கூட்டணிக்கு டிரம்பை கூட ஸ்டாலின் அழைப்பார்... அமைச்சர் ஜெயக்குமார் நக்கல்
சென்னை: மு.க.ஸ்டாலின் அமெரிக்க அதிபர் டிரம்பை கூட்டணிக்கு அழைத்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
கூட்டணி தொகுதி பங்கீட்டில் எந்த இழுபறியும் இல்லை என்றும் அதிமுக மெகா கூட்டணி அமைத்துள்ளது. இது வெற்றி கூட்டணியாக அமையும் என்றும் அவர் கூறினார்.
சென்னை திருவான்மியூரில் அதிமுக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:
‘நாற்பதும் நமதே’
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்ப்பதில் எந்த இழுபறியும் கிடையாது. கடந்த தேர்தலின்போது 37 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இப்போது ‘நாற்பதும் நமதே' என்பதே எங்கள் கோஷமாகும் என்றார்.
ஸ்டாலினுக்கு பயம்
விஜயகாந்தை சந்தித்த பிறகு மு.க.ஸ்டாலின் அரசியல் நோக்கம் இல்லை என்று கூறி இருக்கிறார். அவர் பயத்தின் உச்சத்தில் உள்ளார். அதனால் தான் வாய் குழறுகிறது. ஸ்டாலினின் இன்றைய நிலை இதுதான். மெகா கூட்டணி அமைந்தது திமுகவினாரால் ஜீரணிக்க முடியவில்லை
சக்தி வாய்ந்த மெகா கூட்டணி
ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து விட்டோம். பலம் பொருந்திய சக்தி வாய்ந்த மெகா கூட்டணியாக உள்ளோம். அந்த கட்சிகள் அ.தி.மு.க. அணிக்கு போகக்கூடாது என ஸ்டாலின் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறார். அது எடுபடப்போவதில்லை.
எனக்கு தெரியாது
தேசிய முற்போக்கு கூட்டணி என்று பாஜக தலைவர் அமித்ஷா கூறுவது பற்றி எனக்கு தெரியாது. அ.தி.மு.க. என்பது ஒரு மாபெரும் இயக்கம். ஆரம்பத்தில் இருந்து அ.தி.மு.க. தலைமையில் தான் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இந்த கூட்டணிக்கு பெயர் கொடுப்பதை அ.தி.மு.க. கட்சி தலைமை தான் முடிவு செய்யும்.