ஜான் பாண்டியன் vs பரந்தாமன்.. எழும்பூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?
சென்னை: சென்னையின் முக்கியமான தொகுதிகளில் ஒன்றான எழும்பூரில்(தனி) அதிமுக கூட்டணி சார்பில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் , திமுக கூட்டணி சார்பில் திமுக, கமலின் மக்கள் நீதி மய்யம், அமமுக சார்பில் தேமுதிக, நாம் தமிழர் கட்சி ஆகியவை மோதுகின்றன. திமுகவின் கோட்டையாக கருதப்படும் இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதை பார்ப்போம்.
சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதியை பொறுத்தவரை பூங்கா நகர், பெரம்பூர், புரசைவாக்கம், அண்ணா நகர், சேப்பாக்கம் ஆகிய தொகுதிகளை எல்லையாக கொண்டுள்ளது. இதுவரை இங்கு 14 முறை நடந்த தேர்தல்களில் 10 முறை திமுக வென்றுள்ளது. காங்கிரஸ் 2 முறையும், தேமுதிக மற்றும் சுயேட்சை தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.
மறைந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, எழும்பூர் தொகுதியில் இருந்து 1989 முதல் 2006 வரை ஐந்து முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஐந்து முறையும் திமுக சார்பில் வென்றிருந்தார்.

கீதா
எழும்பூர் தொகுதியில் இந்த முறை, திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் ஜான்பாண்டியன், தேமுதிக சார்பில் பிரபு, நாம் தமிழர் கட்சி சார்பில் கீதா, மக்கள் நீதி மய்யம் சார்பில் பிரியதர்ஷினி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

பரந்தாமன் யார்
திமுக கோட்டையாக கருதப்படும் எழும்பூரில் கடந்த. 2016 தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட ரவிச்சந்திரன் 55 ஆயிரத்து 060 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த முறை திமுக சார்பில் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் பரந்தாமன் போட்டியிடுகிறார். திமுக வழக்கறிஞர் அணியைச்சேர்ந்த இவர், கடந்த தேர்தலில் பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்த முறை எழும்பூரில் போட்டியிடுகிறார்.

தேமுதிக
கடந்த 2011ம் ஆண்டு நடந்த தேர்தலை எடுத்துக்கொண்டால் இங்கு தேமுதிக வெற்றி பெற்றது. தேமுதிக சார்பில் நல்ல தம்பி என்பவர் வென்றிருந்தார். அதிமுக இதுவரை வெற்றிபெறாத தொகுதி என்றால் அது எழும்பூர் தொகுதி தான். எழும்பூர் தொகுதியில் 2011ல் வென்ற அனுபவத்தில் அமமுக கூட்டணி தேமுதிக கேட்டு வாங்கி உள்ளது. தேமுதிக சார்பில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் பிரபு இத்தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் கடந்த 2016 தேர்தலில், மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.

பரிதி இளம்வழுதி
அதிமுக கூட்டணியை பொறுத்தவரை தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் ஜான்பாண்டியன், 20 ஆண்டுகளுக்கு முன்பாக, 2001 தேர்தலில் இதே எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டவர். அப்போது வெறும் 84 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் பரிதி இளம்வழுதியிடம் தோல்வி அடைந்தார். 20 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் திமுகவை எதிர்த்து களமிறங்கி உள்ளார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் வேட்பாளர் கீதாலட்சுமி இங்கு போட்டியிடுகிறார். இவர் சந்திக்கும் முதல் தேர்தல் இது. மக்கள் நீதி மய்யம் வேட்பாளரான பிரியதர்ஷினி போட்டியிடுகிறார்.2019 ல் நடந்த இடைத்தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு இருபதாயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தார். . இவருக்கு இந்த தொகுதி புதிது. இவர்களில் யார் வெல்வார்கள் என்பது மே 2ம் தேதி தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications