ஏற்கனவே ஒன்னு கிழிஞ்சது.. இன்னொரு சட்டையையும் கிழிக்க தயாராகி விட்டார் ஸ்டாலின்.. ஜெயக்குமார்
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் இன்னொரு சட்டையை கிழிக்க தயாராகிவிட்டதாகவும், ஜூன் 3ம் தேதி ஆட்சி அமைக்காவிட்டால் அரசியலை விட்டு ஒதுங்கி விடுவாரா என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ஆட்டோ ஸ்டாண்ட்டை மீன்வளத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், சபாநாயகர் மீதான திமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பேசுகையில், ஏற்கனவே ஒரு சட்டையை கிழித்து கொண்டு ஸ்டாலின் வந்ததாகவும், இன்னொரு சட்டையையும் கிழிப்பதற்கு தயாராகிவிட்டார் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் எனறும் கிண்டல் அடித்தார்.
மேலும் விரோதமும் துரோகமும் போல ஸ்டாலினும், தினகரனும் சேர்ந்துள்ளதார்கள் என்றும், 3 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் தினகரனுக்கு தேள் கொட்டினால் ஸ்டாலினுக்கு நெறி கட்டுவது ஏன் என்றும் ஜெயக்குமார் விமர்சித்தார்.
ஜூன் 3-ஆம் தேதி ஆட்சி மாற்றம் வரும் என துரைமுருகன் கூறியுள்ளாரா என செய்தியாளர் ஒருவர் அப்போது கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், சொப்பனத்தில் கண்ட அரிசி சோறாகாது என்ற பழமொழிக்கேற்ப துரைமுருகன் பேசுகிறார் என்றும் பணத்தை இழந்த சோகத்தில் துரைமுருகன் பேசிவருவதாகவும் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார்.
மேலும் , 2021-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி அ.தி.மு.க. ஆட்சி இருந்தால் துரைமுருகன் தி.மு.க.வில் இருந்தும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்தும் விலகத் தயாரா என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.