ஸ்டாலின் டீமில் ஜான் த்ரே.. செம மூவ்.. தொழிலதிபர்களுக்கு கிளியர் சிக்னல்.. குவியுமா முதலீடுகள்?
சென்னை: உலகப் புகழ் பெற்ற ஐந்து முன்னணி பொருளாதார நிபுணர்களை கொண்டு பொருளாதார ஆலோசனைக் குழு தமிழகத்தில் அமைக்கப்படும் என்று தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள ஐந்து பொருளாதார வல்லுனர்களும் மத்திய மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருபவர்கள் என்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது.
ரகுராம் ராஜன்- ஆர்பிஐ முன்னாள் ஆளுநர். எஸ்தர் டஃப்லோ- நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர், பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜியின் மனைவி. அரவிந்த் சுப்பிரமணியன்- இந்தியாவின் முன்னாள் பொருளாதார ஆலோசகர். எஸ். நாராயணன்- இந்தியாவின் முன்னாள் நிதித்துறை செயலர். இந்த நால்வரை தவிர இன்னொருவர் நியமனமும் கவனம் ஈர்த்துள்ளது.

திறந்த சந்தை
அவர் பெயர் ஜான் த்ரே. இவரது நியமனத்தை வைத்து பார்த்தால், தமிழக அரசு தொழிலதிபர்களுக்கு தமிழ்நாட்டில் தொழில் துவங்குவதற்கு ஒரு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளதாக தான் பார்க்க முடியும் என்கிறார்கள் அரசு வட்டாரத்தில்.
ஏனென்றால், ஜான் த்ரே திறந்த சந்தைப் பொருளாதாரம் அல்லது இன்னொரு வகையில் சொல்லப் போனால் தாராளமயமாக்கல் கொள்கையில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்.

அரசு தலையீடு தேவை என்ற கொள்கை உள்ளவர்
நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் மற்றும் ஜான் த்ரே இருவரும் இணைந்து எழுதிய ஆம்னிபஸ் என்ற புத்தகத்தில் முக்கியமான கருப்பொருள் இந்த விஷயம் தான். இதைப் பற்றி தான் விரிவாக எழுதி இருப்பார்கள் இரண்டு அறிஞர்களும். பொருளாதார தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், போட்டி சந்தைகளை உருவாக்குதல் ஆகியவை இந்தியா போன்ற நாட்டுக்கு மிகவும் அவசியம். அதேநேரம் இதில் அரசு தலையிடாமல் இருக்க முடியாது. சமூக வாய்ப்புகளை ஏற்படுத்துவதில், அரசின் பங்களிப்பு கண்டிப்பாக அவசியம். இதுதான் அந்தப் புத்தகத்தின் கருப்பொருள்.

தாராளமயமாக்கல் கொள்கை
தாராளமயமாக்கல் கொள்கையை இப்போது நாம் தவிர்த்து விட முடியாத சூழ்நிலைக்கு வந்து விட்டோம். அதேநேரம் முற்றிலுமாக தனியார் கையில் அனைத்து துறைகளும் போய் சேர்ந்தால் அங்கு சமூகநீதிக்கு இடம் இருக்காது என்ற கொள்கையில் திமுக இருக்கிறது. அப்படித்தான் தாராளமயமாக்கல் இருக்க வேண்டும் என்று ஜான் த்ரேவும் நம்புகிறார்.
இப்படியான ஒருவரை பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற வைத்து உள்ளதன் மூலமாக தமிழகத்தில் தொழில் தொடங்க வருபவர்களுக்கு ரத்தின கம்பளம் விரிக்கப்படும், அதேநேரம் அரசின் தலையீடு இருக்கும் என்பது மறைமுகமாக உணர்த்தப்பட்டுள்ளது.

தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக தொழில் வளர்ச்சியை தொய்வடைந்து போய் இருக்கிறது என்கிறது புள்ளி விவரம். இதை மீட்டெடுக்க ஜான் த்ரே வருகை உதவக்கூடும். தொழிலதிபர்கள் எளிதாக தொழில் துவங்குவதற்கு இவரது ஆலோசனைகள் ஒரு காரணமாக இருக்கப் போகிறது. இதன் காரணமாக தொழில் துறைகள் வளர்ச்சி அடைந்து தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகள் பெருகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

கல்வியாளர் ஜான் த்ரே
ஜான் த்ரே, எசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் கணித பொருளாதாரம் பயின்றார். டெல்லியில் உள்ள இந்திய புள்ளிவிவர நிறுவனத்தில் பி.எச்.டி. படித்தார். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் மற்றும் டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஆகியவற்றில் பேராசிரியராக பணியாற்றியவர். தற்போது ராஞ்சி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் கவுரவ பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

பொருளாதார புத்தகங்கள்
கிராமப்புற வளர்ச்சி, சமூக ஏற்றத்தாழ்வு, தொடக்கக் கல்வி, குழந்தை ஊட்டச்சத்து, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவை ஜான் த்ரே கவனம் செலுத்தும் துறைகளாக இருந்துள்ளன. பல பொருளாதாரம் சார்ந்த புத்தகங்களை எழுதியுள்ளார்.

ஏழைகள் கைகளுக்கு பணம்
மோடி பிரதமர் பதவிக்கு வந்த பிறகு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைக் கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில், 2014 அக்டோபரில் ஜான் த்ரே உள்ளிட்ட இந்தியாவின் 28 முன்னணி பொருளாதார நிபுணர்கள் பிரமதர் மோதிக்கு கடிதம் எழுதியிருந்தனர். அந்தக் கடிதத்தில் இந்தத் திட்டத்தை நீக்கக்கூடாது, நீர்த்துப்போகச் செய்யக்கூடாது எனக் கோரியிருந்தனர். இதுதான் ஜான் த்ரே. ஆம்.. ஏழை, எளியவர்கள் கைகளுக்கு பணம் சென்று சேர வேண்டும் என்பதுதான் அவரது கொள்கை. அதற்கான உத்வேகத்தை இவர் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் இப்போது தமிழ்நாடு உள்ளது.












Click it and Unblock the Notifications