தேர்தல் முடிஞ்சதுமே ஓபிஎஸ் பாஜகவில் இணைவார்.. எல்லாமே ரெடி.. ஜெயக்குமார் ஆரூடம்!
சென்னை: லோக்சபா தேர்தல் முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் சேர்ந்து விடுவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தியுள்ளன. திமுக ஏற்கனவே உள்ள கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வரும் நிலையில், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாக வலுவான கூட்டணியை அமைக்கப் போராடி வருகின்றன.

பாஜகவை பொறுத்தவரை, அமமுக டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரோடு கைகோர்த்துள்ளது. மேலும், பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. புதிய நீதிக்கட்சி ஏசி சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி பாரிவேந்தர் ஆகியோரும் பாஜக அணியில் உள்ளனர்.
அதிமுக தரப்பில், பாமக, தேமுதிகவை கூட்டணிக்குள் இழுக்க பேச்சுவார்த்தை நடப்பதாகத் தெரிகிறது. சீட் பங்கீடு தொடர்பாக சுமூக நிலை இன்னும் எட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் இணைந்து விடுவார். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பாஜவுக்காக கூலிக்கு மாரடிப்பவராக இன்று ஓபிஎஸ்ஸின் குரல் இருக்கிறது. தேர்தல் முடிந்த பிறகு ஓபிஎஸ் பாஜகவில் ஐக்கியமாவது உறுதி. பாஜக இல்லாத ஒரு மகத்தான கூட்டணியை அதிமுக அமைக்கும்.
இன்னும் தேர்தலுக்கு நாட்கள் இருக்கும் நிலையில், அனைத்தையும் பொறுத்திருந்து பாருங்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எத்தனையோ நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். ஆனால், திமுக அரசு, அதற்கு மூடுவிழா நடத்திவிட்டது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் நல்லாட்சியை வழங்கினார்.
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தேர்தலை தனித்துச் சந்தித்து இருக்கிறார்கள், அதில் மகத்தான வெற்றியையும் பெற்றிருக்கிறார்கள். அதிமுக கூட்டணி அமைத்துத்தான் மகத்தான வெற்றி பெற வேண்டும் என்பது கிடையாது. அதற்காக கூட்டணி இல்லை என்று நான் சொல்லவில்லை. இன்னும் நாட்கள் இருக்கின்றன. பல கட்சிகள் வரலாம்.
எங்களின் தனித்தன்மையை பல கட்டங்களில் நிரூபித்து இருக்கிறோம். பாஜவுடன் இப்போது கூட்டணி இல்லை, எப்போதும் கூட்டணி இல்லை என்ற நிலையை எடுத்துவிட்டோம். தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதிமுக தலைமையில் மகத்தான கூட்டணி அமையும். நாங்கள் யாரிடமும் கெஞ்ச வேண்டிய அவசியம் கிடையாது. யார் கதவையும் நாங்கள் தட்டத் தேவையில்லை. எங்களை நோக்கித்தான் நிச்சயமாக கட்சிகள் வரும்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது பதவி இல்லாததால் ஜெயக்குமார் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் உளறுகிறார் எனத் தெரிவித்திருந்தார். அதற்கு ஜெயக்குமார், "என் தங்கச்சியை நாய் கடிச்சிருச்சுப்பா" என ஜனகராஜ் பேசும் காமெடி போல இருக்கிறது ஓபிஎஸ் பேசுவது. ஓபிஎஸ் ஜனகராஜ் போல ஆகிவிட்டார்" எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications