ஜெ. மரண விசாரணை கமிஷன் நீதிபதி ஆறுமுகசாமி மருத்துவமனையில் அனுமதி!
சென்னை : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் பற்றி விசாரணை நடத்தி வரும் தனி நபர் விசாரணை கமிஷனின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2016, டிசம்பர் 5 அதிமுக பொதுச்செயலாளராகவும் முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா மரணமடைந்தார். சுமார் 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் ஜெயலலிதா உடல்நலம் தேறி வந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்தது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இறந்தது வரையில் என்ன நடந்தது என்று பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.

எனவே ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க தனி நபர் விசாரணை கமிஷனை ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு அமைத்தது. 6 மாத காலத்திற்கு விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று 2017ல் அறிவிக்கப்பட்ட இந்த ஆணையமானது 3வது முறையாக கால நீட்டிப்பு பெற்று ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலா குடும்பத்தினர், போயஸ் கார்டன் வீட்டில் பணியில் இருந்தவர்கள்,டாக்டர்கள் என பலரிடமும் விசாரணை நடத்தியுள்ளது.
விசாரணை கமிஷனின் முடிவுகள் இன்னும் அறிக்கையாக தாக்கல் செய்யப்படாத நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆறுமுகசாமி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்












Click it and Unblock the Notifications