நாசக்கார திட்டங்களை தமிழகத்தில் திணிக்காதீர்! மத்திய அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!
சென்னை: நாசகர திட்டங்களை தமிழகத்தில் திணிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
காவிரி டெல்டா பகுதி, பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு பரிந்துரை செய்திருப்பது கண்டனத்திற்குரியது என அவர் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

நாசகரமான திட்டங்கள்
ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஷேல் என்ற பாறை எரிவாயு போன்ற நாசகரமான திட்டங்களைத் தமிழகத்தின் மீது ஒன்றிய அரசு திணித்துவருவது கண்டனத்திற்குரியது. இந்த அபாயகரமான திட்டங்களால் விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கை விளைவிக்கும். மண்ணை மலடாக்கி, சுற்றுச்சூழலை நாசமாக்கும் இதுபோன்ற திட்டங்களை எதிர்த்து தமிழக மக்கள் போராடிவரும் நிலையில், தமிழகத்தில் 9 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்குக் அனுமதி கோரி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

ஓ.என்.ஜி.சி. நிறுவனம்
ஏற்கெனவே உள்ள 30 கிணறுகளில் 21 கிணறுகள் தற்போது வரை அமைக்கப் பட்டுள்ள நிலையில், 9 கிணறுகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. அதற்கான சுற்றுச்சூழல் அனுமதியின் கால அவகாசம் விரைவில் முடிவடையவுள்ளதால், மீதமுள்ள 9 கிணறுகளை அமைப்பதற்காக சுற்றுச்சூழல் அனுமதியை மேலும் நீட்டிக்கக்கோரி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஒன்றிய சுற்றுச்சூழல் சூழல் துறையின் அனுமதி கோரியதையடுத்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுக்க 2025ஆம் ஆண்டு வரை கால அவகாசம் நீட்டிக்கலாம் என சுற்றுச்சூழல் சூழல் துறை ஒன்றிய அரசிற்கு பரிந்துரைத்துள்ளதாக தெரியவருகிறது.

ஹைட்ரோகார்பன் கிணறுகள்
தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி அளிக்க மாட்டோம் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தெளிவாக தெரிவித்துள்ளபோதும், காவிரி டெல்டா பகுதி, பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு பரிந்துரை செய்திருப்பது கண்டனத்திற்குரியது.

திரும்பப் பெறுக
தமிழகத்தில் ஆரம்பம் முதல் தற்போது வரை ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஷேல் வாயு போன்ற திட்டங்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை உடனே ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், இதுபோன்ற அபாயகரமான திட்டங்களுக்கு அனுமதி மறுப்பது மட்டுமின்றி இத்திட்டங்களைத் தமிழகத்தில் திணிக்கும் முயற்சிகளைக் கைவிடுமாறும் ஒன்றிய அரசை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications