நாங்கள் இமயமலை.. பரங்கிமலை போன்ற சிறிய கட்சிகள் எங்களுக்கு இணையாக பேசுவது நகைச்சுவை.. ஜெயக்குமார்
சென்னை: சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் ஜெயலலிதா சமாதிக்கு ஏன் சசிகலா செல்லவில்லை? அவர் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொன் விழா கொண்டாட்டத்தையொட்டி வரும் அக்டோபர் 16 ஆம் தேதி ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது போல் 17 ஆம் தேதி ராமாவரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்திற்கும் அவர் செல்லவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும் இந்த நிகழ்வுகளுக்கு பிறகு தமிழகம் முழுவதும் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

எம்ஜிஆர் இயக்கம்
அதற்கு அவர் கூறுகையில் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம் தனக்கு பல ஆயிரம் ஆண்டுகள் தழைத்தோங்கும் என்று அவர் தெரிவித்தார். அவரது காலத்திற்கு பிறகு ஜெயலலிதா இயக்கத்தை எஃகு கோட்டையாக கட்டி காப்பாற்றினார். அவரும் தனக்கு பிறகும் கோடிக்கணக்கான தொண்டர்களால் இயக்கம் நிலைத்து நிற்கும் என்று கூறியிருந்தார்.

அதிமுகவுக்கு சிறப்பு
எந்த இயக்கத்திற்கும் இல்லாத சிறப்பு அதிமுகவுக்கு உண்டு. கட்சி தொடங்கிய 50 ஆண்டுகளில் அதிமுக 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. 5 முதல்வர்களை தந்துள்ளது. வரும் ஆண்டு பொன் விழா ஆண்டாகும். வெள்ளி விழா ஆண்டை ஜெயலலிதா மாநாடு போல் திருநெல்வேலியில் நடத்தினார். அது போல் பொன் விழா ஆண்டையும் சிறப்பாக நடத்த இன்றைய தினம் நடந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.

ஏதோ செய்கிறார்
இதுகுறித்த அறிவிப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் விரைவில் வெளியிடுவார்கள். இந்த கூட்டத்தில் புதிய அவைத் தலைவர் குறித்தும் பேசப்பட்டது. சசிகலா வருகையால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை.சிறையிலிருந்து வந்தவுடன் சசிகலா ஏன் ஜெயலலிதா சமாதிக்கு அவர் செல்லவில்லை? இப்போது அரசியல் செய்வதற்காக ஏதேதோ செய்கிறார், சொல்கிறார்.

21 ஆம் நூற்றாண்டு
உண்மையான கட்சித் தொண்டர்கள் அதிமுகவை விட்டு வேறு எந்த கட்சிக்கும் செல்லமாட்டார்கள். நாங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சி என்று சீமான் கூறியதை கேட்கிறீர்கள். அ.தி.மு.க. 1 கோடியே 46 லட்சம் வாக்குகளை பெற்று இமயமலைபோல் உயர்ந்து இருக்கிறது. அதை பரங்கிமலைபோல் தாழ்ந்து இருப்பவர்கள் அ.தி.மு.க.வுக்கு இணையாக பேசுவது 21-ம் நூற்றாண்டின் மிகப்பெரிய நகைச்சுவையாகும் என்றார்.












Click it and Unblock the Notifications