கோவை குறி! கலைஞர் நூற்றாண்டு நிறைவு+ தேர்தல் வெற்றி.. முப்பெரும் விழாவாக நடத்த திமுக திட்டம்
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றியை கொண்டாடும் விதமாக ஜூன் 14-ம் தேதி கோவையில் முப்பெரும் விழா நடந்த திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை பெற்று பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி மத்தியில் ஆட்சியை அமைக்கிறது. அதேநேரம் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றிருக்கின்றன.

சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பார்த்தால் திமுக மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 221 தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறது. வடமாவட்டங்களான திருவள்ளூர், அரக்கோணம் மத்திய மாவட்டங்களான பெரம்பலூர், கரூர், திருச்சி கொங்கு மண்டலமான கோவை, நாமக்கல், நீலகிரி, தென் மாவட்டங்களான மதுரை, தென்காசி, தூத்துக்குடி ஆகியவற்றில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் திமுக வழக்கத்தை விட அதிக வாக்குகளை பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
அதிமுக வலுவாக இருப்பதாக கருதப்படும் மேற்கு மண்டலத்திலும் திமுக அதிக வாக்குகளை வென்றிருக்கிறது. இந்நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் ஜூன் 14ம் தேதி கோவையில் முப்பெரும் விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்று மாலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்களின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அதாவது,
I.தமிழ்நாட்டின் திட்டங்களுக்காக நிதி உரிமை, மொழி உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் அயராது குரல் கொடுப்போம்.
II. நடுத்தர மாணவர்களின் கனவை சிதைக்கும் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் அல்லது நீட் தேர்வு வேண்டாம் என சொல்லும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார், இந்த கோரிக்கையை கனிவுடன் கவனித்து ஒன்றிய அரசுக்கு உணர்த்த வேண்டும்.
III. நாடாளுமன்ற வளாகத்தில் அகற்றப்பட்ட தேசத் தலைவர்களின் சிலைகளை அதே இடத்தில் வைக்க வேண்டும்.
IV. நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் வெற்றியை தந்த தமிழக மக்கள், வழிநடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.
V. வரும் ஜூன் 14ல் கோவையில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம் உட்பட முப்பெரும் விழா நடத்தப்படும்.
என திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனால் திமுக தொண்டர்கள் உற்சாகமடைந்திருக்கின்றனர். மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெற்றிருக்கிறது. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு பின்னர் 2019 லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளை திமுக கைப்பற்றியிருந்தது. அதேபோல 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. தற்போது இந்த ஆண்டு லோக்சபா தேர்தலிலும் திமுக மகத்தான வெற்றியை கட்சி பெற்றிருக்கிறது.
இந்த தேர்தலில் கோவையில் அண்ணாமலை களமிறங்கிய நிலையில் கோவை தொகுதியை கூட்டணிக்கு கொடுக்காமல் திமுகவே நேரடியாக களம் கண்டது. அதில் அண்ணமலையை வீழ்த்தி வெற்றியும் பெற்றது. இப்படி இருக்கையில் கோவையிலேயே முப்பெரும் விழாவை நடத்த திட்டமிட்டிருப்பது அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications