போயும் போயும் பாஜகவுடன் கூட்டணி.. அன்புமணி ராமதாஸை வெளுத்து வாங்கிய காடுவெட்டி குரு மகள்!
சென்னை: அன்புமணி ராமதாஸுக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என்றால் போய் பாஜகவில் இணைந்து கொள்ள வேண்டியது தானே? ஏன் வன்னியர் மக்களை ஏமாற்றுகிறீர்கள்? என காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை காட்டமாகக் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் பாஜவுடன் கூட்டணி அமைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பாமக. பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜக - பாமக இடையிலான கூட்டணி ஒப்பந்தம் நேற்று காலை கையெழுத்தானது. தொடர்ந்து, சேலத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உடன் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், பாமக - பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளதற்கு மறைந்த காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வன்னியர் சங்க தலைவராக இருந்த காடுவெட்டி குருவின் மகள், குரு.விருதாம்பிகை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய குரு. விருதாம்பிகை, "சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக மற்றும் வன்னியர்களின் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இருக்கும் பாஜவுடன் பாமக கூட்டணி அமைத்து இருப்பது ஏற்கத்தக்கது அல்ல. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் கலவரம் ஏற்படும் என்று தற்குறித்தனமாக கூறும் அண்ணாமலை தலைமையிலான பாஜவுடன் கூட்டணி வைப்பதால் வன்னியர் மக்களுக்கு என்ன பயன்?
ராமதாஸ் தன்னுடைய அன்பு மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என்றால் தந்தையும் மகனும் வேண்டுமென்றால் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கொள்ள வேண்டியதுதானே? ஏன் என் பின்னாடி வன்னியர் சமூகம் உள்ளது என வன்னிய மக்களை ஏமாற்றுகிறீர்கள்?
சமூக நீதி மற்றும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த எதிராக இருக்கும் பாஜக உடன் கூட்டணி வைக்கப்பட்டது சுயநலம். சமூக நீதி, இட ஒதுக்கீடுக்காக பாமக குரல் கொடுத்து வந்தது. ஆனால் இந்த நலன்களை பார்க்காமல், எதிராக இருக்கும் பா.ஜ.க வுடன் கூட்டணி அமைத்து இருப்பது அன்புமணியின் சுயநலம்.
அதிமுக உடன் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், திடீரென பா.ஜ.க உடன் கூட்டணி உறுதி செய்து இருப்பது கட்சியில் பிரதானமாக இருக்கும் வன்னியர் சமூகம் கூட எதுவும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. கூட்டணியில் எந்த அடிப்படையில், என்ன கோரிக்கை பேசினோம் என்பதை கூட அவர்கள் தெரிவிக்கவில்லை.
ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் நலன் பெற மட்டுமே கட்சியை மாற்றி இருக்கின்றனர். கட்சி உருவாக காரணமாக இருந்து உயிர்நீத்த குடும்பங்களுக்கு நிதி உதவியை கூட பாமக செய்யவில்லை. இந்த கூட்டணி முடிவு பல நிர்வாகிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வன்னியர் சமூக மக்களுக்கு நலம் செய்யும் கட்சிகளுக்கு தேர்தலில் ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்து பாமக கூட்டணியை தமிழக அரசியல் களத்தில் இருந்து அகற்றுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications