இஸ்லாமிய சமூகத்தின் மீது பற்றும் பாசமும் கொண்டவர் நெல்லை கண்ணன்! ஜவாஹிருல்லா இரங்கல்!
சென்னை: இஸ்லாமிய சமூகத்தின் மீது பற்றும் பாசமும் கொண்டவர் நெல்லை கண்ணன் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தொடர்ந்து மூன்று மணி நேரம் இடைவிடாது பேசும் ஆற்றல் மிக்கவர் என்றும் அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு எனவும் ஜவாஹிருல்லா குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கலில் கூறியிருப்பதாவது;
சமகால தமிழ்க்கடல் வற்றிவிட்டது.. நெல்லை கண்ணன் மறைவு குறித்து வைரமுத்து, சாலமன் பாப்பையா உருக்கம்!
நெல்லை கண்ணன்
தமிழறிஞரும், இலக்கியப் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமாக பணி செய்தவரும் தமிழ் கடல் என்று எல்லோராலும் போற்றப்பட்ட நெல்லை கண்ணன் அவர்கள் வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவினால் நம்மை விட்டு பிரிந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். பெருந்தலைவர் காமராசர், கண்னதாசன் உள்ளிட்ட ஆளுமைகளுடன் நெருங்கி பழகியவர். 1970 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியில் பிரபல பேச்சாளராக விளங்கியவர் நெல்லை கண்ணன்.
ஆன்மீக சொற்பொழிவு
இலக்கியம் மட்டுமல்லாமல், ஆன்மீக சொற்பொழிவாளர் என பன்முகம் கொண்டவர். பல்வேறு மேடைகளில் இவரது தமிழ் கொடி கட்டி பறந்தது. தொடர்ந்து மூன்று மணி நேரம் இடைவிடாது பேசும் ஆற்றல் மிக்கவர்.தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதை சமீபத்தில் பெற்றவர். இஸ்லாமிய சமூகத்தின் மீது மிகுந்த பற்றும் பாசமும் கொண்டவர். சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி பேசுவதில் மிகப்பெரிய அளவில் முனைப்பு காட்டியவர்.
சமூக நல்லிணக்கம்
ஒன்றிய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு மேடைகளில் முழங்கியவர். நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து பேசியதற்காக தனது முதுமை வயதிலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்.
அன்பாக பழகுவார்
தனிப்பட்ட முறையில் என்னிடம் மிகவும் அன்பாக பழகக்கூடிய மாண்பாளர். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.