உக்ரைனில் உள்ள தமிழர்களின் கதி என்ன? எப்படியாவது மீட்க வேண்டும்! ஜவாஹிருல்லா கவலை!
சென்னை: உக்ரைனில் உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.
தனி விமானம் ஏற்பாடு செய்து அனுப்ப மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இதனிடையே ஜவாஹிருல்லா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழர்கள் கதி
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போரை அறிவித்து குண்டுகளை வீசி வரும் நிலையில் அந்த நாட்டிற்கு கல்விக்காகவும், வேலைக்காகவும் சென்றுள்ள தமிழர்களை பத்திரமாக மீட்டு தமிழகம் கொண்டுவர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போரின் காரணமாக விமான சேவைகள் குறைந்து அதன் கட்டணங்கள் அதிகரித்துள்ள நிலையில் அங்கு வேலைக்காகவும், கல்விக்காகவும் சென்றுள்ளவர்களிடம் விமானக் கட்டணத்திற்கான தொகைகள் இல்லாத காரணத்தினால் அவர்கள் உக்ரைன் நாட்டிலிருந்து திரும்ப முடியாத சூழல் உள்ளது.

தனி விமானம்
எனவே தமிழக அரசு, ஒன்றிய அரசின் மூலம் தனி விமானம் ஏற்பாடு செய்து உக்ரைனில் சிக்கியிருக்கும் தமிழர்களை மீட்டு தமிழகம் கொண்டுவர உரிய அழுத்தங்களைத் தர வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் தமிழக முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதனிடையே உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் ஆரம்பாகிவிட்டதால் அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணி மிகுந்த சவாலாக இருப்பதுடன் சிக்கலாகவும் இருப்பது கவனிக்கத்தக்கது.

மீட்பு விமானம்
இதனிடையே இவ்வாறு ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ள நிலையில், உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட மீட்பு விமானம் போர் நடைபெறும் காரணத்தால் பாதி வழியிலேயே மீண்டும் இந்தியா திரும்பியது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் மூன்றாயிரம் பேர் வரை உக்ரைனில் படிக்கலாம் எனத் தெரிகிறது. அவர்களிடம் வெளிநாடு வாழ்தமிழர் நலத்துறை அதிகாரிகள் தொடர்புகொண்டு பேசி மீட்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கி வருகின்றனர்.
Recommended Video

மத்திய அரசு
இதேபோல் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்க மத்திய அரசும் தனது பங்குக்கு தீவிர நடவடிக்கை எடுத்து வருவது கவனிக்கத்தக்கது. நேரம் கூட கூட உக்ரைனில் நிலைமை இன்னும் மோசமாகும் என்பதால் அங்குள்ள தமிழர்களின் உறவினர்கள் இங்கு மிகுந்த அச்சமும் கலக்கமும் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications