"தமிழக காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்.." வந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ். அழகிரி இருந்தார். கடந்த 2019ஆம் ஆண்டில் சு திருநாவுக்கரசர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக கே.எஸ். அழகிரி நியமிக்கப்பட்டார்.

பொதுவாகக் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் நியமிக்கப்படுவார். அதன்படி பார்த்தால் கடந்த 2022ஆம் ஆண்டிலேயே புதிய காங்கிரஸ் தலைவர் நியமிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
கே.எஸ். அழகிரி: இருப்பினும், கே.எஸ். அழகிரியே காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் தொடர்ந்தார். 5 ஆண்டுகளாக அவரே காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து வருகிறார். 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் எனப் பல தேர்தல்களைக் காங்கிரஸ் எதிர்கொண்டு இருக்கிறது. இதற்கிடையே காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து கே.எஸ்.அழகிரி நீக்கப்பட்டு விரைவில் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று கடந்த பல மாதங்களாகவே தகவல் பரவி வந்தது.

இது குறித்து டெல்லி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் சிலரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் கூறப்பட்டது. குறிப்பாக செல்வப்பெருந்தகை மற்றும் சசிகாந்த செந்தில் ஆகியோரின் பெயர்கள் தான் அதிகம் அடிபட்டது. இதற்கிடையே இது குறித்த அறிவிப்பு ஒரு வழியாக வந்துவிட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றப்பட்டுவிட்டார்.
புதிய தலைவர்: கடந்த 2019 லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு எப்படி அறிவிப்பு வந்ததோ.. அதேபோலத் தான் இப்போதும் லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னால் இந்த அறிவிப்பு வந்துள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த தகவலைக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார்.
செல்வப்பெருந்தகை காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக இருந்த நிலையில், இப்போது அவர் காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமனம் செய்யப்பட்டதால் காங்கிரஸ் கட்சிக்கு புதிய சட்டமன்ற குழு தலைவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
செல்வப்பெருந்தகை: இது தொடர்பாகக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்படுகிறார். இதுநாள் வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகச் செயலாற்றிய கே.எஸ்.அழகிரிக்கு காங்கிரஸ் கட்சி நன்றி தெரிவித்து தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றப்பட்டுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications