பால சாகித்திய புரஸ்கார் விருது! எழுத்தாளர் உதயசங்கருக்கு ஜவாஹிருல்லா வாழ்த்து!
சென்னை: சாகித்திய புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் உதயசங்கருக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்தில் கூறியிருப்பதாவது;
பால சாகித்திய புரஸ்கார் (Bal Puraskar) என்ற விருது சாகித்திய அகாதமியால் சிறார் இலக்கியத்திற்குப் பங்களிப்பவர்களை கவுரவிக்கும் விதமாக வழங்கப்பட்டு வருகின்றது.. இந்த விருது இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் குழந்தைகளுக்கான இலக்கியப் படைப்புகளுக்கு வழங்கப்படுகிறது. இந்தாண்டு சிறார் எழுத்தாளர் உதயசங்கரின் 'ஆதனின் பொம்மை' என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழடி தொல்லியல் ஆய்வை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஆதனின் பொம்மை என்ற நாவலுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த நூலின் மூலம் தமிழர்களின் தொன்மையான வரலாற்றை அறியும் வாய்ப்பை உதயசங்கர் உருவாக்கி தந்துள்ளார்.
குழந்தைகளுக்கான கதை, நாவல், பாடல் என 20 நேரடி நூல்களை அவர் எழுதியுள்ளார். இவை மட்டுமின்றி சிறாருக்கான சிறந்த மலையாள நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார்.
இதுவரை 60-க்கும் மேற்பட்ட மலையாள மொழிபெயர்ப்புகளைச் செய்து சிறார் இலக்கியத்தில் அரும்பங்காற்றியுள்ளார் .அவருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்
இதேபோல், திருக்கார்த்தியல் என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதிய எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு சாகித்ய யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது அவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications