடிக்கை 6 மாத காலம் என்று சொல்கிறது.

6 மாத நீக்கம்: இந்த ஆறு மாத காலத்தில் அவர் விளக்கம் அளிக்க முடியும். இதற்கு முன்பு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களுக்கு 3 மாத காலம் என்கிற போது ஆதவ்வுக்கு மட்டும் ஏன் 6 மாத காலம் ? என்று ஆதவ் ஆதரவாளர்களாக இருக்கும் சிறுத்தைகள் மத்தியில் கேள்வி எழுந்து வருகிறது.
இது குறித்து சிறுத்தைகள் தரப்பில் விசாரித்தபோது, ''அடுத்த 6 மாதங்களில் தமிழக அரசியல் சூழல் நிறைய மாற்றங்களுக்கு உள்ளாகும். எங்கள் கட்சியே கூட திமுக கூட்டணியில் நீட்டிக்குமா? நீடிக்காதா? என தெரியாது. எது வேண்டுமானாலும் நடக்கும். திமுகவுக்கும் சிறுத்தைகளுக்கும் முரண்பாடுகள் அதிகரித்து கூட்டணியில் இருந்து சிறுத்தைகள் வெளியேறும் சூழல் உருவானால் அன்றைக்கு ஆதவ் அர்ஜுனா மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்.
அதற்காகத்தான் இந்த 6 மாத கால அவகாசம். ஏன்னா, தேர்தல் நெருங்கி வருகிற போதுதான் சிறுத்தைகளை திமுக எப்படி கையாளப் போகிறது என தெரியும். அதனை அறிந்துகொள்வதற்காகத்தான் இந்த 6 மாத கால அவகாசம். இதனை அதாவது சஸ்பெண்ட் செய்யப்போகிறோம்; அதைப் பற்றி வொர்ரி பண்ண வேண்டாம். நீங்க டெல்லிக்கு போங்க.
அங்கு நாம் சந்திப்போம் என ஆதவ் அர்ஜுனாவிடம் தெரிவித்து விட்டார் திருமா. சஸ்பெண்ட் நடவடிக்கையை ஆதவ்விடம் தெரிவித்தப் பிறகுதான் திமுக தலைமைக்கே, நடவடிக்கை எடுத்துள்ளோம் என சொல்லப்பட்டது. அதனால், இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை என்பது திமுகவிடமிருந்து வரும் எதிர்மறை அழுத்தங்களை குறைப்பதற்காகத்தான். டெல்லியில் திருமாவும் ஆதவ்வும் சந்தித்து நிறைய பேசுவார்கள் '' என்று சுட்டிக்காட்டுகிறார்கள் சிறுத்தைகள் கட்சியில் உள்ள ஆதவ் ஆதரவாளர்கள்.
அறிக்கை: முன்னதாக ஆதவ் அர்ஜுனாவை திருமாவளவன் சஸ்பெண்ட் செய்வதாக வெளியிட்ட அறிக்கையில்,
1. கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா அவர்கள் அண்மைக் காலமாக கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்துக்குத் தெரிய வந்தது.
2. இது குறித்து கடந்த 07-12-2024 அன்று கட்சியின் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணித் தோழர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.
3. கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களையும் மீறி, தொடர்ச்சியாக அவர் எதிர்மறையாக செயல்பட்டு வருவதும்; அத்தகைய செயல்பாடுகள், மேலோட்டமாக நோக்கினால் கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாகத் தோன்றினாலும்; அவை கட்சி மற்றும் தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில், பொதுவெளியில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.
4. இத்தகைய போக்குகள், கட்சிப் பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கும் வகையில், கட்சிக்குள்ளேயே ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கட்சியினருக்கு இது ஒரு "தவறான முன்மாதிரியாக" அமைந்து விடும் என்கிற சூழலையும் உருவாக்கியுள்ளது.
5. இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியின் நலன்களை முன்னிறுத்தி, கட்சித் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர்கள் ஆகிய மூவர் உள்ளடங்கிய தலைமை நிர்வாகக் குழுவில், ஆதவ் அர்ஜூனா அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
6. அதன்படி, ஆதவ் அர்ஜூனா அவர்கள் கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார்., என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications