வெளிநாட்டு கைக்கடிகாரங்கள்.. கட்டு கட்டாக ரூ.2000 நோட்டுகள்.. வசமாக சிக்கும் ஜெகத்ரட்சகன்
சென்னை: திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மகள் வீட்டில் 7 வெளிநாட்டு கை கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கட்டு கட்டாக 2000 ரூபாய் நோட்டுக்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சவீதா மருத்துவமனையின் பிண அறையில் இருந்தும் கட்டுக்கட்டாக பணம் சிக்கியுள்ளதால் ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வரும் வருமான வரி ரெய்டு ஆக்டோபஸ் கரங்களாக நீண்டு வருகிறது.
அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி.யும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஜெகத்ரட்சகன், கல்வி நிறுவனம், மருத்துவமனை உட்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக இவர் மற்றும் இவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்ததை தொடர்ந்து, அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும், வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்தது தொடர்பான குற்றச்சாட்டில், அவருக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை அப்போது முடக்கியது.

இந்நிலையில், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை முறையாக கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக ஜெகத்ரட்சகன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அவருடன் தொடர்புடைய 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த 5ஆம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் உள்ள அவரது வீடுகள், ரேலா மருத்துவமனை, பாலாஜிமருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆழ்வார் ஆய்வு மையம், அடுக்குமாடி குடியிருப்புகள், நியூ டெல்டா நிறுவன அலுவலகம், அக்கார்டு நட்சத்திர ஓட்டல் மற்றும் ஜெகத்ரட்சகனின் உறவினர்கள், நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்கள், புதுச்சேரியில் அவருக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காஞ்சிபுரத்தில் உள்ள மதுபான ஆலைகள், அங்கு பணியாற்றும் ஊழியர் வீடு என பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடைபெற்றது.
இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத பணம் சிக்கியதாக கூறப்படுகிறது. வருமான வரி சோதனை நடக்கும்போதே, அமலாக்கத் துறை அதிகாரிகளும், சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ஜெகத்ரட்சகனிடம் விசாரணை நடத்தினர்.
ஒருசில இடங்களில் சோதனை முடிந்த நிலையில், ஜெகத்ரட்சகனின் வீடு, கல்வி நிலையங்கள், அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் 5வது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. ஜெகத்ரட்சகனின் வீட்டில் இருந்து இரண்டு கருப்பு பைகள் கைப்பற்றப்பட்டதாகவும் அந்த கருப்பு நிற பைகளில் பல கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பல இடங்களில் சோதனை ஏற்கனவே முடிவடைந்த நிலையில், ஜெகத்ரட்சகனின் வீடு, கல்வி நிலையங்கள், அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் 5-வது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை அடையாறில் உள்ள அவரது வீடு, தி. நகரில் உள்ள அவரது அலுவலகத்திலும் வருமான வரித் துறையினரின் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஜெகத்ரட்சகன் மகளின் வீட்டில் இருந்து வெளிநாட்டு கைக்கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு 2.45 கோடி ரூபாய் மதிப்பு இருக்கலாம் என வருமான வரித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே போல ஜெகத்ரட்சகன் மகள் வீட்டில் இருந்து கட்டு கட்டாக 2000 ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதே போல சவீதா மருத்துவமனையின் பிண அறையில் இருந்து கட்டு கட்டாக ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாரத் பல்கலைக்கழகம், பாலாஜி மருத்துவக் கல்லூரி, சவீதா கல்வி குழுமம் ஆகியவற்றிலும் சோதனை தொடர்ந்து நடக்கிறது. இன்றும் சோதனை நீடிக்கும் நிலையில், இந்த சோதனைகளின் போது கைப்பற்றிய ஆவணங்கள் குறித்த முழுமையான விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications