வன்னியர்களுக்கு எதிராக சூர்யாவா?.. விடாத டிரெண்ட்.. வடஇந்தியர்களும் ட்வீட்.. என்ன நடக்கிறது?
சென்னை; ஜெய் பீம் படத்தில் வன்னியர்களுக்கு எதிராக திட்டமிட்டு காட்சிகளை வைத்ததாக நடிகர் சூர்யாவிற்கு எதிராக இணையத்தில் நெட்டிசன்கள் சிலர் ட்வீட் செய்து வருகிறார்கள். சில வட இந்தியர்களும் இணையத்தில் படத்திற்கு எதிராக கடுமையாக ட்வீட் செய்து வருகிறார்கள்.
நடிகர் சூர்யா நடிப்பில் ஜெய் பீம் படம் வெளியாகி கிட்டத்தட்ட 2 வாரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. வெளியான நாளில் இருந்தே இணையம் முழுக்க பல்வேறு காரணங்களுக்காக படம் வைரலாக பேசப்பட்டு வருகிறது. படம் ஒரு பக்கம் மாஸ் ஹிட் ஆகி சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வெளியான இந்த படம் ராஜ்கண்ணு என்பவரின் வாழ்க்கை வரலாற்றையும், இதற்காக முன்னாள் நீதிபதி சந்துரு நடத்திய சட்ட போராட்டம் பற்றியும் பேசுகிறது. தொடக்கத்தில் இந்திக்கு எதிராக இந்த படத்தில் வைக்கப்பட்ட காட்சிகள் காரணமாக வடஇந்தியர்கள் சிலர் இந்த படத்தை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

பாமக
இந்த படத்தில் வன்னியர்களுக்கு எதிராக காட்சிகள் வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த படத்தில் வில்லனாக வரும் எஸ்.ஐ. பாத்திரத்துக்கு குருமூர்த்தி என்று பெயர் வைக்கப்பட்டது, காடுவெட்டி குருவை குறிப்பது போல இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு அது சர்ச்சையாகி உள்ளது. அதேபோல் இவரின் வீட்டில் வன்னியர்களின் குல சின்னமான அக்னி கலசத்தை குறிக்கும் வகையில் காலண்டரில் சின்னம் வைத்து இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வைரல்
இதன் காரணமாக பாமகவினர் இந்த படத்திற்கு எதிராக கொதித்து போய் உள்ளனர். பாமகவினர் மட்டுமின்றி வன்னியர் சங்கங்களும் இந்த படத்திற்கு எதிராக கொதித்து போய் உள்ளனர். ஜெய் பீம் பட விவகாரத்தில் வன்னியர்களை அவமதிக்கும் காட்சிகளை நீக்கி 7 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. வன்னியர் சங்கம் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் மன்னிப்பு கேட்காவிட்டால், ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகாவுக்கு வன்னியர் சங்கம் சார்ப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

விளக்கம்
இதற்கு பல முறை நடிகர் சூர்யா விளக்கம் அளித்துவிட்டார். இன்று படத்தின் இயக்குனர் ஞானவேலும் விளக்கம் அளித்துவிட்டார். இந்த நிலையில்தான் வன்னியர்களுக்கு எதிராக சூர்யா செயல்படுவதாக ட்வீட்டரில் பாமகவினர், வன்னியர்கள் பலர் ட்வீட் செய்து வருகிறார்கள். இதற்காக #SuriyaHatesVanniyars என்ற டேக்கில் ட்வீட் செய்யப்பட்டு வருகிறது.

ட்வீட்
வன்னியர் குல சத்திரியர்கள் சின்னமான அக்னி கலசத்தை அவமதித்த ஜெய்பீம் படத்தையும், படக்குழுவையும் வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறி பாமகவினர் பலர் ட்வீட் செய்து வருகிறார்கள். பல்வேறு வட மாவட்டங்களில் சூர்யா ரசிகர் மன்றத்தில் இருக்கும் வன்னியர்கள் வெளியேறுவதாகவும், ரசிகர் மன்றங்கள் கலைக்கப்படுவதாகவும் பலர் இந்த டேக்கில் ட்வீட் செய்துள்ளனர்.

சூர்யா பேனர்
சூர்யா பேனர்களை கிழித்து சில பாமகவினர் இந்த டேக்கில் ட்வீட் செய்து வருகிறார்கள். இது போக வடஇந்தியாவில் சில சாதி ஆதரவாளர்கள் இந்த டேக்கில் சூர்யாவிற்கு எதிராக ட்வீட் செய்து வருகிறார்கள். சத்திரியர்களுக்கு எதிராக பேச கூடாது, சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி வடஇந்தியாவில் உள்ள சில இடைநிலை சாதி அமைப்புகள், சூர்யாவிற்கு எதிராக டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்த படம் அரசியல் ரீதியாக மிகவும் வலுவான படம்.

வலுவான படம்
போலீஸ் அராஜகம் தொடங்கி நீதி வரை பல விஷயங்களை இந்த படம் பேசி உள்ளது. கோலிவுட்டின் அடையாளமாக படம் மாறி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் ஒரு சில காட்சிகளுக்காக படத்தை இப்படி தவறாக டிரெண்ட் செய்வதாக சூர்யா ரசிகர்களும், சினிமா ஆர்வலர்களும் குற்றஞ்சாட்டி உள்ளனர்.












Click it and Unblock the Notifications