விஜய் அதிக வாக்குகள் வாங்கினால்.. அது திமுகவுக்கு லாபம்.. சொல்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்!
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். 2016ல் வாக்குப்பதிவின் போது 64 லட்சம் வாக்குகள் அதிகரித்திருந்ததாகவும், அது ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்து முடிந்த நிலையில், தவெகவின் அரசியல் வருகை பல்வேறு கணிப்புகளை உருவாக்க காரணமாக அமைந்துள்ளது. நகரப் பகுதிகளில் மட்டுமல்லாமல் கிராமப் பகுதியிலும் தவெகவுக்கு பொதுமக்கள் வாக்களித்துள்ளதாக பார்க்கப்படுகிறது. மொத்தமாக 85.15% வாக்குகள் பதிவாகி இருக்கிறது.

அதாவது தமிழ்நாட்டில் 2021 தேர்தலை ஒப்பிடும் போது, கூடுதலாக 20 முதல் 25 லட்சம் வரையிலான வாக்குகள் பதிவாகி இருக்கிறது. இந்த புதிய வாக்குகள் மட்டுமல்லாமல் 3வது அணி பலமாக அமைவது யாருக்கு லாபம் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேசுகையில், 2016ல் அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தது.
அந்த தேர்தலில் 64 லட்சம் வாக்குகள் அதிகரித்தது. 2014ல் ஜெயலலிதாவுக்கே தண்டனை அளிக்கப்பட்ட போதும், ஆட்சி மீதான அதிருப்தி இருந்த போதும், அதிமுக ஆட்சியை தொடர்ந்தது. அப்போது 4 முனைப் போட்டி உருவாகியது. இதன் மூலமாக எப்போது 4 முனைப் போட்டி உருவானாலும், அது ஆளுங்கட்சிக்கு தான் லாபம். என்னுடைய கணிப்புப்படி, ஒருநாளும் தொங்கு சட்டசபை அமையாது.
திமுக 150 முதல் 180 இடங்கள் வரை வெல்லலாம். விஜய் கூடுதலாக வாக்குகளை பெற்றால், திமுக 200 இடங்கள் வரை கைப்பற்றும். பதிவான வாக்குகள் கூடும் போது, 4 கட்சிகளுமே களத்தில் பணியாற்றி இருப்பார்கள். இங்கே சதவிகித கணக்கை விடவும், சீட்டு கணக்கு முக்கியம். விஜய், சீமான் ஆகியோர் எதிர்பார்க்காததை விட அதிக வாக்குகளை பெற்றால், அது திமுகவுக்கு சாதகமாக இருக்கும்.
விஜய்யால் சோசியல் மீடியா மிகவும் ஆக்டிவாக இருந்தது. விஜய் 50 லட்சம் வாக்குகளை பெற்றால், அவர் 10% வாக்குகளை பெற முடியும். 20% வாக்குகள் இருந்தால் தான், அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் பெற முடியும். கடந்த முறை திமுக கூட்டணி 46% வாக்குகளை பெற்றது. இம்முறை 40% திமுக கூட்டணி கைப்பற்றும் என்று வைத்து கொள்வோம்.
இம்முறை அந்த சதவிகிதத்தை எட்ட திமுகவுக்கு குறைந்த வாக்குகளே போதுமானது. புதிய வாக்குகளை நான் விஜய்க்கு மட்டுமே செல்வதாகவே கருதி, என் கணிப்பை வெளியிட்டுள்ளேன். புதிய வாக்குகளை விஜய் கைப்பற்றினால், அதுதொடர்பாக அதிமுக தான் கவலைப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications