திமுக சிறுபான்மையினர் அணியில் பதவி வாங்க தீவிரம்! அறிவாலயத்தை சுற்றி வரும் ஜே.எம்.பஷீர்!
சென்னை: திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவில் பதவி வாங்குவதற்காக தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார் ஜே.எம்.பஷீர்.
அதிமுகவில் சிறுபான்மையினர் அணியின் மாநில துணைச் செயலாளராக இருந்த இவர், எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து பேசி கடுமையாக விமர்சித்ததால் அக்கட்சியிலிருந்து விலக்கப்பட்டார்.
ஓ.பன்னீர்செல்வம் தனக்கு அணுசரனையாக இருப்பார் என எதிர்பார்த்த இவருக்கு அவரது நடவடிக்கை மிகுந்த ஏமாற்றத்தை மட்டுமே தந்தது.

இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்ட இவர், சிறுபான்மையினர் நல உரிமை பிரிவில் செயலாற்றி வருகிறார்.
இதனிடையே அண்மையில் வெளியான திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவின் புதிய நிர்வாகிகள் பட்டியலில் ஜே.எம்.பஷீரின் பெயர் இடம் பெறாத நிலையில், கடும் ஏமாற்றம் அடைந்த அவர் மனம் தளராமல் ஏதேனும் ஒரு பதவியை வாங்கிவிட அறிவாலயத்தை சுற்றி வருகிறார்.
இதுமட்டுமல்லாமல் 2 அமைச்சர்கள் இதற்காக அடிக்கடி சந்தித்துப் பேசும் இவர், முதல்வரிடத்தில் தனக்காக அவர்களை பரிந்துரை செய்யும் படி நச்சரித்து வருகிறார்.

தேசியத் தலைவர் என்ற பெயரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குறித்த வரலாற்றுத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தென்மாவட்டங்களில் ஓரளவு பரிச்சயம் பெற்றிருக்கிறார் ஜே.எம்.பஷீர்.
திமுக சிறுபான்மையினர் அணியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத ஜே.எம்.பஷீர், அந்த அணி சார்பாக நடத்தப்படும் அனைத்து நிகழ்வுகளிலும் முதல் ஆளாக கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சிறுபான்மையினர் நல ஆணையம் தொடர்பான விவகாரங்களிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications