இதய தெய்வம் இருந்தபோது கிடைத்த மரியாதை இன்றும் கிடைக்கிறது! நெகிழும் ஜெயலலிதா பி.ஏ. பூங்குன்றன்!
சென்னை: ஜெயலலிதாவிடம் தாம் வேலை பார்த்த காலத்தில் என்ன மரியாதை கிடைத்ததோ அதே மரியாதை இன்றும் கிடைப்பதாக பூங்குன்றன் நெகிழ்ந்துள்ளார்.
பழனியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றை குறிப்பிட்டு தனது முகநூல் பக்கத்தில் இதனைத் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக பூங்குன்றன் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

இதய தெய்வம்
''இதய தெய்வத்திடம் வேலை பார்த்த பொழுது தைப்பூசத்திற்கு பழநி பாத யாத்திரை செல்வேன். பழநி பாதயாத்திரை எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கும். அந்த நான்கு நாட்கள் நான் அடையும் ஆனந்தத்திற்கு கரை காண முடியாது. பழநியில் இருப்பது எனது சொந்த ஊரில் இருப்பதைப் போன்ற மகிழ்வைத் தரும். கோயிலில் பணியாற்றும் அத்தனை பேரும் என்னுடைய உறவினர் போல் நடந்து கொள்வார்கள். பாசத்தை அள்ளித் தெளிப்பார்கள். அதற்கு காரணம் அம்மா.''

அன்பும், ஆறுதலும்
''அம்மா இருந்தபோது பெரிய மரியாதை கிடைத்திருக்கும், ஆனால் இன்றுமா? என்று நீங்கள் நினைத்தால் அது பிழை. நீங்கள் நினைப்பது அரசியலில் மட்டுமே சாத்தியம். பழநியில் அப்படி அல்ல. நான் இன்றும் பழநிக்குச் சென்றால் அதைவிட அதிகமான அன்பை காட்டி, தைரியமும் சொல்லி அனுப்புகிறார்கள் நண்பர்கள். ஏன்? எந்த கோயிலுக்கு சென்றாலும் அன்பும், ஆறுதலும் நிரம்பக் கிடைக்கிறது. அதற்குக் காரணமும் அம்மா.''

தினமும் தொழுகிறேன்
''பங்குனி உத்திரத்தின் நாயகன், என் அப்பன் பழநி தண்டாயுதபாணியின் பிரசாதத்தை, திருஆவினன்குடியில் குழந்தை வேலப்பனை கன்னத்தில் வருடி தினமும் முத்தம் கொடுக்கும் அருட்பேறு பெற்ற முரளி சிவம் அவர்கள் என்னை சந்தித்து கொடுத்துவிட்டுச் சென்றார். கடவுளிடம் பணியாற்றும் நல்ல உள்ளங்கள் என்னை நினைவில் வைத்திருப்பதற்கு நான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அதற்குக் காரணமான அம்மாவை தினமும் தொழுகிறேன்.'' இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

முக்கியக் கருத்து
இதனிடையே ஜெயலலிதா உயிருடன் இருந்த போது தனக்கு அதிமுகவினர் கொடுத்த மரியாதையை இன்று கொடுப்பதில்லை என்பதையும் ஒரு வரியில் சூசகமாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது முழுக்க முழுக்க ஆன்மிகத்தின் பக்கம் பூங்குன்றன் தனது நாட்டத்தை திருப்பியிருப்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications