அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்.. உண்ணாவிரத போராட்டத்தில் குதித்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர்!
சென்னை: ஜாக்டோ ஜியோ அமைப்பினர், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதால், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (மார்ச் 23) மாவட்டத் தலைநகரங்களில், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ அறிவித்து இருந்தது. இந்நிலையில் இன்று பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும்; ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையில் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் இன்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் டாடாபாத் சிவானந்தா காலனியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் நடக்கும் போராட்டத்தில் 300க்கும் அரசு ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி திட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், திருநெல்வேலி, சேலம், திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர் உள்பட அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி உள்ளனர்.
தங்களின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவி சாய்க்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றனர். அடுத்தகட்டமாக முழு நேர போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications