என்னாச்சு? இளையராஜாவை மிக காட்டமாக விமர்சித்த ஜேம்ஸ் வசந்தன்- அதிர்ச்சியில் சினிமா உலகம்!
சென்னை : இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் இளையராஜா மட்டமான மனிதர் என கடுமையாக விமர்சித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சினிமா உலகில் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இளையராஜா பேசும்போது, கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை இழிவு செய்யும் வகையில் பேசியதாகச் சுட்டிக்காட்டியுள்ளார் ஜேம்ஸ் வசந்தன்.
ஆன்மீகத்திற்குள் செல்பவர்கள் முதிர்ச்சியும், சகிப்புத்தன்மையும் அடையவேண்டும், ஆனால், இளையராஜா ஆன்மீகத்திற்குள் போகப் போக அவர் கேவலமாகப் பேசுகிறார் என விமர்சித்துள்ளார் ஜேம்ஸ் வசந்தன்.

ஜேம்ஸ் வசந்தன்
சுப்ரமணியபுரம் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்தவர் ஜேம்ஸ் வசந்தன். இவர் பல முன்னணி நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். இந்நிலையில், ஜேம்ஸ் வசந்தன், இசையமைப்பாளர் இளையராஜா பற்றி விமர்சித்துப் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக அரசை விமர்சிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வரும் ஜேம்ஸ் வசந்தன், இளையராஜாவை காட்டமாகச் சாடியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

மட்டமான மனிதர்
சமீபத்தில் கலாட்டா யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் இளையராஜாவை மட்டமான மனிதர் என விமர்சித்துள்ளார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். அந்த பேட்டியில் ஜேம்ஸ் வசந்தன் பேசுகையில், "இசையமைப்பாளர் இளையராஜா தான் என்னுடைய குரு. அவருடைய பாடல்களைக் கேட்டுத் தான் இசையை கற்றுக்கொண்டேன். இன்றைக்கு என்னுடைய அடையாளம், அங்கீகாரம், எனக்கு கிடைத்த வெற்றி எல்லாமே அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட இசையால் தான். ஆனால், இளையராஜா என்கிற தனிமனிதன் மேல் எனக்கு காட்டமான விமர்சனம் உள்ளது.

முதிர்ச்சி இல்லாதவர்
இளையராஜா மாதிரி மட்டமான மனிதரை பார்க்கவே முடியாது. அவர் பெரிய இசையமைப்பாளர், அவருக்கு இசைஞானி என பட்டம் கொடுத்திருக்கிறார்கள். அதற்கெல்லாம் அவர் முழு தகுதியானவர். அவரது இசையை நான் விமர்சிக்கவில்லை, அப்படி செய்தால் என் குருவை நான் விமர்சிப்பதாக இருக்கும். இளையராஜா என்கிற இசையமைப்பாளரைப் பற்றியும் அவர்களது பாடல்களைப் பற்றியும் என்னால் மணிக்கணக்கில் பெருமையாக பேச முடியும். ஆனால் ஒரு மனிதனாக அவர் ரொம்ப மட்டமானவர். கொஞ்சம் கூட முதிர்ச்சியில்லாதவர்.

சாமி
ஒரு சாதாரண நபராக அவர் இருந்தால் இவ்வளவு விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை. சினிமா துறையில் அவரை சாமி என பலரும் அழைப்பார்கள். அவருக்கு சாமியார் என பெயர் உண்டு. ரஜினிகாந்த்தே அவரை சாமி என்று தான் அழைப்பார். ஏனென்றால் அந்த அளவுக்கு ஆன்மீகத்திற்குள் நுழைந்து நிறைய விஷயங்கள் பேசுபவர் அவர். ஆன்மீகத்திற்குள் போகப் போக பெருந்தன்மையும், முதிர்ச்சியும், சகிப்புத்தன்மையும், புரிதலும் வந்தால் தானே அது ஆன்மீகம். இவர் ஆன்மீகத்துக்குள் நுழைவதாகச் சொல்லிட்டு, வெளியே அசிங்கமாகப் பேச ஆரம்பித்தார்.

ஆன்மீக புரிதல் இல்லாதவர்
உதாரணத்திற்கு, சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, ஏசு கிறிஸ்து என்பவர் வாழ்ந்தாரா, உயிர்த்தெழுந்தாரா என்பது எனக்கு தெரியாது என்று சம்பந்தமே இல்லாமல் பேசியுள்ளார் இளையராஜா. இது அவருக்கு தேவையா? ரமண மகரிஷி ஒருவர் தான் இறந்த பின்பு உயிர்த்தெழுந்தவர் என்பதை தான் சொல்ல வருகிறாராம். கொஞ்சமாவது ஆன்மீக புரிதல் உள்ளவராக இருந்திருந்தால், இப்படி பேசி இருப்பாரா? ஏசு கிறிஸ்துவை கோடிக்கணக்கான மக்கள் நம்புகிறார்கள். அத்தனை பேரை காயப்படுத்தும் விதமாக இப்படி பேசலாமா? இவர் ஒன்னும் வரலாற்று ஆசிரியர் கிடையாது. ஒரு கூற்றைச் சொல்ல வருபவர் அதை மட்டும் சொல்லிவிட்டுப் போக வேண்டியது தானே? அத்தனை பேரை கேலப்படுத்தும் சிந்தனை இருப்பதால் தான் அவரை மட்டமான மனிதர் எனச் சொல்கிறேன்" என மிகவும் காட்டமாகப் பேசியுள்ளார் ஜேம்ஸ் வசந்தன்.












Click it and Unblock the Notifications