விஜய்க்கும் எகிறும் பிரஷர்..இன்று முடிவை அறிவிக்கும் விசிக –2 கம்யூனிஸ்ட்கள்! தீவிர ஆலோசனை
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் வென்று தனிப்பெரும் கட்சியாக வந்தாலும் கூட மெஜாரிட்டி இல்லாததால் விஜய் முதல்வராக பதவியேற்க முடியாமல் தவித்து வருகிறார். திமுக கூட்டணியில் உள்ள 2 கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் விசிகவிடம் 6 எம்எல்ஏக்கள் உள்ளதால் அவர்களிடம் விஜய் ஆதரவு கேட்டுள்ளார். இவர்கள் ஆதரவு கொடுத்தால் விஜய்யால் எளிதாக மெஜாரிட்டியை எட்ட முடியும். இந்நிலையில் தான் 3 கட்சிகளும் விஜய்க்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா? என்பது பற்றி தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில் சற்று நேரத்தில் முடிவுகளை அறிவிக்க உள்ளதால் தவெகவினர் திக்திக் மனநிலையில் உள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக போட்டியிட்டாலும் கூட திமுக, அதிமுக என்று 2 பெரும் கட்சிகளை வீழ்த்தி உள்ளது. இந்த தேர்தலில் தவெகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இருப்பினும் தனிப்பெரும் கட்சியாகி உள்ளது. மெஜாரிட்டிக்கு 118 இடங்கள் வேண்டும். ஆனால் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

தற்போது 5 எம்எல்ஏக்களை கொண்டுள்ள காங்கிரஸ், தவெக உடன் சேர்ந்துள்ளது. இருப்பினும் கூட மெஜாரிட்டிக்கு இன்னும் 5 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவையாக உள்ளது. மெஜாரிட்டியை நிரூபித்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்துவிட்டார்.
2 கம்யூனிஸ்ட் - விசிகவிடம் ஆதரவு
இதனால் விஜய், திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விசிகவிடம் உள்ள தலா 2 எம்எல்ஏக்கள் என்று மொத்தம் 6 பேரிடம் ஆதரவு கோரியுள்ளார். இதுதொடர்பாக கட்சியின் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோருககு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் செயலாளர் சண்முகம் ஆகியோரை கட்சியின் இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் நேற்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி ஆதரவு கோரினார். இதையடுத்து இன்று ஆலோசனை நடத்தி முடிவுகளை அறிவிப்பதாக தெரிவித்துள்ளன.
இன்று 10 மணிக்கு கூட்டம்
அதன்படி இன்று காலை 10 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயற்குழு கூட்டம் தனித்தனியே தொடங்கியது. அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சென்னையில் செயற்குழு உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் விசிகவின் உயர்மட்ட குழு கூட்டம் திருமாவளவன் தலைமையில் மாலை 5 மணிக்கு ஜூம் மீட்டிங்கில் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் தவெகவை ஆதரிப்பதா? இல்லையா? என்பது பற்றி விவாதித்து முடிவெடுக்கப்பட உள்ளது.
தவெகவிற்கு முக்கிய நாள்
இது தவெகவினரை திக்திக் மனநிலையில் வைத்துள்ளது. ஏனென்றால் இந்த 3 கட்சிகளின் எம்எல்ஏக்களின் ஆதரவு இன்றி விஜய்யால் முதல்வராக முடியாது என்பதால் இன்றைய தினம் விஜய் மற்றும் தவெகவினருக்கு மிகவும் முக்கிய நாளாகும். இந்த 3 கட்சிகளின் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக வர வேண்டும் என்று தவெகவினர் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
ஸ்டாலின் மீறி போவார்களா?
முன்னதாக நேற்று சென்னையில் முதல்வர் ஸ்டாலினை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், விசிக தலைவர் தொல் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்டவர்கள் சந்தித்து பேசினர். அப்போது கூட்டணியிலேயே தொடர வேண்டும் என்று அவர்களிடம் வலியுறுத்தினார். அதுமட்டுமின்றி விஜய் மெஜாரிட்டியை நிரூபிக்காவிட்டால் அதிமுகவும், திமுகவும் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க உரிமை கோருவது பற்றி விவாதிக்கப்பட்டது. ஆனால் அதில் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
இப்படியான சூழலில் 3 கட்சிகளின் இன்றைய நிலைப்பாடு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டாலின் சொன்னதை கேட்டு 3 கட்சிகளும் திமுக கூட்டணியில் தொடருமா? இல்லாவிட்டால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி ஆதரவு நிலைப்பாட்டை எடுக்குமா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.












Click it and Unblock the Notifications