களவாணி-2 படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்.. சற்குணம் மகிழ்ச்சி
Recommended Video
சென்னை: நடிகர் விமல், ஓவியா நடிப்பில் உருவாகி உள்ள "களவாணி-2' திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகர் விமல், நடிகை ஓவியா, கஞ்சா கருப்பு, சூரி, சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான களவாணி படம் பெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை சற்குணம் இயக்கி இருந்தார்.
இந்நிலையில் "களவாணி-2' என்ற பெயரில் மீண்டும் விமல், ஓவியாவை வைத்து இயக்குனர் சற்குணம் புதிய படத்தை இயக்கி வந்தார். இந்த படமும் ரிலீஸ்க்கு தயாரானது.
தடை கேட்டு வழக்கு
"களவாணி-2' திரைப்படம் வரும் மே 4-ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிப்பும் வெளியானது. இந்த நிலையில் ஸ்ரீதனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
நீதிமன்றம் தடை
அந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், "களவாணி-2' படத்தின் விநியோக உரிமையை மெரீனா பிக்சர்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கி இருந்தோம். ஆனால், தற்போது இந்தத் திரைப்படத்தை வர்மான்ஸ் புரொடக்சன் நிறுவனம் சார்பில் வெளியாக உள்ளது. இதனால் எங்களுக்கு பெரும் அளவில் நஷ்டம் ஏற்படும். எனவே, "களவாணி-2' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டு இருந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் "களவாணி-2' படத்தை வெளியிட தடை விதித்தது.
சற்குணம் முறையீடு
இந்த நிலையில், படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என வர்மான்ஸ் புரொடக்சன் சார்பில் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஏ.சற்குணம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், " நான் இயக்கிய களவாணி' வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து அதே நடிகர், நடிகைகளைக் கொண்டு "களவாணி-2' திரைப்படத்தை இயக்கி தயாரித்து உள்ளேன். இந்த வழக்கைத் தொடர்ந்தவருக்கும் இந்தத் படத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. நீதிமன்றத்தில் தவறான தகவலைக் கூறி தடை உத்தரவு வாங்கி உள்ளார்கள்
தடை நீங்கியது
எனவே "களவாணி-2' படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வர்மான்ஸ் புரொடக்சன் சார்பில் வழக்குரைஞர் ஆர்.சுதா ஆஜராகி வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, "களவாணி-2' திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.