எடப்பாடி, ஓபிஎஸ் பயணிப்பது அண்ணா வழியிலா, அண்ணாமலை வழியிலா..? கேட்கிறார் கே.சி.பழனிச்சாமி
சென்னை: அதிமுகவின் ஓ பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் அண்ணா வழியில் பயணிக்கிறார்களா இல்லை அண்ணாமலை வழியில் பயணிக்கிறார்களா என முன்னாள் அதிமுக எம்பி கே சி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதா தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு நீண்ட நாளாகியும் அதன் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில் அந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முன் தினம் திருப்பி அனுப்பினார்.
இதுகுறித்து முடிவெடுக்க தமிழக அரசு சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. இந்த கூட்டத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் கலந்து கொண்ட நிலையில் அதிமுகவும் பாஜகவும் அக்கூட்டத்தை புறக்கணித்துள்ளன.
நீட் தேர்வு எதிர்ப்பில் அதிமுக ஒரே முடிவு... ஆளுநர் தன் பணியை செய்துள்ளார் - ஓபிஎஸ் கருத்து
கே சி பழனிச்சாமி
இதுகுறித்து முன்னாள் அதிமுக எம்பி கே சி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில் ஜெயலலிதா முன்னெடுத்த நீட் எதிர்ப்பு போராட்டம், இன்று அதே கருத்தை வலியுறுத்தி நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை பா.ஜ.க. வழியில் அதிமுக புறக்கணித்தது சரியா? உள்ளாட்சித் தேர்தல் களத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் பா.ஜ.க.வை எதிர்த்து களம் காணும் போது, பா.ஜ.க. வழியில் அ.தி.மு.க என்பது முழுமையாக ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் தங்களது அடிமைத்தனத்திலிருந்து வெளியேறவில்லை என்பதைக் காட்டுகிறதா?
பாஜக
களத்தில் நிற்கும் வேட்பாளர்கள் தி.மு.க.வையும், பா.ஜ.க.வையும் எதிர்த்து அல்லவா நாம் வெற்றி காண வேண்டும். நீட் விவகாரத்தில் தி.மு.க., மற்றும் பா.ஜ.க.வின் தவறுகளை முன்னிறுத்தி, நீட் விலக்கு பெற ஜெயலலிதா எடுத்த முயற்சிகள், அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு போன்றவற்றை முன்னிறுத்தி ஆளச் சிறந்த கட்சி அ.தி.மு.க. என்று பட்டியலிடுவது தானே அ.தி.மு.க. வேட்பாளர்களின் கள வெற்றிக்கும், அ.தி.மு.க.வின் எதிர்காலத்திற்கும், மீண்டும் ஆளுகிற வாய்ப்பை அ.தி.மு.க.விற்கு பெற்றுத்தருவதற்கும் சரியான முடிவாக இருக்கும்.
ஓபிஎஸ்
எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ். செய்கிற தவறால் தேர்தல் களம் பா.ஜ.க. v/s தி.மு.க. என்ற இந்துத்துவா, திராவிட கருத்தியலாகத் தேர்தல் களம் அமைந்துவிடாதா? தவறான தலைவர்களைக் கொண்டிருந்தாலும், தி.மு.க. மற்றும் பா.ஜ.க. மீதான எதிர்ப்பில் என்றென்றும் ஒவ்வொரு அண்ணா தி.மு.க. தொண்டனும் உறுதியோடு இருக்கிறார்கள்.
விரைவில் சட்டசபை கூட்டத் தொடர்?
தொண்டர்களின் அந்த எண்ணத்தை பிரதிபலிக்காத தலைமை, விரைவில் புறக்கணிக்கப்படும் என்கிற உறுதியில் களம் காணும் அ.தி.மு.க. வேட்பாளர்கள்! என்று கே சி பழனிச்சாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நீட் விலக்கு விவகாரத்தில் மீண்டும் தீர்மானத்தை கொண்டு விரைவில் சட்டசபை கூடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.