ஜெயலலிதா மரண விசாரணையை முடிக்க போகிறோம்... சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் பதில்
Recommended Video

சென்னை:ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை முடியும் தருவாயில் உள்ளது என்று ஆறுமுகசாமி ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அப்போலோ மருத்துவமனை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது.அதில் கூறப்பட்டிருந்ததாவது: ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப் பட்டதற்கான சூழ்நிலை, வழங்கப்பட்ட சிகிச்சை, மரணத்திற்கான காரணம் ஆகியவற்றை கண்டறிய ஆணையம் அமைக்கப் பட்டது.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக ஆணையம் விசாரிக்கிறது. ஆனால் தங்கள் தரப்பில் ஆஜராகும் மருத்துவர்களின் விளக்கத்தை பதிவு செய்துகொள்ள, 21 துறைகளை சார்ந்த மருத்துவர்களைக் கொண்ட குழுவை அமைக்க கோரி தாக்கல் செய்த மனுவை ஆணையம் நிராகரித்துவிட்டது.
எனவே, அப்போலோ அளித்த சிகிச்சை தொடர்பாக விசாரணை நடத்த தன்னிச்சையாக செயல்படக்கூடிய மருத்துவர்களைக் கொண்ட மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும். அதுவரை சிகிச்சை தொடர்பாக விசாரிக்க ஆணையத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் மற்றொரு வழக்கும் தொடரப்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி சுப்பையா முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆறுமுகசாமி ஆணையம் தரப்பானது, ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை முடியும் தருவாயில் உள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையத்தின் விசாரணையை தடுக்க வழக்கு தொடரப் பட்டு உள்ளது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க அதிகாரம் உள்ளது.
2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி முதல் டிசம்பர் 5 வரை அப்போலோ மருத்துவ மனையில் நடைபெற்ற அனைத்தையும் விசாரிக்கும் அதிகாரம் ஆணையத்துக்கு இருக்கிறது. மருத்துவ வார்த்தைகள் தவறாக குறிப்பிட்டு உள்ளதாக கூறப்பட்டு இருப்பது தவறு. நியாயமான முறையில் விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, ஆறுமுகசாமி ஆணையத்தின் மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை தரப்பில் கேட்கப்பட்டது. இதையடுத்து,இந்த வழக்கின் விசாரணை வரும் 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications