கண்ணாமூச்சி ஆடும் தங்கம்! விலை இனி எப்படி இருக்கும்? சர்வதேச நிதி நிறுவனம் கணிப்பு
சென்னை: சமீபத்திய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்றும், நேற்று முன்தினமும் தங்கம் விலை குறைந்திருந்தது. அவ்வளவுதான் விலை அப்படியே குறைந்துவிடும் என்று பலரும் நம்பிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் தங்கம் விலை எப்படி இருக்கும்? என்பது குறித்து அமெரிக்காவை சேர்ந்த பிரபல நிதி சேவை நிறுவனமான ஜேபி மோர்கன் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
அதாவது, "JP மோர்கன் ஆய்வாளர்கள், 2026 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டிற்குள் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சராசரியாக 5,055 டாலரை எட்டக்கூடும்" என கணித்துள்ளனர். ஒரு அவுன்ஸ் என்பது 31.1 கிராம் ஆகும். சவரன் கணக்கில் பார்த்தால், 3.8 சவரனாகும். தோராயமாக 4 சவரன் என்று சொல்லலாம். இது ரூ.3.72 தொடங்கி ரூ.4 லட்சம் வரை விற்பனையாகிறது. இது அடுத்த ஆண்டு ரூ.4.43 லட்சமாக அதிகரிக்கும் என்று ஜேபி மோர்கன் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

2026 ஆம் ஆண்டில் ஒவ்வொரு காலாண்டிலும் சுமார் 566 டன்கள் வரை முதலீட்டாளர்கள் மற்றும் மத்திய வங்கிகள் தங்கத்தை கொள்முதல் செய்யும் என வங்கிகள் மதிப்பீடு செய்திருக்கின்றன. இந்த மதிப்பீடுகளை அடிப்படையில்தான் தங்கத்தின் விலை உயரும் என மோர்கன் ஆய்வாளர்கள் கணித்திருக்கிறார்கள். "இந்த ஆண்டுக்கான எங்களது முதலீட்டுத் தேர்வில் தங்கமே முதலிடத்தில் உள்ளது. ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கத் தொடங்கும் சூழலில், தங்கத்தின் மதிப்பு மேலும் அதிகரிக்கும்" என்று JP மோர்கனின் தலைவர் நடாஷா கனெவா குறிப்பிட்டார்.
ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு, பணவீக்கம் மற்றும் பொருளாதார தேக்க நிலை குறித்த கவலைகள், ஃபெடரல் வங்கியின் சுதந்திரம் தொடர்பான அச்சங்கள் மற்றும் பரவலான பண மதிப்பிறக்கக் காப்பீடு போன்ற காரணிகளின் கலவை, தங்கத்தின் மதிப்பை உயர்த்தும் என்று சொல்லப்படுகிறது.
அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும் போது தங்கத்தின் மதிப்பு அதிகரிக்கும். சீனா முன்னெப்போதும் இல்லாத அளவில் தங்கள் வசம் உள்ள அமெரிக்க டாலரை வேகமாக சந்தைக்கு கொண்டு வந்திருக்கிறது. இதனால் மற்ற நாடுகளும் அமெரிக்க டாலரை விற்க தொடங்கியுள்ளன. டாலர் மலிவாக கிடைப்பதால், அதன் மதிப்பு சரிய தொடங்கியிருக்கிறது. எனவே பலரும் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியிருக்கிறார்கள். எதிர்காலத்தில் பிரிக்ஸ் நாடுகள் சொந்த கரன்சியில் வர்த்தகம் மேற்கொள்ளும். எனவே, டாலரின் தேவையும் மதிப்பும் மேலும் சரியும். இதனால் தங்கத்தின் விலை உயரும்.
ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு தங்கத்தின் விலையில் ஏற்பட்ட விரைவான உயர்வை, சந்தை இப்போது சீர்செய்து வருகிறது. விலை இவ்வளவு வேகமாக உயர்ந்ததால் நீங்கள் அச்சத்தில் உறைந்திருப்பது இயல்புதான். இது மிகவும் தெளிவான கதை - நிறைய வாங்குபவர்கள் இருக்கிறார்கள், ஆனால் விற்பவர்கள் இல்லை. எதிர்வரும் 2028 ஆம் ஆண்டிற்குள் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 6,000 டாலராக உயரும்.
தங்கத்தை பல ஆண்டு கால முதலீடாகவே பார்க்க வேண்டும். நடப்பு ஆண்டில் தங்கம் பலமுறை சாதனை உச்சங்களை எட்டியுள்ளது. திங்களன்று ஒரு அவுன்ஸ் தங்கம் 4,381.21 டாலரை எட்டி, 57% அதிகரிப்புடன், 1979 ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகச் சிறந்த ஆண்டு செயல்திறனைப் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications