திமுகவுடன் 25 ஆண்டு ஒப்பந்தம்; சாடிய எடப்பாடி! இல்லை 250 வருட ஒப்பந்தம்; செல்வப்பெருந்தகை பதிலடி!
சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 57 பேர் உயிரிழந்த நிலையில், திமுக அரசை எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். அப்போது மறைமுகமாக காங். கட்சியை அவர் சாடியிருந்தார். அதற்குப் பதிலடி கொடுத்துள்ளார் செல்வப்பெருந்தகை. இந்தச் சர்ச்சை இப்போது எடப்பாடிக்கும் செல்வப்பெருந்தகைக்கும் இடையேயான யுத்தமாக மாறியுள்ளது.
கள்ளச்சாராயத்தைக் குடித்து 57 பேர் பலியானதைக் கண்டித்து அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதில் கருப்பு சட்டையுடன் அதிமுகவின் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த உயிரிழப்புக்குக் காரணமான முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருந்தார். அவர் அளித்த பேட்டியில் திமுகவுடன் கடந்த 25 ஆண்டுகளாக ஒப்பந்தம் போட்டுள்ள காங்கிரஸ் கட்சியால் தனித்துச் செயல்பட முடியாது என்று விமர்சனம் செய்திருந்தார்.

இதன் மூலம் திமுக Vs அதிமுக என்ற சண்டை இப்போது அதிமுக Vs காங்கிரஸ் என்று மாறியுள்ளது. ஆளும் கட்சிக்கு ஆதரவாகக் காங்கிரஸ் செயல்படுகிறது என்பது எடப்பாடி தரப்பு வாதமாக உள்ளது. இது குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, "திமுகவுடன் காங்கிரஸ் கட்சி 25 ஆண்டுகாலம் ஒப்பந்தம் போட்டுள்ளது.
ஆகவே, அந்தக் கட்சி கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் பற்றி திமுகவுக்கு ஆதரவாகத்தான் பேசமுடியும். அந்தக் கட்சிக்கு தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லை. காங்கிரஸ் என்பது தேசிய கட்சி. அது நூற்றாண்டு கால பழமையான கட்சி. அந்தக் கட்சி திமுகவுடன் 25 ஆண்டுகாலம் ஒப்பந்தம் போட்டுள்ளதால், இதை எல்லாம் எப்படி எதிர்த்துப் பேச முடியும்? 25 ஆண்டுகாலம் திமுக கூட்டணியில் தொடருவோம் என்று அவர்களே சொல்லி இருக்கிறார்கள். அப்படி 25 ஆண்டுகாலம் கூட்டணியில் தொடர இருப்பவர்கள் எப்படி திமுக ஆட்சியை விமர்சிப்பார்கள்? திமுக என்ன சொல்கிறதோ அதைத்தான் காங்கிரஸ் கட்சியால் பேச முடியும். அந்தக் கட்சியால் தன்னிச்சையாகப் பேசவே முடியாது" என்று கூறியிருந்தார்.
அதற்கு காங். மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, " 25 வருடங்கள் இல்லை. 250 வருடங்கள் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி ஒப்பந்தம் போட்டாலும் தவறில்லை. கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சி கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளது. காவல்துறையைக் கண்டித்து கூட்டத்தில் பேசி இருக்கிறோம். முதலமைச்சர் ஸ்டாலினோ அல்லது திமுக அமைச்சர்களோ இந்த மரணங்களை நியாயப்படுத்தவில்லை. அப்படி உள்ளபோது இதை வைத்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்யப் பார்க்கிறார். அரசு நிர்வாகம் சரியில்லை என்று சொல்லப் பார்க்கிறார். அரசு காவல்துறை அதிகாரிகளை இடைநீக்கம் செய்துள்ளது. அந்தக் காவல்நிலைய இன்ஸ்பெக்டரை இடை நீக்கம் செய்துள்ளது. அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இல்லை.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஆட்சியிலிருந்த காலத்தில் குறைந்தது வரிசையாக 20 பேர் இறந்துள்ளனர். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் அந்த விவரம் உள்ளது. மகாத்மா காந்தி பிறந்த மண் குஜராத். எந்தக் காலத்திலும் அங்கே மது என்பதே கிடையாது. ஆனால், மோடி ஆட்சியிலிருந்த காலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 200க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். சமீபத்தில் இப்போது கூட இறந்துள்ளார்கள். கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் துயரமானது. அதை நியாயப்படுத்தவே முடியாது. அதற்காக எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஸ்டாலினை ராஜினாமா செய்யச் சொல்கிறார்.

அப்படி என்றால், ஜெயலலிதா ஆட்சியில் 2001 ஆம் ஆண்டு பண்ருட்டியில் 50க்கும் மேற்பட்டவர்கள் கள்ளச்சாராயம் அருந்தி இறந்தார்களே? 30 பேருக்கு பார்வையே பறிபோனதே? அதே ஆண்டில் கொரட்டூர் ரெட் ஹில்ஸ் பகுதியில் இதே மாதிரி சம்பவம் நடந்துள்ளது. அம்பத்தூரில் நடந்துள்ளது. அப்போது ஜெயலலிதா ராஜினாமா செய்தாரா? ஏன் செய்யவில்லை? எடப்பாடி பழனிசாமிக்கு இது தெரியாதா?" என்று எதிர்க்கேள்வி வைத்துள்ளார்" என்று கிடுக்குப் பிடி கேள்வியை முன்வைத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு மாநிலத் தலைவராக செல்வப்பெருந்தகை பதவியேற்றது முதல் மறைமுகமாக திமுக மீது விமர்சனங்களை வைத்து வந்தார். சமீபத்தில் கூட தமிழ்நாட்டில் இன்னும் எத்தனைக் காலம்தான் பிறரைச் சார்ந்து இருக்கப் போகிறோம்? என்று அவர் பேசியதற்கு அவரது கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ் போன்றவர்களே மாற்றுக் கருத்தை முன்வைத்திருந்தனர். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு ஸ்டாலின் தான் காரணம் என இளங்கோவன் கூறி இருந்தார். மேலும் ஆசைப்படலாம் அது பேராசையாக மாறிவிடக் கூடாது என்று மறைமுகமாக செல்வப்பெருந்தகையை எச்சரித்திருந்தார்.












Click it and Unblock the Notifications