ஜனநாயகன் விவகாரம்.. பாஜக பெயரையே சொல்ல மாட்றீங்க.. வந்து விழுந்த கேள்வி.. பதறிய நிர்மல் குமார்!
சென்னை: ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படாததற்கு பாஜக தான் காரணமா என்ற கேள்விக்கு தவெக துணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் பதில் அளித்துள்ளார். ஜனநாயகன் திரைப்படம் விஜய்யின் கடைசி படம் என்பதால், அதனை சுமூகமாக ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறிய நிர்மல் குமார், மற்ற விஷயங்களை ரிலீஸ்க்கு பின் பேசலாம் என்றும் கூறியுள்ளார்.
தவெக தலைவரும், நடிகருமான விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்சார் சான்றிதழ் வழங்கப்படாததால், ஜனநாயகன் திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் கால வரையின்றி ஒத்தி வைத்திருக்கின்றனர். அதேபோல் ஜனநாயகன் சென்சார் சான்றிதழ் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகினார்.

அது தவெக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் உச்சநீதிமன்றத்தில் ஜனநாயகன் படக்குழு மேல்முறையீடு செய்த போதும், சென்சார் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்திருக்கிறது. இன்னொரு பக்கம் கரூர் விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி இருக்கிறார். இதனால் தவெகவை பாஜக நெருக்கி வருவதாக விமர்சனங்கள் எழுந்தன.
முதல்வர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் பலரும் கருத்து கூறிய போதும், விஜய் மற்றும் தவெக நிர்வாகிகள் பாஜக என்ற பெயரையே உச்சரிக்க மறுத்து வருகின்றனர். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் உள்ளிட்ட யாரும் பாஜக பற்றி பேசவில்லை. இந்த நிலையில் விஜய் உடனான சிபிஐ விசாரணை குறித்து நிர்மல் குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது ஜனநாயகன் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் உட்பட எந்த நிர்வாகிகளும் பாஜக பெயரையே சொல்லவில்லையே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சிடிஆர் நிர்மல் குமார், ஜனநாயகன் விவகாரத்தில் ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஜனநாயகன் திரைப்படம் சுமூகமாக ரிலீஸாக வேண்டும். அது வந்தபின், இது தொடர்பாக விரிவாக பேசலாம்.
பாஜக தொடர்பாக எங்களின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று தெரிவித்தார். ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்க்கு பாஜக நெருக்கடி கொடுக்கிறதா என்ற கேள்விக்கு நிர்மல் குமார் கடைசி வரை பதில் அளிக்கவில்லை. இதனால் பாஜகவின் அட்டாக்கால் தவெக நிர்வாகிகள் அச்சத்தில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications