நிலவை விட நெருக்கமாக வரும் விண்கல்.. பூமிக்கு கண்டிப்பா ஆபத்து இருக்கு! இஸ்ரோ எச்சரிக்கை
சென்னை: விண்கற்களால் பூமிக்கு ஆபத்து இருக்கிறது என தொடர்ந்து விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்த சில ஆண்டுகளில் பூமிக்கு நெருக்கமாக, வெறும் 29,000 கி.மீ தொலைவில் விண்கல் ஒன்று கடந்து செல்ல இருக்கிறது. இது குறித்து இஸ்ரோ எச்சரித்திருக்கிறது.
உலகம் முழுவதும் விண்வெளி துறையின் மீதான முதலீடுகள் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. ஆனால் ஏன் நாம் விண்வெளி துறையின் மீது அதிக கவனம் செலுத்துகிறோம்? என்று அடிக்கடி பலரும் கேள்வி எழுப்புகின்றனர். நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி, வறுமை, வேலையின்மை இதெல்லாம் இருக்கும்போது ஏன் விண்வெளி துறைக்கு கோடி கோடியாக அள்ளி கொடுக்கிறோம் என்று கேள்வி எழுந்தது. அதற்கான பதிலை விஞ்ஞானிகள் இவ்வாறு கூறினர்.

அதாவது, “நாம் இருக்கும் உலகம் ஏராளமான பேரழிவுகளை சந்தித்து வந்திருக்கிறது. இதில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான உயிர்கள் அழிந்துவிட்டன. மீதம் இருக்கும் உயிரினங்களில் நாமும் ஒன்று. இனியும் ஒரு அழிவு வராது என்று சொல்ல முடியாது. நிச்சயம் ஏதேனும் ஒரு விண்கல் பூமியை தாக்கினால் ஒட்டு மொத்த உலகமும் அழிந்துவிடும். எனவே இதிலிருந்து நாம் தற்காத்துக் கொள்ள புதிய வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது. அதனால்தான் விண்வெளி துறைக்கு அதிக முதலீடுகள் அவசியமாகிறது” என்று பல்வேறு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இவர்கள் கூறியதை போல எதிர் காலத்தில் விண்கற்கலால் பூமிக்கு ஆபத்து அதிகம் இருக்கிறது என ஆய்வுகள் தெளிவுப்படுத்தி உறுதி செய்திருக்கின்றன. இப்படி இருக்கையில் பூமிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 'அபோபிஸ்' (God of chaos) எனும் விண்கல், விரைவில் பூமியை தாக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
பூமிக்கு நெருக்கமாக பல விண்கற்கள் இருக்கின்றன. இருப்பினும் இவை அனைத்தும் பூமியை தாக்கிவிடாது. குறிப்பிட்ட சில கற்கள் மட்டுமே ஆபத்தானவையாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அதாவது 0 என்கிற அளவில் வைக்கப்பட்டிருக்கும் கற்கள் பூமியை தாக்குவதற்கு வாய்ப்பு கிடையாது. இதே 10 என்கிற அளவில் வைக்கப்பட்டிருக்கும் கல், நிச்சயம் பூமியை தாக்கும். இந்த அளவீட்டில் 'அபோபிஸ்' எனும் விண்கல் 4வது இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
அதாவது இந்த விண்கல் 29,483 கி.மீ தொலைவில் பூமியை கடந்து செல்லும். இது மிகப்பெரிய தூரமாக தெரியலாம். ஆனால், பூமியின் சுற்றளவை விட இந்த தூரம் குறைவானதுதான்.
கடந்த 2004ம் ஆண்டு இந்த விண்கல் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இது 2029ல் பூமியை தாக்கும் என்று கணிக்கப்பட்டது. ஒருவேளை தவறினால் 2036ல் பூமியை தாக்கும். அப்போது மிஸ் ஆனால் 2068ல் பூமியை தாக்கும் என்று இஸ்ரோ கணித்திருந்தது.
இது பூமியை தாக்கினால், 3 கி.மீ ஆழத்தில், 10 கி.மீ அகலத்திற்கு ஒரு பெரிய பள்ளத்தை உருவாக்கும். இந்த கல் விழுந்த இடத்தை சுற்றி 320 கி.மீ பரப்பளவுக்கு 10 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உருவாகும். இந்த பரப்பளவில் ஒரு கட்டிடம் கூட மிஞ்சாது. இந்த தாக்கத்தால் ஏற்படும் புகையானது வானத்தை சுற்றி படரும். இதனால் சூரிய ஒளி கூட பூமிக்குள் வரமுடியாது. எனுவே செயற்கையான குளிர்காலம் உருவாகும். லட்சக்கணக்கானோர் உயிரிழப்பார்கள். கோடிக்கணக்கானோர் படுகாயமடைவார்கள். பூமியின் பொருளாதாரம் கடும் பாதிப்புக்கு உள்ளாகும்.
ஆனால், நல்வாய்ப்பாக இந்த அபோபிஸ் விண்கல் பூமி மீது மோதாது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இருப்பினும் இதனை அவர்கள் துல்லியமாக கண்காணித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications