தர்மத்துக்கு வெற்றி.. இபிஎஸுக்கு ஆதரவான தீர்ப்பை வரவேற்ற ஓபிஎஸின் முன்னாள் வலதுகரம் கே.பி.முனுசாமி
சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது தர்மத்துக்கு கிடைத்த வெற்றி என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video
சென்னை வானகரத்தில் ஜூன் 23 ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக விவாதிக்க மாவட்டச் செயலாளார்கள் கூட்டம் கடந்த சில நாட்கள் முன் அதிமுக தலைமையகத்தில் கூட்டப்பட்டது.
அப்போது ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் எழுந்ததால் ஓ.பி.எஸ் - இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் கடும் வாக்குவாதம் செய்துகொண்டனர். அடுத்தடுத்த நாட்களில் இரு தரப்பினரும் கைகலப்பிலும் ஈடுபட்டனர்.

தலைவர்கள் சந்திப்பு
அதனை தொடர்ந்து நடைபெற்ற சர்ச்சைகளுக்கு பின்னர் இரு தலைவர்களையும் அவரவர் தரப்பு ஆதரவாளர்கள் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மூத்த நிர்வாகிகள் என பலர் எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்து ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

பொதுக்குழுவை தடுக்க முயற்சி
கடந்த 16 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ஒற்றைத் தலைமை என்பது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம், இரட்டை தலைமையே தொடர வேண்டும் என்று கூறினார். மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே அதிகம் இருப்பதால் எப்படியாவது பொதுக்குழு கூட்டத்தை நடக்கவிடாமல் தடுத்துவிட வேண்டும் என்பதை மனதில் வைத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு காய் நகர்த்தி வந்தது.

ஓ.பி.எஸ் கடிதம்
தற்போதைய சூழலில் அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டாம் என ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கும் கடிதம் எழுதினார். ஆனால், அந்த கடிதம் தங்களுக்கு கிடைக்கவில்லை என இபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அக்கட்சியின் தொண்டர்கள் பொதுக்குழுவில் கலந்துகொள்ளக்கூடாது என்று ஓ.பி.எஸ் இன்று கடிதம் எழுதினார்.

உயர்நீதிமன்றம் உத்தரவு
இதற்கிடையே அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. காரசாமாக நடந்த வாத பிரதிவாதங்களின் முடிவில் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது எனக்கூறி மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருக்கிறது.

கே.பி.முனுசாமி வரவேற்பு
இந்த தீர்ப்பை வரவேற்று எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு தர்மத்துக்கு கிடைத்த வெற்றி என்று வரவேற்றுள்ளார். தர்ம யுத்தம் நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த கே.பி.முனுசாமி அதன் பின்னர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications