ஒரே வாரத்தில் 3 துப்பாக்கி சூடு.. இது என்ன தமிழகமா இல்லை வடமாநிலமா?.. மு.க ஸ்டாலின் காட்டம்!
சென்னை: தமிழகத்தில் ஒரே வாரத்தில் மூன்று துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளது.. இது என்ன தமிழகமா, இல்லை வடமாநிலமா என்று திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக துப்பாக்கி சம்பவங்களும், பொது இடங்களில் கொடூர கொலைகளும் அதிகரித்துள்ளன. இரண்டு நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த துப்பாககி சூடு , இன்று பழனியில் நடந்த துப்பாக்கி சூடு என்று அடுத்தடுத்து கொடூர சம்பவங்கள் நடந்து வருகிறது.
அதேபோல் இடையில் இன்று மதுரையில் இளைஞர்கள் ஒருவர் நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவமும் நடந்தது.
என்ன நடந்தது
சென்னையில் நடந்த துப்பாக்கி சூட்டில் குற்றவாளிகளை தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு கைது செய்தது. இன்று பழனியில் நடந்த துப்பாக்கி சூடு தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியானது. இந்த நிலையில் தமிழகத்தில் துப்பாக்கி சூடு கலாச்சாரம் அதிகரித்துவிட்டதாக எதிர்கட்சித் தலைவர் திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின் இது தொடர்பாக தெரிவித்துள்ள கருத்தில், தமிழகத்தில் ஒரே வாரத்தில் 3 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி, மக்களிடையே பதற்றத்தைப் பரப்பி உள்ளது. வடமாநிலங்களைப் போல, தமிழகத்திலும் துப்பாக்கிக் கலாச்சாரம் தலைதூக்கி வருகிறதோ என்ற அய்யப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை
சென்னை சவுகார்பேட்டையில் மூன்று கொலைகள்; கொலை செய்ய, காஞ்சிபுரத்தில் கொலையாளிகள் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஒருவர் கொலை; பழனியில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலத்த காயம்.
தமிழகமா இது?
தமிழகத்தில் துப்பாக்கிக் கலாச்சாரம் தொடர்ச்சியாகத் தலைவிரித்து ஆடுகிறது. கள்ளத்துப்பாக்கிகள் கணக்கற்றுப் போய் விட்டன. இது என்ன தமிழகமா, இல்லை வடமாநிலமா ? காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமி, சுயவிளம்பரத்திலும், அதற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்வதிலும் மட்டும் முக்கிய கவனம் செலுத்துகிறாரா?, என்று திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார் .