சிங்கம் களமிறங்கிடிச்சு..உற்சாக உபிகள்! செந்தில் பாலாஜிக்கு மின்சாரத் துறை? குறுக்கே ஆளுநர் வந்தா?
சென்னை: சட்டவிரோத பணப்பறிமாற்ற அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சுமார் 450 நாள் சிறைவாசத்திற்கு பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் ஏற்கனவே வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அவருக்கு ஒதுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதே நேரத்தில் பொன்முடி விவகாரத்தைப் போல ஆளுநர் செந்தில் பாலாஜி அமைச்சர் நியமன வழக்கிலும் சிக்கலை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில் திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார்.

சுமார் 450 நாட்களுக்கும் மேலாக செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் பலமுறை அவரது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட முறை அவரது நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் தன் மீது பதியப்பட்ட வழக்குகள் தொடர்பாக செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் மீதான உத்தரவு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. அவரது நீதிமன்ற காவல் நீட்டிப்பு, குற்றச்சாட்டு பதிவு போன்ற விவகாரங்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தான் விசாரிக்கப்படுகிறது. இந்நிலையில் சட்டவிரோத பணப்பறிமாற்ற அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனையடுத்து நேற்று மாலை புழல் சிறையில் இருந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து கலைஞர் நினைவிடத்தில் செந்தில் பாலாஜி மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில் அவருக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக அமைச்சர் பதவி விரைவில் ஒதுக்கீடு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அக்டோபர் மாதத்தில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் எனவும் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவியோடு செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவியும் மேலும் சில ஜூனியர்களுக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் செந்தில் பாலாஜி ஏற்கனவே கவனித்து வந்த மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.
தற்போது மின்சார துறையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையை அமைச்சர் முத்துச்சாமி ஆகியோர் கூடுதலாக கவனித்து வருகின்றனர். இந்த நிலையில் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளிவந்துள்ளதால் அவர் ஏற்கனவே வகித்து வந்த துறைகள் அவருக்கே ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நீதிமன்ற வழக்கு மற்றும் நிபந்தனைகளை காரணம் காட்டி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி செந்தில் பாலாஜிக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஏற்கனவே நீதிமன்ற தீர்ப்பு காரணமாக அமைச்சர் பொன்முடி பதவி இழந்த நிலையில், மீண்டும் சட்ட போராட்டங்களுக்குப் பிறகே அவர் அமைச்சராக ஆளுநரால் பதவி பிரமானம் செய்து வைக்கப்பட்டார். . இதன் காரணமாக செந்தில் பாலாஜிக்கும் இதே போல் நிலை ஏற்படலாம் எனவும், சட்ட போராட்டங்களுக்குப் பிறகே அவர் அமைச்சராக நியமனம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications