Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருணாநிதி 100: தமிழக அரசியலில் 80 ஆண்டுகாலம் அரசாட்சி செய்த திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு இன்று 100ஆவது பிறந்தநாள். கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் வாழ்க்கையில், தமிழக அரசியலில் சிறப்பாக கொடிகட்டிப்பறந்தவர். திமுகவில் சுமார் 50 ஆண்டுகள் தலைவராகவும், தமிழக அரசியலில் 80 ஆண்டுகள் கோலோச்சிய பெருமை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியவை.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளைதான் கருணாநிதி பிறந்த ஊர். கடந்த 1924ஆம் ஆண்டில் நாட்டு வைத்தியர் முத்துவேலர், அவரது மனைவியார் அஞ்சுகம் அம்மையாருக்கும் மூன்றாவது குழந்தையாக பிறந்தவர் தான் கருணாநிதி. இவரின் இயற்பெயர் தட்சணாமூர்த்தி.

தன்னுடைய ஆரம்பக் கல்வியை திருக்குவளையில் படித்தவர், அதன்பின் உயர்நிலைக்கல்வியை திருவாரூர் போர்டு உயர்நிலைப் பள்ளியில் படித்து முடித்தார். பள்ளிப்பருவத்திலிருந்தே படிப்பு, கவிதை, பேச்சாற்றல் என பன்முகத்திறமை கொண்டவராக இருந்துள்ளார். தான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது மேடையில் துவங்கிய பேச்சு, 80 ஆண்டுகாலம் தமிழக அரசியலையே புரட்டிப்போட்டுள்ளது.

kalaignar karunanidhi 100th birth anniversary: Tirukuvalai Muthuvelar Karunanidhi who ruled Tamil Nadu politics for 50 years

சிறிய வயதிலிருந்தே போராட்ட குணமும், ஆராய்ந்து பேசக்கூடிய கல்வியறிவும், ஏற்றத்தாழ்வுகளை விரும்பாதவராகவும், சிறிய வயது முதல் தன்னுடைய கொள்கையில் பிடிவாதமாகவும் இருந்துள்ளார். தன்னுடைய தகப்பனார் ஏற்பாடு செய்திருந்த இசைபயிற்சி வகுப்பில் ஏற்றத்தாழ்வுகளை உணர்ந்தவர், அங்கு முற்றிலுமாக செல்வதை தவிர்த்து விட்டார்.

1938இல் சென்னை மாகாண முதல்வராக இருந்த ராஜாஜி, இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்கி, ஆணையை வெளியிட்ட போது, தமிழகம் முழுவதும் நீதிக்கட்சி தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 7ஆம் வகுப்பு பயின்று கொண்டிருந்த கருணாநிதி, தமிழ்க்கொடியை கையில் பிடித்தவாறு, இந்தி திணிப்புக்கு எதிராக போராடி தன்னுடைய இந்தி ஆசிரியரிடமும், அடிவாங்கினார். இந்த இளம் சூரியன் தான் வருங்காலத்தில், தமிழகத்தையே ஆளக்கூடிய, இமாலய சூரியனாக உருவெடுக்கும் என்று பலருக்கும் தெரிந்திருக்காது.

தன்னுடன் படித்த மாணவர்களை இணைத்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினார். அதற்காக 'இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பு' என்ற இயக்கத்தையும் உருவாக்கி, தன் 16 வயதில் "மாணவ நேசன்" என்ற பத்திரிக்கையை துவங்கி நடத்தி வந்தார். இதுதான் தற்போதைய "முரசொலி" பத்திரிகை தோன்ற முக்கிய காரணமாக இருந்தது.

17 வயதில் தனது நண்பர்ளான க.அன்பழகன், இரா.நெடுஞ்செழியன், மதியழகன் உள்ளிட்டோரை இணைத்து, தமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற அமைப்பை உருவாக்கினார். இதுதான் தற்போதைய திராவிட இயக்கத்தின், முதல் மாணவர் அணியாக கருதப்படுகிறது. கடந்த 1953ஆம் ஆண்டில், கல்லக்குடி என டால்மியாபுரம் ரயில் நிலையத்திற்கு மீண்டும் பெயர் சூட்ட வேண்டும் என்று, தண்டவாளத்தில் தலைவைத்து போராடினார். இதுதான் கலைஞருக்கும், திமுகவிற்கு மிகப்பெரிய புகழைத்தேடித்தந்தது, அரசியலில் கருணாநிதி யார் என்றும் தெரியச்செய்தது.

1957ஆம் ஆண்டில் குளித்தலை தொகுதியில் திமுக சார்பாக முதன் முதலாக களமிறங்கி வெற்றியும் பெற்று, தமிழக சட்டசபைக்குள் நுழைந்தார். கடந்த 1957ஆம் ஆண்டு தி.மு.க. தேர்தலைச் சந்தித்தபோது கட்சியின் மூத்த தலைவர்களான அண்ணாதுரை, நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் வெற்றி வாய்ப்பை இழந்தனர். ஆனால், கருணாநிதி மட்டும் குளித்தலை தொகுதியில் வெற்றிப் பெற்றார். அடுத்து மாநகராட்சி தேர்தல் நடந்தது. அதில் தி.மு.க.வின் வெற்றிக்கு உறுதுணையாக கருணாநிதி இருந்தார். அதோடு தேர்தல் நிதியாக 11 லட்சம் ரூபாயை வசூலித்துக் கொடுத்தார்.

மாநகராட்சித் தேர்தல் வெற்றிக் கூட்டத்தில் கருணாநிதியைப் புகழ்ந்து பேசினார் அண்ணாதுரை. அப்போது, அண்ணாதுரை, நான் என் மனைவிக்கு நகை வாங்கக்கூட கடைக்குச் சென்றதில்லை. எனக்கென்றுகூட நான் நகை வாங்க நகைக்கடை ஏறியதில்லை. ஆனால், இன்று மதியம் வேகாத வெயிலில் ஊரெங்கும் அலைந்து கடையெங்கும் தேடி வாங்கி வந்தேன் ஒரு கணையாழி. அந்த கணையாழியை இந்த வெற்றியை ஈட்டித்தந்த என் தம்பி கருணாநிதிக்கு அணிவிக்கிறேன் என்றார். அந்த தங்க மோதிரத்தை கருணாநிதி தனது மரணம் வரைக்குமே கழற்றியதில்லை. கருணாநிதியின் உழைப்பை அங்கீகரித்தவர் அறிஞர் அண்ணா. தமிழ்நாட்டின் பாதிச்சரித்திரத்தை நான் எழுதிவிட்டேன். மீதியை என் தம்பி கருணாநிதி எழுதுவார்" என்று சொன்னதுதான் கருணாநிதிக்கு அண்ணா அளித்த மிகப்பெரிய அங்கீகாரம். அதை நிறைவேற்றிக்காட்டியவர் கருணாநிதி.

1961ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளராக நியமிக்கப்பட்டார். 1967ஆம் ஆண்டு தமிழக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். தமிழகத்தை 5 முறை முதல்வராக ஆட்சி செய்த பெருமை கருணாநிதிக்கே உண்டு, இவர் களமிறங்கிய 13 சட்டசபை தேர்தல்களிலும் வெற்றிபெற்று, கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பணிபுரிந்த பெருமை கலைஞருக்கு மட்டுமே உண்டு.

1969 ஆம் ஆண்டு திமுகவின் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் பதவியேற்றார். 1971ஆம் ஆண்டு 2ஆம் முறை தமிழக முதல்வராக பதவியேற்றார்
1989 ஆம் ஆண்டில் 3 ஆவது முறையாக தமிழக முதல்வரானார். 1996 ஆம் நான்காவது முறை முதல்வர் பதவி வகித்தார். 2006 ஆம் ஆண்டு ஐந்தாவது முறை தமிழகத்தில் முதல்வராக இருந்தார்

மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தனது ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு என மாற்றினார். சுதந்திர தினத்தன்று ஆளுநர் கொடியேற்றும் முறையை, முதல்வர்கள் கொடியேற்றலாம் என்ற புதுமையைத் தந்தவர். மூன்றாம் பாலினத்தவரை திருநங்கைகள் என்றும், விதவைப்பெண்களை கைம்பெண்கள் என்றும் உடல் ஊனமுற்றவர்களை மாற்றுத்திறனாளிகள் என்று அழைத்தவர்.

திமுகவில் சுமார் 50 ஆண்டுகள் தலைவராகவும், தமிழக அரசியலில் 80 ஆண்டுகள் கோலோச்சிய பெருமை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியவை. தமிழக மக்களாலும் திமுக தொண்டர்களாலும் கலைஞர் என அன்போடு அழைக்கப்பட்டவர், பொதுக்கூட்டத்தில் தொண்டர்களைப் பார்த்து "என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே" என்று அழைத்தால் எழும் கர ஒலி அடங்க சில நிமிடங்கள் ஆகும். திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி..சுருக்கமாக திமுக என்பது இவரது கட்சி பெயர் மட்டுமல்ல இவரது பெயரிலேயே இருக்கிறது. இவரது சாதனைகளை சொல்ல ஒரு நூற்றாண்டும் சில பக்கங்களும் மட்டுமே போதாது என்பதுதான் உண்மை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+