அசிங்கமா திட்றாங்க.. மிரட்டறாங்க.. பாதுகாப்பு வேணும்.. டிஜிபியிடம் ஜீவஜோதி புகார்
நில மோசடி குறித்து சென்னை டிஜிபி அலுவலகத்தில் ஜீவஜோதி புகார் அளித்துள்ளார்
Recommended Video
சென்னை: "எங்களை அசிங்கமா திட்றாங்க.. மிரட்டறாங்க.. எங்களுக்கு பாதுகாப்பு வேணும்.." என்று கேட்டு சென்னை டிஜிபி அலுவலகத்தில் ஜீவஜோதி புகார் மனு அளித்துள்ளார்.
தஞ்சாவூரை சேர்ந்தவர் ஜீவஜோதி. இவரது கணவர் கொல்லப்பட்ட வழக்கில் சரவண பவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு சிறை தண்டனை சமீபத்தில் விதிக்கப்பட்டது. ஜீவஜோதி, தண்டபாணி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார்.
இந்நிலையில், சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு ஜீவஜோதி திடீரென கணவனுடன் வந்தார். கையில் மனு ஒன்றினை கொண்டு வந்திருந்தார். அதன் சுருக்கம் இதுதான்:

அடமானம்
கணவர் தண்டபாணியின் தாயாருக்கு சொந்தமான, வேதாரண்யத்தில் உள்ள வீட்டை அங்குள்ள ஒருவரிடம் கடந்த 19.7.2018-ல் அடமானமாக வைத்து 10 லட்சம் ரூபாய் வாங்கினோம். ஆனால் கடனுக்காக பூர்த்தி செய்யப்படாத 2 செக், வீட்டுப் பத்திரத்தை தந்தோம்.

கொலை மிரட்டல்
மேற்படி கடன்தொகையைத் திரும்ப கொடுத்துவிட்டு, ஆவணங்களைப் பெறுவதற்காக நான் கணவனுடன் சென்று கேட்டதற்கு தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கணவரை கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுக்கவும் செய்தார்கள். இதுகுறித்து வேதாரண்யம் ஸ்டேஷனில் புகார் அளித்தோம்.

கையெழுத்து
ஆனால் அதே சமயத்தில், கடன் கொடுத்தவர் தரப்பில் பொய் புகார் ஒன்று பதியப்பட்டு விட்டதால், அதில் நாங்கள் முன்ஜாமீன் பெற்றுவிட்டோட்ம. அதன்படி வேதாரண்யம் ஸ்டேஷனில் கையெழுத்து போட போனபோது, 'இன்ஸ்பெக்டர் இல்லை' என்று அங்குள்ள போலீசார் எங்களை பலமுறை அலைக்கழித்தனர்.

பாதுகாப்பு தேவை
இந்நிலையில் கடந்த 1ம் தேதி, நானும் குழந்தையும் வீட்டில் இருந்தபோது, கடன் கொடுத்தவரும், போலீஸாரும் தகாத வார்த்தைகளால் திட்டி, கணவனை ஸ்டேஷனுக்கும் வரச்சொல்லி விட்டு போனார்கள். இந்த வழக்கில் வேதாரண்யம் போலீஸார், கடன் கொடுத்தவருக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர். மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ள தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்" என்று கேட்டு, இன்னும் சில விவரங்களையும் அதில் தெரிவித்து இருந்தார்.

எப்ஐஆர்
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜீவஜோதி, "உரிய பணத்தை திருப்பி தந்தும் எங்களுக்கு டாக்குமெண்டை அவர்கள் திருப்பி தரவில்லை. இது சம்பந்தமாக போலீசில் புகார் அளித்தும் காது கொடுத்தும் அதை கேட்கவில்லை. என்னை வீட்டுக்கு வந்து அவர்கள் மிரட்டிய ஆடியோ, வீடியோ பதிவுகளை போலீஸிடம் கொடுத்திருக்கிறேன். போன 1- ம் தேதியும் எங்களை மிரட்டினார்கள். எங்க அக்கா டீச்சரா இருக்காங்க. சம்பந்தமே இல்லாமல் அவங்களைகூட எப்ஐஆரில் சேர்த்திருக்காங்க. அவர்களை கைது செய்ய முயற்சி செய்து வருகிறார்கள். வேதாரண்யம் போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தான் இத்தனையும் செய்கிறார்.

பிரச்சனை வரும்
இது தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். எனது பாதுகாப்பை கருதி தற்போது அந்த நபரின் பெயரை சொல்லவில்லை. ஆனால் மீண்டும் பிரச்சினை வரும் என்றால் அந்த நபரின் பெயரை வெளியிடுவேன். ஐஜி பெயரை தவறாக பயன்படுத்தி எங்களுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள். அந்த ஐஜி யார் என்று கேட்டால், பெயரை சொல்ல மறுக்கிறார்கள்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications